எல்லை மீறும் புகழ்ச்சி வியாபாரிகளிடம், எச்சரிக்கை தேவை!

கலைஞர் பார்வைக்கு...

அண்ணா நூற்றாண்டில் திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளை கலைஞருக்கு பெரியார் விருது வழங்கி சிறப்பித்திருப்பது மிகச் சிறப்பான - மகிழ்ச்சியான முடிவு என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. நீண்ட நெடிய திராவிடர் இயக்க வரலாற்றில் பயணித்த மூத்த தலைவர் கலைஞர்; பள்ளிப் பருவத்திலே அவர் தொடங்கிய கொள்கைப் பயணம் - பேச்சாளராக, எழுத்தாளராக, நாடக நடிகராக, போராளியாக தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு விதித்திட்டு, வளர்த்த உழைப்பாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதல்வராக, தி.மு.க. தலைவராக இந்த முதுமையிலும் தொடர்கிறது. தமிழகத்தின் சமூக வரலாற்றோடு இணைந்து நிற்கும்; பெரியார் விருது பெறும் முழுத் தகுதியும் பெற்ற முதன்மையான தலைவர்.
பெரியார் எனும் பெரும் புரட்சியாளர் தமிழகத்தின் வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர்; சுயமரியாதைப் புரட்சியைத் தொடங்கி வைத்தவர் அவர் தான்; அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினம் அவரால் தலை நிமிர்ந்தது. உரிமைக்குப் போர்க்கொடி உயர்த்தியது. ஆனாலும் பெரியார் தொடங்கிய அந்த சுயமரியாதை புரட்சிப் பயணம் - இன்னும் நெடுந்தூரம் கடக்க வேண்டி யுள்ளது என்பது உண்மை. இடையூறுகளும், முட்டுக்கட்டைகளும் பின்னடைவுகளும் சவால் களாக வந்து நிற்கின்றன.
இந்த நிலையில் சிலைகளும், விருதுகளும், பாராட்டுகளும், பெயர் சூட்டல்களும், பெரியாரின் சுயமரியாதை உணர்வுகளை ஊட்டக் கூடிய குறியீடுகளே தவிர, அவைகளே சமூக மாற்றங்களைக் கொண்டு வந்துவிடாது. இவை எல்லாம் கலைஞர் அறியாதவை அல்ல.
பெரியார் உருவாக்கிய சுயமரியாதைப் புரட்சி தமிழகத்தில் உருவாக்கியுள்ள தாக்கம் எத்தகையது என்ற கேள்விக்கு சரியான சமூகத்தைப் பற்றிய மதிப்பீடும், மாற்றங்களைப் பற்றிய புரிதலும் அவசியமாகிறது. சென்னையில் பெரியார் திடலில் கி.வீரமணி, சமூகநீதி வழங்கும் விழாவில் பேசிய கலைஞர் - பெரியார் உருவாக்கிய மாற்றத்தை மிகச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்.
“இன்றைக்கு உங்களால் போற்றப்படுகிற தலை வனாக இருக்கிறேன்; உங்களால் அன்பு பாராட்டப்படுகிற தலைவனாக இருக்கிறேன்; ஆனால் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த நிலைமைக்கு நான் வருவதற்கு காரணம், நம்முடைய கருத்துகள், பகுத்தறிவு எண்ணங்கள், பெரியாரால் போதிக்கப்பட்ட அந்தச் சுயமரியாதைச் சுடரொளி. அதுதான் இன்றைக்கு என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கின்றது.”
பார்ப்பனிய வர்ணாஸ்ரம சதியின் கொட்டத்தை அடக்கி, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போர் வேர் பிடிக்கக்கூடிய அளவுக்கு, மண்ணை பக்குவப்படுத்தியதுதான், பெரியாரின் மகத்தான சாதனை; இது சாதாரணமான புரட்சி அல்ல. இந்தப் பின்னணியில் சில கசப்பான உண்மை களையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. திருச்சியில் நடைபெற்ற விருது வாங்கும் விழாவில், பெரியார் விருது பெற்ற கலைஞருக்குப் புகழாரம் சூட்டுவதில் சில தலைவர்கள் கடுமையான போட்டிக் களத்தில் நின்றதை நாட்டு மக்கள் பலரும் தொலைக் காட்சியில் பார்த்தனர். அந்தப் புகழரையாளர்கள் உதிர்த்த மொழிகள் சமூகத்தைப் பற்றிய புரிதலோ, கவலையோ இல்லாமல் புகழ்ச்சியையே கேலிக்குரிய தாக்குவதாக இருந்தன என்பதை நாம் சுட்டிக்காட்ட விழைகிறோம்.
ஒரு தலைவர் தனது புகழுரையில், பெரியாரைவிட கலைஞர் உயர்ந்து நிற்கிறார் என்றும்; பெரியார் உயர்சாதிக்காரர், கலைஞரோ மிகவும் பின் தங்கிய சாதிக்காரர். எனவே பெரியாரைவிட கலைஞர் மிஞ்சி நிற்கிறார் என்றும்; இலக்கியப் படைப்புகளில் அண்ணாவையும் கலைஞர் மிஞ்சியவர் என்றும் பேசினார். மற்றொரு தலைவரோ, கலைஞருக்கு விருது வழங்கக்கூடிய போதுமான தகுதி பெரியாருக்கு இல்லை என்ற பொருளில் - பெரியார் விருது கலைஞருக்கு போதுமானது அல்ல; பெரியார் விருதையும் தாண்டி நிற்கும் விருது கலைஞர் விருதாகவே இருக்கும் என்றும் , கலைஞருக்கு தகுதியான விருது கலைஞர் விருதாக மட்டுமே இருக்க முடியும் என்றும் அவர் பங்குக்கு பேசினார். பெரியார் நூல்களை அரசுடைமையாக்கி விடக் கூடாது என்ற ஒரே கவலையோடு கலைஞரைப் பாராட்டத் துடித்த கருஞ்சட்டைத்தலைவர் - அண்ணாவைவிட, சிறந்த தலைவர் கலைஞர் என்றும், இதை பெரியாரே கூறி யுள்ளார் என்றும், இன்னும் ஒரு படி மேலே போனார்.
இப்படி எதார்த்தங்களுக்கு மாறாக - கலைஞரை சங்கடத்துக்கு உள்ளாக்கும் புகழ்ச்சி வியாபாரிகள் - ஏற்கனவே கலைஞரை வசைமாறி பொழிவதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர்கள் தான் என்பதும் கலைஞர் அறியாதது அல்ல! இந்த அதீத புகழுரைகளால் கலைஞர் மனம் குளிர்வார் என்று, இவர்கள் கருதுவதே - கலைஞரைப் பற்றி இவர்கள் மிக பலவீனமான மதிப்பீடுகளைக் கொண்டுள்ளார்கள் என்பதை உணர்த்தி நிற்கிறது.
இவற்றுக்கும் கலைஞரின் பெரியார் திடல் உரையிலேயே பதில் இருக்கிறது. “நானே வளர்ந்தேன் - இவைகளையெல்லாம் நானே கற்றுக் கொண்டேன் - நானை இவைகளையெல்லாம் சிந்தித்தேன் - நானே புதிய ஞானோதயம் பெற்றேன் - எனவே இவைகளை யெல்லாம் சொல்லுகிறேன் என்று சொல்வது சுலபம்... ஆனால் எதிர்காலத்திலே வரலாறு எழுதுகின்றவர்கள் உண்மைகளைத்தான் எழுதுவார்கள். அந்த உண்மைகளை எழுதும் போது, அதிலே ஒரு பொய்யனாக நான் இருக்க விரும்பவில்லை” என்று கலைஞர் அருமையாக படம் பிடித்துள்ளார்.மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் போன்றவர்கள் காங்கிர° கட்சியிலே இருந்தாலும்கூட - தமிழ் நாட்டில் இன்று கிராமங்களில் தலைவிரித்தாடும் சாதி, மூடநம்பிக்கைகள், கட்டை பஞ்சாயத்துகளுக்கு எதிரான சமூகப் புரட்சியை கலைஞர் நடத்திட வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன் வைக்கிறார்கள். தங்கபாலு போன்றவர்கள் - சமூகநீதிக்கு நேர்ந்துள்ள ஆபத்துகளை பட்டிய லிட்டுக் காட்டுகிறார்கள்.
ஆனால், பெரியார் இயக்கத் தலைவர்களோ, பாராட்டுப் பத்திரங்களை வாசிப்பதற்கு மட்டுமே துடித்துக் கொண்டு நிற்கிறார்கள். பெரியாரையும் - அண்ணாவையும் மிஞ்சிய சாதனையாளர்கள் எவருமே இருக்கக் கூடாது என்று நாம் கூறவரவில்லை; அத்தகைய சாதனையாளர், புரட்சியாளர் வருவதுதான் பெரியார்-அண்ணா கொள்கைக்கான வெற்றியாக இருக்க முடியும். ஆனால், சமூகத்தில் அந்த நிலை வந்து விட்டதா என்பதே பரிசீலிக்கப்பட வேண்டிய கேள்வி. பெரியார் விருது பெற்றுள்ள கலைஞரின் பார்வைக்கு நாம் கவலையுடன் சில பிரச்சினைகளை அவரது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
• தமிழக கிராமங்களில் - சாதி வெறியும் தீண்டாமை யும் தலை விரித்தாடுகிறது. இரட்டைக் குவளைகள், இரட்டைச் சுடுகாடுகள் தொடருகின்றன; தீண்டப் படாத மக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்படுகிறது; சாதி மறுப்புத் திருமணங் களுக்கு பாதுகாப்பு இல்லை; சாதி வெறிக்கு கட்சித் தடைகள் ஏதுமில்லை; ஆதிக்கசாதியினர் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் சாதி வெறியில் ஒரே அணி தான். சாதி வெறிக்கோ, தீண்டாமைக்கோ, துணை போகும் கழகத்தினர் மீது - சாதி ஒழிப்பு பேசும் கழகங்கள் நடவடிக்கை எடுத்தாலே கிராமங்களில் பாதி சாதிக் கலவரங்கள் நின்று போகும் வாய்ப்பு உண்டு! தி.மு.கழகம், இதை ஏன் கண்டிப்பாக பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி.
• தமிழ்நாட்டில் - மதவெறி சக்திகள் தலைவிரித்தாடு கின்றன. பெரியாரைப் பற்றி இந்து முன்னணி - பா.ஜ.க. - மேடைகளில் எச். இராஜா போன்ற பார்ப்பனர்கள் கீழ்த்தரமாக பேசுகிறார்கள். பெரியார் இயக்கங்களின் கூட்டங்களில் கலவரம் செய்கிறார்கள். கோவையில் - இயக்குனர் சீமான் பேசிய பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் பெரும் கலவரத்தை நடத்தினர். சென்னைக்கு அருகே உள்ள போரூரில் தொடர்ந்து பெரியார் பிரச்சாரக் கூட்டங்கள் மதவெறியர்களால் குலைக்கப்படுகின்றன; மத வெறி சக்திகளுக்கு காவல்துறை ஆதரவாகவே செயல்படுகிறது.
• பெரியார் திராவிடர் கழகம் - மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்கள் நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது. திராவிட இயக்க தமிழர் பேரவை - தி.மு.க.வின் ஆதரவு அமைப்பு தான். அந்த அமைப்பின் சார்பில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பிரச்சாரக் கூட்டம் நடத்த அனுமதி கேட்ட போது, காவல்துறை மறுத்து விட்டது; அதற்கு காவல்துறை கூறிய காரணம் தான் விசித்திரமானது.
சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி தலைமை அலுவலகம் இருப்பதாலும், அதே பகுதியில் இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் தங்கியிருப்பதாலும், அனுமதி மறுக்கப்படுகிறது என்று காவல்துறை எழுத்து மூலம் பதில் தந்துள்ளது. மீண்டும் அண்ணா நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டும், காவல் துறை எழுத்துப்பூர்வமாக அண்ணா நூற்றாண்டு விழாவுக்கும் அனுமதி மறுத்துள்ளது.
• அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றுமாறு - அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் பிறப்பித்த அரசாணை இன்னும் உயிரோடு இருக்கிறது. ஆனால், அரசு அலுவலகங்களும், காவல் நிலையங்களும் - பஜனை மடங்களாகவே காட்சி அளிக்கின்றன.
• தமிழ் நாட்டில் அரசு அலுவலகங்களில் தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கான 20000 பதவிகள் பூர்த்தி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் படித்து வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலையில், இப்படி ஒரு அவலம் தொடருகிறது.
• இப்போது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் வேலை வாய்ப்புகளை - தனியார் துறையில் மட்டும் தான் பெற முடியும். பொதுத் துறை நிறுவனங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடுகளில் தனியார் துறைகளில் இடஒதுக் கீட்டை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதற்காகவே அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழு தனியார் துறை இடஒதுக்கீட்டையே கைகழுவ முடிவு செய்துவிட்டது. அறிவிப்பு வந்து 15 நாட்கள் ஓடி விட்டன. அரசு சார்பில் - எந்த எதிர்ப்பும் வரவில்லை. பார்ப்பனர்களுக்கு ஆதரவாக உ.பி.யில் ஆட்சி நடத்தும் முதல்வர் மாயாவதி கூட மாநிலத்தின் தனியார் தொழிற்சாலைகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை, சட்டப்பூர்வமாக்கியிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
• 17 ஆண்டுகாலமாக சிறையில் வாடிவரும் நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர், தங்களின் விடுதலையை கோரி நிற்கிறார்கள். ராஜிவ் கொலையில் நேரடி தொடர்புடைய பலரும் மரணமடைந்துவிட்டனர். வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு சட்டரீதியான நியாயங்களும், மாநில அரசுக்கு உரிமைகளும் இருந்தும்கூட கலைஞர் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா என்ற கேள்வியை வேதனையுடன் எழுப்புகிறோம்; கலைஞர் ஆட்சியிலே இவர்களுக்கு விடிவு கிடைக்காவிடில் - வேறு எந்த ஆட்சியில் கிடைக்க முடியும்? இதைப் பரிசீலிப்பதற்கு - தகுதியுள்ள ஒரே ஆட்சி கலைஞர் ஆட்சி தானே? அன்று தூக்கில் தொங்கிய மலேசியா கணபதிக்கு குரல் கொடுத்த கலைஞர், தோழர் தியாகு - புலவர் கலிய பெருமாள் உள்ளிட்டோரை, தூக்குத் தண்டனையிலிருந்து, காப்பாற்றிய கலைஞர், இன்று, பெரியார் குடும்பத்தின் பிள்ளை பேரறிவாளனுக்கு, நளினிக்கு - தோழர்களுக்கு பரிவு காட்ட வேண்டாமா?
• தமிழ்ச் செல்வன் - படுகொலைக்கு கண்ணீர் கவிதை வடித்து, உள்ளத்தின் உணர்வுகளை வெளிக்கொட்டினார் கலைஞர். பார்ப்பன சக்தி கள் உடனே மிரட்டின. அவர்கள் எதைச் செய் தாலும் மிரட்டவே செய்வார்கள். எந்தச் சூழலி லும் அவர்களின் ஆதரவுக் கரம் கலைஞரை நோக்கி நீளப் போவது இல்லை. ஈழத் தமிழர் களைக் கொன்று குவிக்கும் இலங்கை இராணு வத்துக்கு ஆயுதங்களை வழங்கி வரும் இந்திய அரசு - அவர்களின் ராணுவத்துக்கு உதவிட - இந்தியாவின் பொறியாளர்களையும் அனுப்பி வைத்துள்ள செய்தி அம்பலமாகியுள்ளது. எம்.கே. நாராயணன் - ‘இந்து’ ராம் - சுப்ரமணியசாமி - ஜெயலலிதா - இல.கணேசன் - இராம. கோபாலன் என்ற பார்ப்பன வட்டம், ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு எதிராக, தங்கள் முழு செல் வாக்கையும் பயன்படுத்தி வரும் நிலையில், கலைஞர் ஆட்சி, மவுனம் காக்கலாமா? உண்மை யான வன்மையான கண்டனத்தை எழுப்ப வேண்டாமா?
• அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் மகத்தான சமூகப் புரட்சியை தமிழக முதல்வர் கலைஞர் செய்து காட்டினார். பார்ப்பனர்கள் மீண்டும் உச்சநீதிமன்றம் போனார்கள். கோயில்களில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களை மீறக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து விட்டது. ஏற்கனவே கலைஞர் மிகவும் சாதுர்யமாக காய் நகர்த்துகிறார் என்று என்ன காரணத்தினாலோ கி.வீரமணிகள் எழுதினார்கள். அதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கை களை அரசு மேற்கொள்ளவில்லை.
• அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு 6 கோயில்களில் தொடங்கியது. அதில் அனைத்து சாதியையும் சார்ந்த 207 பயிற்சியாளர்கள் ஓராண்டு பயிற்சியையும் முடித்தனர். இப்போது என்ன நிலைமை? பயிற்சி முடித்து வெளிவந்து,. எந்த கோயிலிலும் அர்ச்சகராக நியமிக்க முடியாத நிலைக்கு, அவர்கள் உள்ளாகி விட்டனர். உச்சநீதிமன்றத்தில் தடையாணை இருப்பதால், நியமனம் செய்ய முடியாது என்று இந்து அறநிலையத் துறை கை விரித்து விட்டது. அனைத்து சாதியினரும், அர்ச்சகர் ஆகும் திட்டம் - மீண்டும் பெரியார் ‘இதயத்தில் தைத்த முள்ளாகவே’ மாறிவிட்டது.
• எல்லாவற்றிற்கும் மேலாக பெரியார் - அண்ணா வழி ஆட்சியில் பெரியார் விருது பெற்ற பிறகும் - கலைஞர் - பெரியார் நூல்களை நாட்டின் பொதுச் சொத்தாக அறிவிக்கத் தயங்கலாமா?
பெரியாரை - தனி உரிமையாக்கும் சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக இந்த வரலாற்றுக் கடமையை ஆற்றத் தவறலாமா? என்று கேட்கிறோம்.- இப்படி எத்தனையோ சமூகப் பிரச்சினைகள் சூழ்ந்து நிற்கின்றன. சிலவற்றை மட்டுமே பட்டிய லிட்டோம். இவை அனைத்தும் ஒரு ஆட்சியின் கொள்கை முடிவாலும், நிர்வாக முடிவாலும் செயல்படுத்தக் கூடியவைகள் தான்.
மக்கள் நலத் திட்டங்களில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது இந்த ஆட்சி; அதை எவரும் மறுக்க முடியாது. அதையும் தாண்டிய ஆழமான சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது முன்னுரிமைக்குரிய செயல்பாடு அல்லவா?இந்தப் பிரச்சினைகளில் கலைஞர் உரிய கவனம் செலுத்தி செயல்படும்போது, கலைஞருக்கு கிடைத்த பெரியார் விருது பெருமையுறும், கலைஞர் மேலும் பெருமை பெறுவார். கலைஞரின் புகழ் வரலாற்றில் பதிந்து நிற்கும்.
நிலைத்த புகழ் செயல்களில் தான் அடங்கியிருக் கிறது. மேடைப் புகழ்ச்சியாளர்களின் புகழாரங்களில் அல்ல என்பது கலைஞருக்கு தெரியாத ஒன்றா?
- ‘இரா’

‘பெரும் குழு’வின் ‘ஜால்ரா’ புரட்சி!

“ஏண்டா தம்பி, மலம் கழிக்கும்போது வெள்ளரிக்காய் தின்கிறாயே” என்று ஒரு பெரியவர் கேட்டதற்கு, “அது பற்றி உனக்கு என்ன? நான் இப்படியும் சாப்பிடுவேன்; அதில் தொட்டுக் கொண்டும் சாப்பிடுவேன்” என்று வீரத்துடன் பதிலளித்தானாம்! வீரமணியின் ‘விடுதலை’ ஏடு அந்த நிலைக்கு வந்துவிட்டது. ‘தினமணி’, ‘தினமலர்’ போன்ற பார்ப்பன ஏடுகள் பெரியாருக்கு எதிராக எழுதும்போதுதான் பெரியாரிய ஏடுகள் சீறி எழுந்து பதிலடி தருவது வழக்கம். இப்போது ‘விடுதலை’ ஏடு பெரியாருக்கு ஆதரவாக எழுதியதற்காக சீறிப் பாய்கிறது. பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று ‘தினமணி’ எழுதியிருப்பது - அதன் பார்ப்பன விஷமத்தைக் காட்டுகிறது என்கிறார், ஆஸ்தானப் புலவர் ‘மின்சாரம்!’
‘தினமணி’யின் கட்டுரையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று கட்டுரையைத் தொடங்கியவர் முடிக்கும் போது, “இவை எல்லாம் திராவிடர் கழகத்துக்கு அத்துப்படியானவையே என்பதை இலேசான புன்னகை யோடு இந்த அக்கப் போர்களை நிராகரிக்கிறோம்” என்று முக்கால் பக்கம் மாங்கு மாங்கு என்று எழுதி நிரப்பியப் பிறகு நிராகரிக்கும் முடிவுக்கு வருகிறார்.
அவர்கள் லேசான புன்னகையை தாராளமாக சிந்தட்டும். ஆனால், “பெரியார் நூல்களை பரப்பாமல் தடுப்பதற்கு தி.க. கடுமையாக களத்தில் இறங்கிப் போராடி வருகிறது. அம்பேத்கரின் ராமன் - கிருஷ்ணன் புதிர் நூலை அரசு வெளியிடக்கூடாது என்று மகாராஷ்டிராவில் - பா.ஜ.க., பெரும் கலவரத்தில் இறங்கியது. இங்கே, பெரியாருக்கு சொந்தம் கொண்டாடும் கட்சியே, அதைப் போன்ற பெரியார் நூல்களையெல்லாம், அரசு நாட்டுடைமை யாக்க அனுமதிக்க மாட்டோம். ரத்தம் சிந்தி தடுப்போம். தமிழ்நாட்டில் எவன் வெளியிடுவான் பெரியார் நூல்களை? பார்த்து விடுகிறோம் ஒரு கை; என்று மீசையை முறுக்கிக் கொண்டு கிளம்பி விட்டது. அப்பாடா! இனி நமக்கு தமிழ்நாட்டில் வேலையே இருக்காது போலிருக்கே” என்று லேசாகப் புன்னகைக்கும் புன்னகை நாயர்களைப் பார்த்து - பா.ஜ.க. பரிவாரங்கள் வாய்விட்டு சிரித்து - கும்மாளம் போடும்.
‘சிரியுங்கள்; சிரியுங்கள்; நீங்கள் என்னதான் சிரித்தாலும் - எங்களின் பெரியார் நூல்களை முடக்கும் பணியிலிருந்து திசை திருப்பவே முடியாது. நாங்கள் அடையாறு ஆலமரமாக நிற்கும் தமிழர் தலைவரின் நிழலில் வந்தவர்கள்!’ என்று அப்போதும் மின்சாரங்கள் பேனாவைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள்!
“ராமனை செருப்பாலடிக்க வேண்டும்; சூத்திரன் என்று சொல்லும் குழவிக்கல் சாமியை குப்புறத் தள்ளி துணி துவைக்கவேண்டும்” என்ற பெரியார் கருத்தை எல்லாம் அரசு வெளியிடுமா - இப்படி ஒரு கேள்வி! ஏன் வெளியிட்டால் என்ன, பிரளயம் அழிந்து விடுமா? அம்பேத்கர் பார்ப்பன எதிர்ப்பு கருத்துகளை மகாராஷ்டிர அரசு வெளியிடவில்லையா? அதுகூட இருக்கட்டும். நாட்டுடைமையாக்குவது என்றால் அரசு மட்டுமே வெளியிட வேண்டும் என்பது அதன் பொருள் அல்ல. வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் அனைவரும் வெளியிடலாம் என்பதுதான் அதன் பொருள்! இந்த அரிச்சுவடியைப் புரிந்து கொண்டு, அந்த லேசான புன்னகையை வீசுங்கள் அய்யா! “பார்ப்பன ஜெயலலிதாவிடம் எங்கள் தமிழர் தலைவர்தான் 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி - வேலை வாங்கினார்” என்று அன்றைக்கு ‘மாஞ்சி மாஞ்சி’ எழுதிய மின்சாரங்கள், இன்று ‘தினமணி’ பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கு என்று கேட்கும்போது மட்டும், குரலை மாற்றிக் கொள்வது ஏன்? தலைவர் சுருதி பேத புரட்டல்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் மின்சாரங்கள் பதில் சொல்வார்களா?
பெரியார் திராவிடர் கழகம் சிறு குழுவாம்! “இந்தச் சிறுகுழுவை பாராட்டுவதாலோ, அந்தக் குழுவுக்காக வக்காலத்து வாங்குவதாலோ எவ்வித இழப்பும் பார்ப்பனர்களுக்கு கிடையாது” என்று எழுதுகிறது மின்சாரம்! ஸ்ரீரங்கத்தில் இவர்களே வைத்த பெரியர் சிலையை மதவெறி சக்திகள் உடைத்தபோது - இந்த “சிறு குழு”வின் வலிமையை பார்ப்பனர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அப்போது மூலையில் முக்காடு போட்டு, பதுங்கிக் கொண்ட “தமிழர் தலைவர் தலைமையில் அணி வகுக்கும் பெரும்சேனை”யின் வீரமும், பார்ப்பனர்களுக்கு நன்றாக தெரியும்! இவர்களின் ‘பெரும் குழுவும்’, பெரும் பட்டாளமும் பார்ப்பனர்களை நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கும் “ஜால்ரா” புரட்சிகளை நாடு பார்த்து நகைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
பெரியார் நூல்கள் நாடு முழுவதும் மக்களிடையே பரவிடக் கூடாது என்பதற்காகவே பெரியார் இயக்கத்தை நடத்தி வரும் “கொள்கைக் குன்றுகள்” நாட்டு மக்கள் மத்தியில் சிரிப்பாய் சிரிப்பதை புரிந்து கொண்டு இந்த “இலசான புன்னகையாளர்கள்” பேனாவை தூக்குவது நல்லது!


72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு
திரிபுவாத திம்மன்கள் - யார்? (2)

“பெரியாரைப் பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும், சுயநல துரோகிக் கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம்” - என்று கடந்த 2008, செப்.30 ஆம் தேதி ‘விடுதலை’ ஞாயிறு மலரில் ஒரு கேள்விக்கு கி.வீரமணி பதிலளித்திருக்கிறார். திரிபுவாதிகளுக்கு அவர் அழகான சொற்றொடரை பட்டமாக வழங்கியுள்ளார்! அதற்கு நன்றி தெரிவித்து, “திரிபுவாதி திம்மன்கள்” பற்றிய இந்தத் தொடரைத் தொடருகிறோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு வழி செய்யும் சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் பெரியார் உயிருடன் இருக்கும்போதே கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் வழக்கு தொடரவே உச்சநீதிமன்றம் சட்டத்தை முடக்கும் தீர்ப்பை 14.3.1972 இல் வழங்கியது.
சூத்திர இழிவை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதால் பொங்கி எழுந்த பெரியார் 1972 முதல் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 19 வரை தனது பேருரைகளிலும், தலையங்கங்களிலும், கட்டுரைகளிலும் உச்சநீதிமன்றத்தைக் கடுமையாக சாடினார். 28.5.1972 இல் சென்னையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டைக் கூட்டினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அரசியல் சட்டத்தைத் திருத்தி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே பெரியார் வலியுறுத்தி வந்தார்.
“இந்திய அரசியல் சட்டம் என்பது சமுதாயத் தன்மையைப் பொறுத்தவரை மனுதர்மம் என்னும் பார்ப்பன உயர் வாழ்வுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் சட்டமாகவே பார்ப்பனராலேயே உண்டாக்கப்பட்ட சட்டமாகையால் அதை மாற்றியமைக்க வேண்டியது மிக மிக அவசியமானது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது” என்று அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் இழிவு ஒழிப்பு மாநாட்டு உரை, பெரியார் பேச்சு, தீர்மானங்கள், விடுதலை தலையங்கங்களையும் சேர்த்து ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் “கோயில் பகிஷ்காரம் ஏன்?” என்ற தலைப்பில் நூலாக 1972 இல் வெளியிடப்பட்டது. அதன் இரண்டாம் பதிப்பு 1982 இல் வெளி வந்தது.
11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 1993 இல் “அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்று சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்ட நூலில் - உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து பெரியார் கூறிய கருத்துகளும், பெரியார் காலத்தில் திராவிடர் கழகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. இதற்குப் பெயர் என்ன?
அது மட்டுமல்ல, மேற்குறிப்பிட்ட அதே வெளியீட்டில் 5.4.1972 அன்று பெரியார் சென்னை கடற்கரைப் பேருரையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டிருந்தது. அதில் அரசியல் சட்டத்தாலும், உச்சநீதிமன்றத்தாலும் நாம் நாதியற்றவர் களாக்கப்பட்டு விட்டோம் என்று பெரியார் பேசிய கீழ்க்கண்ட பகுதியை நீக்கிவிட்டு வெளியிட்டுள்ளார்கள். “இன்றுள்ள அரசியல் சட்டத்திடையே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினாலே நாம் நாதியற்றவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறோம். இதற்கு நாம் பரிகாரம் காண வேண்டும். அதற்காகவே மே 7 ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழக மாநில மாநாட்டினைக் கூட்டி, அதில் முடிவு செய்து, மக்கள் மத்தியில் நடைமுறைக்குக் கொண்டு வருவோம்.”
அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கண்டித்து, பெரியார் தெரிவித்த கருத்துகள் 1972 ஆம் ஆண்டில் “கோயில் பகிஷ்காரம் ஏன்?” என்ற தலைப்பில் நூலாக வெளி வந்தபோது இடம் பெற்ற பகுதிகள் வீரமணி காலத்தில் “அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்று தலைப்பிடப்பட்டு வரும்போது அதில் மட்டும் பெரியார் கருத்துகள் இருட்டடிக்கப்பட்டது ஏன்? அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடை ஏதும் விதிக்கவில்லை என்று, கி.வீரமணி தனது கருத்தை மாற்றிக் கொண்டதே இதற்குக் காரணம்.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கி.வீரமணி அவ்வப்போது வெவ்வேறு கருத்து வெளியிட்டு வந்திருக்கிறார்:
தந்தை பெரியார் வாழும் காலம் வரை அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பெரியார் கருத்தை வலியுறுத்தி வந்தார். அய்யாவுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் தலைமைக்கு வந்தபோதும் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தே திராவிடர் கழக சார்பில் முன்வைக்கப்பட்டது.
பிறகு எம்.ஜி.ஆர். முதல்வராக வந்த பிறகு இது பற்றி ஆராய நீதிபதி மகராசன் தலைமையில் 24.9.1979 இல் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரை 27.8.1982 இல் வெளியிடப்பட்டது. ஆகமப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகத் தடை ஏதும் இல்லை என்று குழு கூறியது. ஆனாலும், இக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசியல் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி மகராசன் கூறியிருந்தார். அரசியலமைப்போடு மோதுதலைத் தவிர்த்து, “பாதுகாப்பு வளையத்துக்குள் பதுங்கிக் கொள்ளும் குணாம்சத்தைக் கொண்ட வீரமணி, அரசியல் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பது மகராசனின் தனிப்பட்ட கருத்து என்று வியாக்யானம் செய்து, சட்டத்திருத்தம் செய்யாமலே மகராசன் .குழுவின் பரிந்துரையை அமுலாக்க முடியும் என்று பேச ஆரம்பித்து விட்டார். இவருக்கு வாதத்தை எடுத்துக் கொடுத்தவர் மறைந்த நீதிபதி கே. வேணுகோபால், வீரமணி தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டதால், ‘சட்டத்தைத் திருத்த வேண்டும்’ என்று பெரியார் தெரிவித்த கருத்துகள் கி.வீரமணி வெளியிட்ட நூலில் இருட்டடிப்புக்குள்ளாக்கப் பட்டன. வீரமணி தனது கருத்துக்கு ஏற்ப பெரியார் கருத்தை இருட்டடித்தார்.
இதிலே இன்னுமொரு புரட்டையும் வீரமணி செய்தார். 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கி.வீரமணி, உச்சநீதிமன்றத்தின் சட்டத்துக்கு புதிய வியாக்யானம் தரத் தொடங்கினார். அதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராக தடை விதிக்கவில்லை என்ற வியாக்யானம். தமிழக அரசு மகராசன் குழுவை நியமித்ததோ - 1979 ஆம் ஆண்டில். இதற்கும் ‘அறிவுசார் சொத்துரிமை’ கோர முடிவு செய்துவிட்ட கி.வீரமணி, ஒரு போடு போட்டார். தாம், இப்படி ஒரு கருத்தை கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆர். அரசு ஏற்றுக் கொண்டு மகராசன் குழுவையே நியமித்தது என்று கூறிவிட்டார். அதாவது, 1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?” என்ற நூலிலேயே இந்த ‘அறிவுசார் அபத்தங்களும்’ இடம் பெற்றுள்ளன!
அதன் பிறகு ‘கேரள தேவஸ்வம் போர்டு’ நிர்வாக உத்தரவின் மூலம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கியிருக்கும் ஆணையை எடுத்துக்காட்டி, கி.வீரமணி, அரசே நேரடியாக ஆகமப் பள்ளிகளைத் தொடங்கும் யோசனையை முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் முன் வைத்தார். மகராசன் குழு பரிந்துரை செய்ததோ, ஆகமப்பாடசாலைகளை அமைக்க வேண்டும் என்பதாகும். ஆனால் ஜெயலலிதா அறிவித்ததோ வேத-ஆகமப் பாடசாலைகளை அமைக்கும் திட்டம். ஆகமப் பாடசாலையில் வேதம் எதற்கு என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய வீரமணி, அதற்கும் திரிபுவாதம் செய்தார்.
“வேத ஆகமம் படிக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே என்றால், அது புதிதாக இப்போது ஏற்படும் நிலை அல்ல. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு முன்பிருந்த நிலைதான்” (ஆதாரம்: ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?’ நூல்) என்று வீரமணி சமாதானம் கூறினார். பழுத்த ஆத்திகவாதியான நீதிபதி மகராசன், வீரமணியைவிட முற்போக்காளராகவே இருக்கிறார். ஆகமப் பயிற்சிப் பள்ளியில் வேதம் கற்பிக்கத் தேவையே இல்லை என்றார் மகராசன். “பூசையை சமஸ்கிருதத்தில் தான் செய்ய வேண்டும்; தமிழில் செய்யக் கூடாது என்று ஆகமத்தில் எங்கும் சொல்லவில்லை” (மகராசன் குழு பரிந்துரை; தமிழ் அர்ச்சனை பற்றிய குறிப்பு; பத்திகள் 12, 13) என்று மகாராசன் அடித்துக் கூறினார். ஆனால், சமஸ்கிருத வேதத்தைக் கற்பிப்பதற்கு ஆதரவாக வாதாடினார் கி.வீரமணி! ஏன்? பார்ப்பன ஜெயலலிதாவின் ‘வேத ஆகமப் பாடசாலை’ அறிவிப்பை நியாயப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு; ஜெயலலிதாவின் ஆதரவைப் பெறத் துடிக்கும் அவரது ‘யுக்தி’ கொள்கையை தோற்றோடச் செய்து விட்டது.
மீண்டும் சட்டத்திருத்தம் செய்யப்படாமலே இப்போது கலைஞர் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு வந்தது! மரபுகளை மாற்றக் கூடாது என்றது உச்சநீதிமன்றம். தமிழக அரசு எதிர் வழக்காடவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிப் பள்ளிகளை தி.மு.க. ஆட்சி திறந்தது. கி.வீரமணி - தஞ்சை வல்லத்தில் கலைஞருக்கு பாராட்டு விழாவை நடத்தி முடித்தார். பெரியார் லட்சியம் நிறைவடைந்துவிட்டது என்று அறிவித்தார். இனி - கலைஞர் ஆட்சி செய்வதற்கு ஏதுவுமில்லை. எல்லாமுமே முடிந்துவிட்டது என்றார். இப்போது என்ன நிலை?
கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி ‘இந்து’ நாளேட்டில் அதிர்ச்சியான செய்தி வெளி வந்துள்ளது.
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சியை முடித்த அனைத்து சாதியைச் சார்ந்த மாணவர்கள் 207 பேரும் ஓராண்டு பயிற்சியை முடித்துவிட்டு, எந்தக் கோயிலிலும் பணி நியமனமின்றி தவிக்கின்றனர்; வேறு வேலைக்குப் போக வாய்ப்புகளைத் தேடுகிறார்கள்; காரணம் - உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு முடியும் வரை - இவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது என்று அரசு கூறிவிட்டது.
கலைஞர் சாதுர்யமாக காயை நகர்த்தியதாக புகழாரம் சூட்டிய கி.வீரமணி, இப்போது வாய்திறக்கவில்லை. கலைஞரைப் பாராட்டுவதற்கான ‘யுக்திகளுக்காக’ கொள்கைகளைப் பலிகடாவாக்கும் வீரமணியின் மற்றொரு துரோகம் இது.
சூத்திர இழிவு ஒழிப்பை முன்னிறுத்தி சட்டத்தையே திருத்து; இல்லையேல் எங்கள் நாட்டை பிரித்துக் கொடு என்று பெரியார் முழங்கிய முழக்கம் - வீரமணியால் திரிபுபடுத்தப்பட்டதற்கு இவை சான்றுகளாகும்.
(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


பெரியார் சிலைக்கு ஜப்பான் ஆய்வு மாணவி மாலை
ஜப்பானிலுள்ள ஒகாக்கா பல்கலைக் கழகத்தில் மானுடவியல் துறையில் ஆய்வு செய்து வரும் மாணவி அக்கிக்கோ, தமிழகத்தில் தாய்த் தமிழ்க் கல்வி பற்றி மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் ஆய்வு செய்து வருகிறார். கடந்த செப்.11 ஆம் தேதி மேட்டூர் வந்த அவர், அக்.11 ஆம் தேதி வரை மேட்டூரில் தங்கி ஆய்வு நடத்துகிறார். அக்.11 முதல் 14 ஆம் தேதி வரை கோபி உள்ளிட்ட தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் ஆய்வு நடத்துகிறார். அக்டோபர் இறுதியில் ஜப்பான் திரும்புகிறார்.
பெரியார் பிறந்த நாளான செப். 17 ஆம் தேதி சேலத்தில் கழகத் தலைவர் மற்றும் தோழர்களுடன் ஜப்பான் மாணவி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அண்ணா உருவத்தில் கழகத்தினர் ஊர்வலம்

அண்ணா நூற்றாண்டு விழா தொடங்கிய நாளான செப். 15 திங்கள் கிழமை காலை 9 மணியளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் அருகிலிருந்து நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் 100 பெரியார் திராவிடர் கழகத்தினர் அண்ணாவை போல உடையணிந்து, அண்ணாவின் உருவத்திலேயே ஊர்வலமாக வந்தனர்.
ஒவ்வொரு அண்ணாவிற்கும் அண்ணாவின் கொள்கைகளையும், தொண்டையும் குறிக்கும் வகையில் தனித்தனி பெயர்கள் வைக்கப்பட் டிருந்தன. ஊர்வலத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன் தலைமை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச் சாமி, பொள்ளாச்சி பிரகாசு, மாண வரணி பன்னீர் செல்வம், கோவை மாநகர தலைவர் ம.ரே. இராசக் குமார், செயலாளர் வே. கோபால், பொருளாளர் மணிமாறன், அமைப் பாளர் இ.மு. சாஜித், அலுவலக பொறுப்பாளர் சா. கதிரவன், மேட்டு பாளையம் ப. இராமச்சந்திரன், நகர செயலாளர் சந்திரசேகர், அமரன், பொள்ளாச்சி நகர செயலாளர் வெள்ளியங்கிரி, வட்ட செயலாளர் கா.சு. நாகராசு, தெற்கு மாவட்ட செயலாளர் கருமலையப்பன், வடக்கு மாவட்ட செயலாளர் துரைசாமி, ஆனைமலை ஒன்றிய செயலாளர் ருக்குமணி, நகர செயலாளர் அரிதாசு, உடுமலை நகர செயலாளர் பாக்கிய நாதன் மற்றும் கோவை மாநகர தோழர் கள் உட்பட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முடிவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் துரோகம்! கழகத் தலைவர்
கொளத்தூர் மணி கண்டனம்

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி 10.9.2008 அன்று விடுத்துள்ள அறிக்கை: ஈழத்தில் தமிழர்கள் வாழும் வவுனியாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி -
தமிழகத் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழர்கள் வாழும் வவுனியா பகுதியில் இலங்கையின் ராணுவ முகாம் மீது விடுதலைபுலிகள் நடத்திய தாக்குதலில் ஏ.கே. தாக்கூர், சிந்தாமணி ரவுட் எனும் இரண்டு - இந்திய பொறியாளர்கள் காயமடைந்து, கொழும்பு மருத்துவமனையில் இலங்கை ராணுவத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் இலங்கை அரசுக்கு, இந்தியா ராணுவ உதவி செய்யக் கூடாது என்ற தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தியதோடு, பாதுகாப்புக் கருவிகளை மட்டுமே வழங்கி வருவதாகக் கூறி வந்தது. இந்திய அரசின் கூற்று அப்பட்டமான பொய் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள ராடார் கருவியை இந்தியா வழங்கியிருப்பதோடு மட்டுமல்ல, அதைப் பராமரிக்க இந்திய பொறியாளர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. விடுதலைப்புலிகள் விமானத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த ராடார் கருவிகள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகும். சிங்களர்கள் வாழும் பகுதியில் அல்ல.
2005 ஆம் ஆண்டில் இந்த ராடார் கருவியை அன்பளிப்பாக வழங்கியுள்ள இந்திய அரசு - விடுதலைப் புலிகளின் விமானப்படை செயல்படத் தொடங்கிய பிறகு, மீண்டும் கடந்த 2007 மார்ச் மாதத்துக்குப் பிறகு ராடார் கருவியை மேலும் நவீனமாக்கி, பொறியாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது.
தமிழர்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமுக்கு, இத்தகைய பாதுகாப்புகளை இந்தியா வழங்குவது தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு துணை போவதோடு மட்டுமல்ல, தாக்குதலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளேயாகும். போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இலங்கையிலிருந்து பல்வேறு சர்வதேசக் குழுக்களின் பிரதிநிதிகள் வெளியேறிவிட்ட நிலையில் - இந்தியாவின் பொறியாளர்கள் இலங்கையின் விமானப் படையில் ‘அங்கமாகி’ பணியாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். ஏற்கனவே சக்தி வாய்ந்த போர்க் கப்பலை இலங்கை கப்பல் படைக்கு இந்தியா வழங்கியிருக்கிறது. இலங்கை விமானத்தின் குண்டு வீச்சிலிருந்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்தியா, அதற்கு கண்டனம் கூட தெரிவிக்க மனம் இல்லாதவர்கள், இலங்கை விமானப்படையைக் காப்பாற்ற துடிக்கிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது, கண் துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. கடந்த வாரம் தமிழக முதல்வர் கலைஞரை சந்தித்த பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் - இனி, இலங்கை கப்பல் படை தாக்குதலே நடக்காது என்று உறுதிமொழி கூறினார். அடுத்த சில நாட்களிலே மீண்டும் தாக்குதல் தொடங்கிவிட்டது. தமிழக முதல்வரும் சடங்குப்படி பிரதமருக்கு கண்டனக் கடிதம் எழுதி விட்டார்.
இப்படி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை இந்திய அரசு கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பது, தமிழர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கி வருகிறது என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களை ஏமாளிகளாகக் கருதிவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு தமிழர்களின் வாக்குகளைக் கேட்டு வர வேண்டிய நிலை இருப்பதை மறந்து விட்டு செயல்பட வேண்டாம். இந்திய அரசின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கை தமிழக அரசு வன்மையாகக் கண்டித்து, தடுத்து நிறுத்த முன்வரா விட்டால், இந்த துரோகப் பழியை தமிழக அரசும் சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் வலிமையான கண்டனக் குரலை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சேலம் கே.ஆர்.தோப்பூரில் பகுத்தறிவுப் பிரச்சார பொதுக் கூட்டம்
18.8.2008 திங்கள் கிழமையன்று கழகத்தின் சார்பில் சேலம் மாவட்டம் கே.ஆர். தோப்பூர் பவர் கிரிட் அருகில் மோட்டூர்காடு என்னும் பகுதியில் 7 மணிக்கு பகுத்தறிவுப் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையேற்க, கண்ணன் வரவேற்புரையாற்ற, செழியன் முன்னிலை வகித்தார். கோபி வேலுச்சாமி, சாலை இளவரசன் ஆகியோர் மூடபழக்கங்களை யும், போலி சாமியார்களின் மோசடிகளையும் விளக்கி சிறப்புரையாற்றினர். சந்திரசேகரன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நிகழ்ச்சி முடிந்து மேடையிலிருந்து இறங்கிய தோழர்களிடம் இளைஞர்கள் பலர் கடவுள் மறுப்பு பற்றிய பல்வேறு வினாக்களைத் தொடுத்தனர். அவர்களுக்கு சக்திவேல், காவை இளவரசன் மற்றும் இளம்பிள்ளை முத்து மாணிக்கம் ஆகியோர் அறிவியல் ஆதாரங்களுடன் பதில் அளித்தனர். இந்த விவாதமானது சுமார் 30 நிமிடங் களுக்கும் மேலாக நடந்தது. இந்த பொதுக் கூட்டமானது கழகத்தைச் சாராத பல நண்பர்கள் தாமாக முன் வந்து பொருளுதவி செய்து எங்கள் பகுதியில் ஒரு நிகழ்ச்சி நடத்துங்கள் என்று கேட்டுக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இது 16.5.2008 அன்று கே.ஆர். தோப்பூர் மூலக்கடை என்னும் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத் தின் தாக்கம் எனலாம். நிகழ்ச்சயில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த பல தோழர்களும் கலந்து கொண்டனர். பழனிச்சாமி நிகழ்ச்சியினை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

சென்னை சிந்தனை வட்டம்

28.9.2008 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு சென்னை வசந்த மண்டபத்தில் (செயின்ட் மேரீஸ் பாலம், விசாலாட்சித் தோட்டம், மயிலாப்பூர்), டாக்டர் எழிலன் (இளைஞர் இயக்கம்) “ஜாதகம் யாருக்கு சாதகம்” என்னும் தலைப்பில் பேசுகிறார். ஏற்பாடு : மொழிப் போர் தியாகிகள் பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டம்.

0 comments: