பெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த, கி.வீரமணி!


இந்திய அரசே - சிங்களருக்கு வழங்கிய படைக் கருவிகளைதிருப்பிப் பெறு!
இந்திய அரசு - சிங்களருக்கு வழங்கிய ஆயுதத்தைத் திரும்பப் பெறக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் - பல்வேறு நகரங்களில் அக்.13 அன்று நடந்தன. ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் பலவும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம் பங்கேற்றது.

13.10.2008 திங்கள் மாலை 4.30 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கம் அருகில், "சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளியா?" என்ற முழக்கத் தோடு இந்திய அரசைக் கண்டித்து த.தே.பொ.க. பொதுச்செயலாளர் பெ. மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக துணைப் பொதுச் செயலாளர்), கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, புலவர் புலமைப்பித்தன், இயக்குனர் சீமான், வழக்கறிஞர் அஜீதா, ஓவியா, கவிஞர் இன்குலாப், ஓவியர் புகழேந்தி, தமிழ்ப் படைப் பாளிகள் முன்னணி ஜெயப்பிரகாசம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அனைத்து அமைப்புகளை யும் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

தமிழர்கள் படுகொலையை சித்தரிக்கும் வகையில் கழகத்தினர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கும், ஈழ விடுதலைப் போராட்டத்துக்கும் மக்களின் பேராதரவு இருக்கிறது என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு வெளியிட்ட கருத்துக் கணிப்பை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு, கழக சார்பில் அனைவருக்கும் வழங்கப் பட்டது.

சேலம்
ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 13.10.2008 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் தீயணைப்பு நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு கழகத் தலைவர் தா.செ. மணி தலைமையேற்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆ.ஜீவானந்தம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈழத் தமிழரின் விடுதலைப் புலிகளைப் பற்றி தம் கட்சி ஆதரவான கருத்தை வெளிப்படுத்தி பேசினார். ஊர்வலத்தில் பெரியாரின் பிஞ்சுகள் தலையிலும், கைகளிலும் காயக்கட்டுகளுடனும், தோழர்கள் வயிற்றைக் கிழித்து குடல் வெளியே தெரிவது போலவும், கன்னத்திலே காயமடைந்தது போலவும் ஈழத் தமிழர்கள் இலங்கை இராணுவத் தினரால் சித்ரவதை செய்யப்படுவதை வெளிப்படுத்து கின்ற வகையிலே ஒப்பனை செய்து ஊர்வலத்தில் வந்தனர். ஊர்வலம் மதியம் 12.30 மணிக்கு மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு வந்தது. அப்பொழுது கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமை உரையாற்றினார்.

தலைவரின் உரைக்குப் பின்னால், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை சார்ந்த தமிழ் தேசியன் கண்டன உரையாற்றினார். தமிழக இளைஞர் இயக்கத்தின் இளமாறன், தமிழர் தேசிய இயக்கம் வ. தம்பி, பழனிச்சாமி, ஸ்பீடோ அமைப்பு சார்ப் அ.முரளி, மனித உரிமை பாதுகாப்பு மைத்தின் வழக்குரைஞர் மாயன், குடியுரிமை பாது காப்பு நடுவத்தைச் சார்ந்த தமயந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் வை.செல்வக் குமார், தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சியின் ச.பிந்துசாரன் ஆகி யோர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன உரையாற்றினர். ஊர் வலத்தில் அனைத்து அமைப்பின் சார்பிலும் 400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தை சேலம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய் திருந்தது.

கோவை
கோவையில் 13.10.2008 திங்கள் மாலை 4 மணியளவில் செஞ்சிலுவைச் சங்கம் அருகில், இந்திய அரசு சிங்கள இராணுவத் திற்கு அளித்த ஆயுதங் களைத் திரும்பப் பெறக் கோரி கழகம் சார்பில் ஒத்த கருத் துடைய அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து ஈழத்தில் போரில் காயம்படுகின்ற தமிழர்களின் நிலையை உணர்த்தும் வகையில் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நகர செயலாளர் அனுபவ் ரவி, ஆதித் தமிழர் பேரவையின் மாணவரணி செயலாளர் வெண்மணி, ஆதித் தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் மாநகர செயலாளர் தென்னரசு, பு.இ.மு. தமிழரசன், த.தே.பொ.க. பா. தமிழரசன், கழக செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச் சாமி, பு.ஜ.தொ.மு. விளவை இராமசாமி, த.ஒ.வி. அறிவுடை நம்பி, த.தே.வி.இ.தேவேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கண்டன உரையைப் பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்ளுக்கு ஈழத்தில் போரில் காயம்பட்டு கிடக்கின்ற தமிழர் களின் நிலையை உணர்த்துவதுபோல தோழர்களுக்கு காயக்கட்டுகள் போடப்பட்டு இருந்தன. பத்திரிகை யாளர்களும், பொது மக்களும் ஆர்வத்துடன் காயம்பட்ட தோழர்களை வந்து பார்த்துச் சென்றனர். மேலும் அவர்கள் தோழர்களின் காயக்கட்டுகளை உண்மைக் காயங்கள் என்று நம்புகின்ற வகையில் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டு இருந்தன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டக் கோரிக்கைகள்

• சிங்கள அரசுக்குக் கொடுத்த படைக் கருவிகள் அனைத்தையும் திரும்பப் பெறு!
• சிங்களப் படைக்குத் துணையாக அனுப்பிய இந்தியப் படைத் துறையினர் அனைவரையும் திரும்ப அழை!
• இந்தியாவில் எவ்விடத்திலும் சிங்களப் படையினருக்கும் காவல்துறையினருக் கும் பயிற்சி கொடுக்காதே!
• நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ சிங்கள அரசுக்கு அரசியல், பொருளியல், படை வகை உதவி எதுவும் செய்யாதே!

'இராம லீலா'வுக்கு எதிராக 'இராவண லீலா'

ஆரியர் - திராவிடர் போராட்டத்தை சித்தரிப்பதே இராமாயணம் என்பது ஜவகர்லால் நேரு உட்பட பல ஆய்வாளர்களின் கருத்து. பெரியார் இந்தக் கருத்தை நாடு முழுதும் பரப்பினார். திராவிடர்களை வீழ்த்துவதற்கு ஆரியர்கள் பின்பற்ற வேண்டிய 'சூழ்ச்சி - சூது' முறைகளை - இராமன் என்ற கதாபாத்திரம் வழியாக ராமாயணம் விளக்குகிறது. 'சக்கரவர்த்தி திருமகன்' என்று இராமாயணத்துக்கு விரிவுரை எழுதிய ராஜ கோபாலாச்சாரி பார்ப்பனர்களுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் 'இராமாயணத்தைப் படியுங்கள்' என்று அறிவுரை கூறினார். இராவணன் கற்பனைப் பாத்திரம் என்றாலும், அவர் திராவிட இனத்தின் குறியீடாக உயர்ந்து நிற்கிறான். அத்தகைய இராவணனையும், அவனது குடும்ப உறுப்பினர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகியோரையும் உருவ பொம்மைகளாக செய்து, இந்த திராவிட மாவீரர்களை நெருப்பில் போட்டுக் கொளுத்தும் 'இராமலீலா'வை டெல்லியில் ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடி தென்னாட்டு மக்களை, திராவிடர்களை பார்ப்பனர்கள் அவமதித்து வருகிறார்கள்.

திராவிட மாவீரன் இராவணனை 'தீமையின் சின்னமாக' இழிவுபடுத்தும் இந்த ஆரியக் கூத்தில், கடந்த 'விஜயதசமி' நாளன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்றுள்ளது, தென்னாட்டு மக்களை - திராவிடர்களை இழிவுபடுத்தும் மாபெரும் அவமதிப்பாகும். கடந்த சில ஆண்டுகளாகவே சோனியாவும், அவரது பரிவாரங்களும், இந்த ஆரியக் கூத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

"டெல்லியிலே நடக்கும் ராமலீலாக்களை எதிர்த்து தென்னாட்டிலும், ராமனை எரிக்கும் ராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும்" என்று அன்று கலைஞர், தனது 'முரசொலி' நாளேட்டில் 1954 ஆம் ஆண்டில் எச்சரித்தார்! (8.10.1954) பெரியார் மறைந்த - முதலாண்டு நினைவு நாளில் மணியம்மையார், திராவிடர் கழகத் தலைவராக பொறுப்பேற்ற நிலையில், பெரியார் திடலில் 'இராமலீலா'வுக்கு பதிலடி தரும் வகையில், 'இராமன்' உருவ பொம்மைகளை தீயிட்டு பொசுக்கும் இராவணலீலாவை நடத்தினார். அவருக்குப் பிறகு கி.வீரமணி தலைமை ஏற்ற பிறகு, 'இராவண லீலா' நடத்தப் போகும் அறிவிப்புகள் வந்தனவே தவிர, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் கூறி, பின் வாங்கிக் கொண்டார்கள்.

1996 ஆம் ஆண்டில் பெரியார் திராவிடர் கழகம் தோற்றம் கொண்ட பிறகுதான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அரசின் தடைகளை மீறி 'இராமன்' உருவ பொம்மைகளை எரித்து, 'இராமலீலாவுக்கு' பதிலடி தரப்பட்டது. அதற்காக தோழர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குகளை சந்தித்தனர். அண்மையில், ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்கள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிபுசோரன், இராவணனை இழிவுபடுத்தும் நிகழ்வில் பங்கேற்க முடியாது என்று மறுத்துவிட்டார். இப்போதும் பல பழங்குடியினர், 'இராவணனை' தங்கள் மூதாதையராகக் கருதி வழிபட்டு வரும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் விதிசா மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் பெயரே 'ராவண கிராம்' என்பதாகும். இக் கிராமத்தில் வாழும் 1100 மக்களும், இராவணனை தங்கள் மூதாதையர் என்று கூறி வழிபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின் போது இராவணன் சிலை முன் கூடி, வழிபாடு நடத்துகிறார்கள். அதேபோல் போபாலிலிருந்து 600 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மண்டாசூர் எனும் கிராம மக்கள் - ராவணனின் மனைவியான மண்டோதரி பிறந்தது தங்களது கிராமத்தில்தான் என்று நம்பி, இராவணனை தங்கள் கிராமத்தில் மருமகனாகக் கருதி, இராவணனைப் போற்றுகிறார்கள். இவற்றிற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றாலும், 'ராமனை' பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிப்பது போல் - 'இராவணனை' போற்றும் நம்பிக்கையும் நாட்டில் நிலவுகிறது. இந்த உணர்வுகளை கிஞ்சித்தும் மதியாமல், 'இராவணனை' தீமையின் உருவமாக்கி, தீயிட்டுப் பொசுக்குவது என்ன நியாயம் என்பதே நமது கேள்வி?

இப்படி தென்னிலங்கை வேந்தன் 'இராவணனை' தீயிடும் ஆரியக் கூத்தில் பங்கெடுக்கும் மன்மோகன் சிங் ஆட்சி தான், ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்களர்களுக்கு ஆயுதங்க ளையும், ராணுவப் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.

இராவணன் - திராவிட மாவீரன் என்ற கருத்தை முன் வைத்து, தமிழ் ஈழத்தில் 'விடுதலை புலிகள்' நடத்தும் 'புலிகளின் குரல்' வானொலி 'இலங்கை மண்' எனும் தொடர் நாடகத்தை 53 வாரங்கள் ஒலி பரப்பியது. அந்நாடகத்தை விடுதலைப்புலிகள் நூலாகவும் வெளியிட்டுள்ளனர். அந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய தமிழ் ஈழ மக்களின் தேசிய தலைவர் பிரபாகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

"போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ்மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரிபில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது. தலைகீழாகத் திரித்து விடப்பட்ட இந்த வரலாற்றின் தாக்கம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் முடிவுறவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இராவணனுக்கு தீ வைத்து மகிழ்ச்சிக் கூத்தாடும் ஆரியர்களும், அவர்களது வலையில் சிக்கிக் கிடப்போரும், இராவணனை அழித்த முறையைப் போலவே தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கை ஒளி பிரபாகரனையும் அழித்திட 'சூழ்ச்சி வலை' விரிக்கிறார்கள். எம்.கே.நாராயணன்களும், சிவசங்கரமேனன்களும், 'இந்து' ராம்களும், 'துக்ளக்' சோக்களும், சுப்ரமணிய சாமிகளும், உளவு நிறுவனங்களும் மரத்தின் பின்னால் பதுங்கி 'விபிஷணர்களைப் பிடி; அவர்களை அமைச்சராக்கு; இதோ ரகசிய ஆயுதங்களைப் பிடி; வெளியில் சொல்லாதே' என்று 'ராமாயணம்' காட்டிய வழியில் இராவணனை வீழ்த்தும் படலத்துக்கு திட்டங்களைத் தயாரிக்கிறார்கள்.

தாய்த் தமிழ்நாட்டின் குடிமக்களை 'பயங்கரவாதம்', 'தீவிரவாதம்', 'ஆயுதக் கலாச்சாரம்' என்ற சொல்லாடல்களுக்குள் சிக்க வைத்து, மூளைச் சலவை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், இது 'இராமாயணயுகம்' அல்ல. 'இராவணயுகம்' என்பதை எதிரிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

இனி வரும் காலத்தில் இராமலீலாவுக்கு பதிலடியாக 'இராவண லீலா'வுக்கு தயாராக வேண்டிய நிலையை பார்ப்பனர்களே உருவாக்கி வருகிறார்கள். இராவணன் வாழ்க என்ற முழக்கத்தோடு மாவீரன் பிரபாகரன் வாழ்க என்று சேர்த்து முழக்குவோம்! இராமனுக்கு எதிராக தீ மூட்டுவோம்; அதில் இந்திய தேசிய பார்ப்பன வர்க்கத்தையும், துரோகத்தையும் சேர்த்துப் பொசுக்குவோம்!

கோவையில் 'இந்து' ஏட்டுக்கு தீ


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன 'இந்து' ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டுதலால் தான் - தமிழ்நாட்டில், ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடக்கின்றன என்றும், இப்படி தூண்டிவிடும் சக்திகள் ஆபத்தானவை என்றும் எழுதியுள்ளார். விடுதலைப்புலிகளும், பிரபாகரனும் சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் சிக்கி விட்டார்கள் என்றும், அவர்கள் கதை முடியப் போகிற நிலையில், அதைத் தடுக்கும் தமிழக எழுச்சிகள் கண்டிக்கத்தக்கது என்றும், சாக்கடைத்தனமாக பூணூல் திமிரோடு அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழ் உணர் வாளர்களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள இக் கட்டுரையை எதிர்த்து, கொதித்துப் போன கழக இளைஞர்கள் கோவையில் 'இந்து' பத்திரிகை அலுவலகத்தின் முன் கட்டுரை வந்த அதே நாளில் பகல் 12 மணியளவில் திரண்டு பார்ப்பன ஏட்டுக்கு எதிராக எச்சரிக்கை முழக்கமிட்டனர். மாலினி பார்த்தசாரதியின் 'மலநாற்றம்' வீசும் கட்டுரை வெளியிட்ட 'இந்து' ஏட்டுக்கு தீ வைத்தனர். கழக சட்டக் கல்லூரி மாணவர்களும், கழகத்தினரும் இரண்டு அணியினராக வந்தனர். பார்ப்பன இந்து நிர்வாகம் தோழர்களை தாக்கத் தொடங்கியது. இரு தரப்பிலும் கைகலப்பானது. பின்னர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானோர்: சாஜித், பன்னீர்செல்வம், மணி கண்டன், விசுவம், பிச்சுமணி, பாண்டியன், நேருதாஸ், சத்யா, ரகு, மணிவண்ணன், ரவி.

பெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த, கி.வீரமணி!திரிபுவாத திம்மன்கள் - யார்? (5)

அவ்வப்போது ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு 'ஆலவட்டம் வீசி' அதிகார மய்யத்தின் அரவணைப்பைத் தேடிக் கொண்டிருப்பவர் கி.வீரமணி. இந்த அரவணைப்புக்காக அவர் மேற்கொள்ளும் 'யுக்திகளுக் கும்', அதனடிப்படையில் வெளியிடும் சந்தர்ப்பவாத அறிக்கைகளுக்கும் கொள்கை முலாம் பூசிக் கொள்கிறார்கள்.


ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை ஒழிப்பதற்கும், நாடு முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே கல்வி வெளிச்சம் பரவுவதற்கும், காமராசர் ஆட்சியை தீவிரமாக ஆதரித்தார் பெரியார். அதற்காக அவர் அதிகார மய்யத்திடம் சரணடைந்துவிடவில்லை. அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை காமராசர் ஆட்சியின் போதுதான் நடத்தினார். தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை காமராசர் ஆட்சியில் தான் அறிவித்தார். அதேபோல், இப்போது நடந்தால் ஆட்சிக்கு தொல்லைதரவே இத்தகைய போராட்டங்களை பெரியார் நடத்துகிறார் என்று, கி.வீரமணி அறிக்கைகளை வெளியிட்டிருப்பார்.
பார்ப்பனர் ஜெயலலிதா ஆட்சிக்கு ஆதரவும், பாராட்டுகளையும் குவித்துக் கொண்டிருந்தபோது, அந்த 'யுக்திக்காக' பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பும், கடவுள் எதிர்ப்பும், அவரது லட்சியமல்ல. ஒரு வழிமுறைதான் என்ற 'வியாக்யானத்தை' வீரமணி முன் மொழிந்ததை கடந்த இதழில் சுட்டிக்காட்டியி ருந்தோம். மற்றொரு கொள்கை புரட்டை இங்கே எழுதுகிறோம்.

1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், பெரியாருக்கு உடன்பாடானது அல்ல. கட்டாய இந்தியைக் கொண்டு வந்த பார்ப்பனர் ராஜகோபாலாச்சாரி, 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கினார். தி.மு.க.வும் அப்போது ராஜகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சியை தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருந்தது. பெரியார் இந்தப் போராட்டத்தை பார்ப்பனர் நடத்தும் கலவரம் என்று கூறினார். பெரியாரின் எதிர்ப்புக்கு உள்ளான அந்தப் போராட்டத்தை கி. வீரமணி, பெரியாருக்குப் பிறகு அங்கீகரித்தார். அதற்கான பின்னணியும் 'யுக்தி' தான்! ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் திடலில் 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு தியாகிகளுக்கு ஒரு பாராட்டுக் கூட்டத்தை கி.வீரமணி ஏற்பாடு செய்தார். ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியான சசிகலாவின் கணவரும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான நடராசன் - 1965 ம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். அவருக்கு விருது வழங்கி மகிழ்விக்க, நடராசன் ஆலோசனைப்படி கி.வீரமணி நடத்திய பாராட்டுக் கூட்டமே அது. அந்த 'விருது வழங்கும்' நிகழ்ச்சியின் விளம்பரம் 'தினமணி' நாளேட்டில் வெளியிடப்பட்டது. திராவிடர் கழகத்தின் பெயரால் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்தில் திராவிடர் கழகக் கொடிக்கு பதிலாக, அ.இ.அ.தி.மு.க. கொடிகளோடு விளம்பரம் வெளி வந்தது. பெரியாரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு போராட்டத்தை பெரியார் மறைவுக்குப் பிறகு, அதை அங்கீகரித்து போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு விருது வழங்கியது - பெரியாரைத் திரிப்பது அல்லவா? அதிகாரத்தில் உள்ளவர்களை மகிழ்விப்பதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடிய - இந்த வீரமணிதான், பெரியார் நூல்களை, மற்றவர்கள் வெளியிட்டால், திரித்து விடுவார்கள் என்கிறார். பெரியார் திராவிடர் கழகத்தை 'திரிபுவாத திம்மன்கள்' என்கிறார்! பெரியாரைத் திரிப்பது யார்? பதில் வருமா?
(புரட்டுகள் உடைப்பு தொடரும்)

விடுதலைப் புலிகளுக்கும் - ஈழ விடுதலைக்கும் தமிழகத்தில் பேராதரவு'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் கருத்து கணிப்பு

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் பெரும் பான்மையான மக்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை - 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு தமிழகம் முழுதும் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர் போராட்டத்துக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்று பார்ப்பன ஊடகங்கள் செய்து வரும் பிரச்சாரம் பொய் என்பது இதன் மூலம் அம்பலமாகி யுள்ளது. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு விடுதலைப் புலிகளையோ, ஈழத் தமிழர் போராட்டத்தையோ ஆதரிக்கும் ஏடு அல்ல. ஆனாலும், அந்த ஏடே நடத்திய கருத்துக் கணிப்பு, இந்த உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு - 'சிஃபோர்' எனும் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை அக்.12, 2008 அன்று முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி தந்து, ஆயுதங்கள் வழங்குவதை தமிழ் நாட் டில் கணிசமான மக்கள் விரும்பவில்லை. இதனால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி கட்சி யுடன் தி.மு.க. உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே - கணிசமான தமிழர்களின் கருத்து.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு, அவர் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டால், இந்திய ராணுவம் உடனடியாக, பிரபாகரனை மீட்க, இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பெரும்பாலோர் கூறுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றும், ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள் தான் என்றும் பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள்.
40 சதவீத தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு நிதி உதவியும், பொருள் உதவியும் வழங்க விருப்பமுடன் உள்ளனர்.
சென்னை, கோவை, ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 1031 பேர் பல்வேறு தரப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்டனர். பேட்டி காணப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியிலிருந்து 11 ஆம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப் பட்டது என்பதால், இதுவே தற்போதைய தமிழர்களின் உணர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
• தமிழ் ஈழம் அமைய - பணமும் பொருளும் அளிக்கத் தயார் என்று 40 சதவீதம் பேர் கூறு கிறார்கள். தமிழ் ஈழத்தை ஆதரிக்க மாட்டோம் என்று 10 சதவீதம் பேர் மட்டுமே கூறுகிறார்கள். ஈழத் தமிழர்களுக்காக முழு அடைப்பு நடந்தால், அதில் பங்கேற்போம் என்று 10 சதவீதம் பேரும், தமிழ் நாட்டில் அடைக்கலம் தேடி வரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவோம் என்று 22 சதவீதம் பேரும், நியாயமான பிரச்னை தான், ஆனால், தங்களுக்கு இதில் ஆர்வம் இல்லை என்று 14 சதவீதம் பேரும் கூறுகிறார்கள்.
• பிரபாகரனுக்கு ஏதேனும் இலங்கை ராணுவத்தால் ஆபத்து நேருமானால், இந்திய ராணுவத்தை உடன் அனுப்பி பிரபாகரனை பாதுகாக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் பெரும் பான்மையோர் கருத்து. இப்படி கருத்து கூறியவர்கள் 31 சதவீதம்.
• அதேபோல், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர்களின் கருத்து. 51 சதவீதத்தினரின் கருத்து இதுவேயாகும். தடையை நீடிக்க வேண்டும் என்போர் 8 சதவீதம் மட்டுமே.
• விடுதலைப்புலிகள் இயக்கம் ஒன்று தான் ஈழத் தமிழர்களின் உண்மையான ஒரே பிரதிநிதி என்பதும், அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. விடுதலைப் போராளிகள் என்பதும் பெரும் பான்மைத் தமிழர்களின் கருத்தாக உள்ளது.
36 சதவீதத்தினர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளனர். பயங்கரவாதிகள் என்று கருத்துடையோர் 12 சதவீதம் மட்டுமே. மற்றவர்களுடன் இணைந்து தமிழர்களுக்காகப் போராடும் அமைப்பு என்று 22 சதவீதம் பேரும், சுதந்திரத்துக்காகப் போராடு வோர் என்று 30 சதவீதம் பேரும் கருத்து கூறி யுள்ளனர்.
• இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள் விக்கு - இலங்கைக்கு ஆயுதமும், ராணுவப் பயிற்சி யும் வழங்கி வரும் மன்மோகன்சிங் ஆட்சியிடம் தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர் களின் கருத்தாக உள்ளது. 34 சதவீதம் பேர் இந்தக் கருத்தை தெரி வித்துள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழு அடைப்பு நடத்தலாம் என்று 10 சதவீதத் தினரும், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று 12 சதவீதத்தினரும், ஈழத் தமிழர் பிரச் சினைக்காக சிறப்பு வரி விதித்து, தமிழர்களுக்கு உதவ முன்வந்தால், வரி கட்டத் தயார் என்று 10 சதவீதத்தினரும், பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று 2 சதவீதத்தினரும் கருத்து கூறியுள்ளனர்.
• ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபாடு காட்டுவதில் போட்டி போட் டுக் கொண்டிருப்பது சரி தானா என்ற கேள்விக்கு அது நியாயமானதே என்று பெரும்பான்மையான 44 சதவீதத்தினர் கருத்து கூறியுள்ளனர்.

சிற்பி ராசனின் மகத்தான சமூகப் புரட்சி!

பெரியார் திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டு, மூடநம்பிக்கைக்கு

எதிராக மக்களிடம் பகுத்தறிவு பரப்புதலை லட்சியமாகக் கொண்டு செயல் பட்டு வரும் தோழர் சிற்பி ராசன் தலை சிறந்த சிற்பிகளில் ஒருவர். அவர் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட 'கடவுள்கள்' தலித் சிற்பிகளால் உருவாக்கப் பட்டவர்கள். சிற்பி ராசனின் இந்த மகத்தான சமூகப் புரட்சியை 'ஆனந்தவிகடன்' ஏடு 8/10/08 படம் பிடித்துக் காட்டியுள்ளது.
"பதினைந்து வருடங்களுக்கு முன்பு இசை ஞானி இளையராஜா எனது சிற்ப மையத்துக்கு வந்திருந்தார். அப்போது நான் செதுக்கிக் கொண்டு இருந்த விநாயகர் சிலையைத் தொட்டுப் பார்க்க லாமா என்று கேட்டார். 'இப்போதுதான் தொட முடியும். கோயில் கருவறைக்குள் சென்றுவிட்டால் பக்தனாகிய உங்களாலும் தொட முடியாது. சிலையைச் செய்த என்னாலும் தொட முடியாது' என்றேன். சிரித்துக் கொண்டார்!" தனது உளியைப் போலவே சிற்பி ராஜனின் வார்த்தைகளிலும் கூர்மை!

இந்தியாவின் மிகச் சிறந்த சிற்பிகளில் ஒருவர் ராஜன். சுவாமிமலை அருகே திம்மக்குடியில் இருக்கும் 'ராஜன் சிற்ப மையத்'தில் ஏதோ ஒரு தாளகதியில் இசை மீட்டு கின்றன நூற்றுக்கணக்கான உளிகள். தாமரைப்பூ சரஸ்வதி, காசுகளை அள்ளி இறைக்கும் லட்சுமி, ரதி, மன்மதன், திருப்பதி வெங்கடாசலபதி, ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி தெய்வானையோடு முருகன், ஊழித் தாண்டவமாடும் நடராசர் என பஞ்சலோக மற்றும் வெண்கல வடிவங்களில் மினி தேவலோகச் சூழல்! இந்தியாவின் சார்பாக லண்டன், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து சிற்பக் கண்காட்சிகளில் கலந்து கொள்ள மத்திய அரசு தேர்ந்தெடுப்பது இவரைத்தான். பிரான்ஸ் நாட்டுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பாடமாக சிற்பி ராஜனின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றிருக் கிறது.

இவற்றைத் தாண்டியும் ராஜனுக்கு இருக்கிறது சில தனிச் சிறப்புகள். சுவாமி சிலைகளைத் தெய்வாம்சமாக வடித்துத் தரும் ராஜன், ஒரு பழுத்த நாத்திகவாதி. பெரியார் கொள்கைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப் பணித்தவர். இவரது சிற்ப மையத்தின் இன்னொரு சிறப்பு தலித் சிற்பிகள்! தாழ்த்தப் பட்டவர்கள் என ஒதுக்கப்படும் தலித்களால் உருவாக்கப்பட்ட எண்ணி லடங்கா கடவுள் சிலைகள் இந்தியாவைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள முக்கியக் கோயில்களில் அருள் பாலித்துக் கொண்டிருக் கின்றன. புரொஃபஷனல் கலைக்கூடம், லேப்-டாப் மூலம் வாடிக்கையாளர் களுடன் தகவல் பரி மாற்றம் என சிற்பக் கலையை அடுத்த நூற்றாண் டுக்குக் கை பிடித்து அழைத்துச் செல்கிறார் ராஜன். கலவையான உலோக மணம் நாசியைத் தீண்ட அங்கிருந்த வித்தி யாசமான 'பறை யடிக்கும் விநாயகர்' என்னோடு நின்றிருந்த வின்சென்ட்டின் கேமராவை ஈர்த்தது.

"அனைவருக்கும் பொதுவான கடவுள், தலித் மக்களின் கலா சாரத்தையும் பிரதி பலிக்க வேண்டும் இல்லையா? அதற் காகத்தான் இந்தப் பறையடிக்கும் விநாயகர் சிலை! பதின் மூன்று வயதிலிருந்தே கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும், எனக்கிருந்த சிற்பக் கலைநயத்தைக் கடவுள் சிலை செய்வதன் மூலம்தான் ஆழமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்பினேன். வெறும் கல்லை, உலோகத்தை கலைநயம் மிக்க கடவுளர்களாகத் தங்கள் உழைப்பின் மூலம் உரு வாக்கித் தரும் மக்களைக் கோயிலின் உடள்ளேயே விட மறுப்பது மானுட விரோதம் இல்லையா? பெரியார் தொண்டனாக இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.

முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்? மூலவர் சிலைகளையே தலித்துக்களைக் கொண்டு உருவாக்கி கோயில் கருவறைக்குள் வைக்கத் தீர்மானித்தேன். சிற்பக்கலையில் ஆர்வமுள்ள தலித் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலவசமாகத் தங்குமிடம், பயிற்சிகள் அளித்து என் சிற்ப மையத்தைக் குருகுலமாகவே மாற்றினேன். எதிர்பார்த்ததைவிடவும் இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்புகள். 'சாமி சிலையைக் கீழ்ச் சாதியினர் செய்வதா?' என்று கேள்வி எழுப்பி யவர்கள் எல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்ட கலைநயம் மிக்க கடவுள் சிலைகளைப் பார்த்து அசந்து போனார்கள். ஆரம்ப காலங்களில் கோயில் நிர்வாகிகள் தலித்து களால் உருவாக்கப்பட்ட கடவுள் சிலைகளை வாங்க மறுத்தார்கள். கடைசியில் அவர்களைக் கலை வென் றது. அந்த அளவுக்கு தலித் இளைஞர்களின் சிற்ப நுட்பம் ஒவ்வொரு அங்குலத்திலும் வெளிப்பட்டது.

இந்த நாட்டின் ஆதிக்குடிகள் தலித்துகள். நமக்கான கலையை, நாகரிகத்தை உருவாக்கித் தந்தவர்கள். சாமி சிற்பங்கள் மட்டும் அந்தக் கலை குடிகளின் கரங்களி லிருந்து தப்ப முடியுமா? எனது சிற்ப மையத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் நியூ ஜெர்ஸி சிவன் கோயில், க்ளீவ்லேண்டிலுள்ள இந்து மிஷன் கோயில்களை அலங்கரிக்கின்றன. இதே சுவாமி மலைக்கு அருகில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஐயப்பன் சிலையை நானும் எனது மாணவர்களும் தான் உருவாக்கினோம். அதன் பிறகு, அந்த ஐயப்பன் சிலைக்கு வெள்ளிக் கவசம் வேண்டுமென கோயில் நிர்வாகத்தினர் கேட் டனர். கவசத்துக்கு அளவெடுக்க வேண்டுமானால் கருவறைக்குச் செல்ல வேண்டும். ஆனால், கோயில் நிர்வாகம் என்னையும் எனது தலித் மாணவர்களையும் கருவறைக்குள் விடாமல் தடுத்தது. கோபப்பட்டு திரும்பி வந்துவிட்டோம். பிறகு, அவர்களே தேடி வந்து அழைத்ததால் அளவெடுத்துக் கவசம் சாத்தி னோம். அவ்வளவு ஏன்...? காஞ்சி சங்கரமடத்தி லுள்ள காமாட்சி அம்மனின் அவதார மாகிய மகாமேரு சிலையை உருவாக்கியவர்களும் என் தலித் மாணவர்கள்தான்" என்கிற ராஜனும், அவரது மாணவர்களும் இது வரைக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாமி சிலைகளை உருவாக்கி உள்ளனர்.

சுவாமிமலையில் இயங்கும் சிற்ப மையத்தை அண்மையில் விற்றுவிட்டார் ராஜன். அதை வாங்கிய வர்கள், 'ராஜன் சிற்ப மையம்' என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள ஒரு பெரும் தொகையை ராயல்டியாக வழங்கியுள்ளனர். இப்போது கும்பகோணம் அருகே ஆலங்குடியில் பரந்து விரிந்த பிரமாண்ட சிற்ப மையத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். "அங்கும் தலித் இளைஞர்களுக்கே முன்னுரிமை" எனும் ராஜன், சிற்பக் கலையின் மீதுள்ள ஈடுபாடு காரணமாகத் திருமணமே செய்து கொள்ள வில்லை.

ராஜனின் சீடரான சிற்பி பாண்டுரங்கன், "ஒளிவு மறைவின்றி சிற்பக் கலையின் ரகசிய நுட்பங்கள் அனைத்தையும் ராஜன் ஐயா தான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். வருமானம், வெளிநாட்டுக்காரர் களின் பாராட்டுக்கள் பெரிய விஷயமில்லை. உள்ளூ ரிலேயே சாதியின் பெயரைச் சொல்லி எங்களை ஒதுக்கியவர்கள் கூட இன்று மரியாதையோடு பார்க்கிறார்கள்." ஏழரை அடி உயரமும் நானூறு கிலோ எடையும் கொண்ட லட்சுமி சிலையை உயிரோட்டமாகச் செதுக்கியபடியே பேசுகிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இறுகி கெட்டிப்பட்டுக் கிடக்கும் சாதி என்னும் கடும்பாறையின் மீது ராஜனின் உளி தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறது! ட

0 comments: