எல்லை மீறும் புகழ்ச்சி வியாபாரிகளிடம், எச்சரிக்கை தேவை!

கலைஞர் பார்வைக்கு...

அண்ணா நூற்றாண்டில் திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளை கலைஞருக்கு பெரியார் விருது வழங்கி சிறப்பித்திருப்பது மிகச் சிறப்பான - மகிழ்ச்சியான முடிவு என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. நீண்ட நெடிய திராவிடர் இயக்க வரலாற்றில் பயணித்த மூத்த தலைவர் கலைஞர்; பள்ளிப் பருவத்திலே அவர் தொடங்கிய கொள்கைப் பயணம் - பேச்சாளராக, எழுத்தாளராக, நாடக நடிகராக, போராளியாக தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு விதித்திட்டு, வளர்த்த உழைப்பாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதல்வராக, தி.மு.க. தலைவராக இந்த முதுமையிலும் தொடர்கிறது. தமிழகத்தின் சமூக வரலாற்றோடு இணைந்து நிற்கும்; பெரியார் விருது பெறும் முழுத் தகுதியும் பெற்ற முதன்மையான தலைவர்.
பெரியார் எனும் பெரும் புரட்சியாளர் தமிழகத்தின் வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர்; சுயமரியாதைப் புரட்சியைத் தொடங்கி வைத்தவர் அவர் தான்; அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினம் அவரால் தலை நிமிர்ந்தது. உரிமைக்குப் போர்க்கொடி உயர்த்தியது. ஆனாலும் பெரியார் தொடங்கிய அந்த சுயமரியாதை புரட்சிப் பயணம் - இன்னும் நெடுந்தூரம் கடக்க வேண்டி யுள்ளது என்பது உண்மை. இடையூறுகளும், முட்டுக்கட்டைகளும் பின்னடைவுகளும் சவால் களாக வந்து நிற்கின்றன.
இந்த நிலையில் சிலைகளும், விருதுகளும், பாராட்டுகளும், பெயர் சூட்டல்களும், பெரியாரின் சுயமரியாதை உணர்வுகளை ஊட்டக் கூடிய குறியீடுகளே தவிர, அவைகளே சமூக மாற்றங்களைக் கொண்டு வந்துவிடாது. இவை எல்லாம் கலைஞர் அறியாதவை அல்ல.
பெரியார் உருவாக்கிய சுயமரியாதைப் புரட்சி தமிழகத்தில் உருவாக்கியுள்ள தாக்கம் எத்தகையது என்ற கேள்விக்கு சரியான சமூகத்தைப் பற்றிய மதிப்பீடும், மாற்றங்களைப் பற்றிய புரிதலும் அவசியமாகிறது. சென்னையில் பெரியார் திடலில் கி.வீரமணி, சமூகநீதி வழங்கும் விழாவில் பேசிய கலைஞர் - பெரியார் உருவாக்கிய மாற்றத்தை மிகச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்.
“இன்றைக்கு உங்களால் போற்றப்படுகிற தலை வனாக இருக்கிறேன்; உங்களால் அன்பு பாராட்டப்படுகிற தலைவனாக இருக்கிறேன்; ஆனால் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த நிலைமைக்கு நான் வருவதற்கு காரணம், நம்முடைய கருத்துகள், பகுத்தறிவு எண்ணங்கள், பெரியாரால் போதிக்கப்பட்ட அந்தச் சுயமரியாதைச் சுடரொளி. அதுதான் இன்றைக்கு என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கின்றது.”
பார்ப்பனிய வர்ணாஸ்ரம சதியின் கொட்டத்தை அடக்கி, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போர் வேர் பிடிக்கக்கூடிய அளவுக்கு, மண்ணை பக்குவப்படுத்தியதுதான், பெரியாரின் மகத்தான சாதனை; இது சாதாரணமான புரட்சி அல்ல. இந்தப் பின்னணியில் சில கசப்பான உண்மை களையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. திருச்சியில் நடைபெற்ற விருது வாங்கும் விழாவில், பெரியார் விருது பெற்ற கலைஞருக்குப் புகழாரம் சூட்டுவதில் சில தலைவர்கள் கடுமையான போட்டிக் களத்தில் நின்றதை நாட்டு மக்கள் பலரும் தொலைக் காட்சியில் பார்த்தனர். அந்தப் புகழரையாளர்கள் உதிர்த்த மொழிகள் சமூகத்தைப் பற்றிய புரிதலோ, கவலையோ இல்லாமல் புகழ்ச்சியையே கேலிக்குரிய தாக்குவதாக இருந்தன என்பதை நாம் சுட்டிக்காட்ட விழைகிறோம்.
ஒரு தலைவர் தனது புகழுரையில், பெரியாரைவிட கலைஞர் உயர்ந்து நிற்கிறார் என்றும்; பெரியார் உயர்சாதிக்காரர், கலைஞரோ மிகவும் பின் தங்கிய சாதிக்காரர். எனவே பெரியாரைவிட கலைஞர் மிஞ்சி நிற்கிறார் என்றும்; இலக்கியப் படைப்புகளில் அண்ணாவையும் கலைஞர் மிஞ்சியவர் என்றும் பேசினார். மற்றொரு தலைவரோ, கலைஞருக்கு விருது வழங்கக்கூடிய போதுமான தகுதி பெரியாருக்கு இல்லை என்ற பொருளில் - பெரியார் விருது கலைஞருக்கு போதுமானது அல்ல; பெரியார் விருதையும் தாண்டி நிற்கும் விருது கலைஞர் விருதாகவே இருக்கும் என்றும் , கலைஞருக்கு தகுதியான விருது கலைஞர் விருதாக மட்டுமே இருக்க முடியும் என்றும் அவர் பங்குக்கு பேசினார். பெரியார் நூல்களை அரசுடைமையாக்கி விடக் கூடாது என்ற ஒரே கவலையோடு கலைஞரைப் பாராட்டத் துடித்த கருஞ்சட்டைத்தலைவர் - அண்ணாவைவிட, சிறந்த தலைவர் கலைஞர் என்றும், இதை பெரியாரே கூறி யுள்ளார் என்றும், இன்னும் ஒரு படி மேலே போனார்.
இப்படி எதார்த்தங்களுக்கு மாறாக - கலைஞரை சங்கடத்துக்கு உள்ளாக்கும் புகழ்ச்சி வியாபாரிகள் - ஏற்கனவே கலைஞரை வசைமாறி பொழிவதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர்கள் தான் என்பதும் கலைஞர் அறியாதது அல்ல! இந்த அதீத புகழுரைகளால் கலைஞர் மனம் குளிர்வார் என்று, இவர்கள் கருதுவதே - கலைஞரைப் பற்றி இவர்கள் மிக பலவீனமான மதிப்பீடுகளைக் கொண்டுள்ளார்கள் என்பதை உணர்த்தி நிற்கிறது.
இவற்றுக்கும் கலைஞரின் பெரியார் திடல் உரையிலேயே பதில் இருக்கிறது. “நானே வளர்ந்தேன் - இவைகளையெல்லாம் நானே கற்றுக் கொண்டேன் - நானை இவைகளையெல்லாம் சிந்தித்தேன் - நானே புதிய ஞானோதயம் பெற்றேன் - எனவே இவைகளை யெல்லாம் சொல்லுகிறேன் என்று சொல்வது சுலபம்... ஆனால் எதிர்காலத்திலே வரலாறு எழுதுகின்றவர்கள் உண்மைகளைத்தான் எழுதுவார்கள். அந்த உண்மைகளை எழுதும் போது, அதிலே ஒரு பொய்யனாக நான் இருக்க விரும்பவில்லை” என்று கலைஞர் அருமையாக படம் பிடித்துள்ளார்.மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் போன்றவர்கள் காங்கிர° கட்சியிலே இருந்தாலும்கூட - தமிழ் நாட்டில் இன்று கிராமங்களில் தலைவிரித்தாடும் சாதி, மூடநம்பிக்கைகள், கட்டை பஞ்சாயத்துகளுக்கு எதிரான சமூகப் புரட்சியை கலைஞர் நடத்திட வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன் வைக்கிறார்கள். தங்கபாலு போன்றவர்கள் - சமூகநீதிக்கு நேர்ந்துள்ள ஆபத்துகளை பட்டிய லிட்டுக் காட்டுகிறார்கள்.
ஆனால், பெரியார் இயக்கத் தலைவர்களோ, பாராட்டுப் பத்திரங்களை வாசிப்பதற்கு மட்டுமே துடித்துக் கொண்டு நிற்கிறார்கள். பெரியாரையும் - அண்ணாவையும் மிஞ்சிய சாதனையாளர்கள் எவருமே இருக்கக் கூடாது என்று நாம் கூறவரவில்லை; அத்தகைய சாதனையாளர், புரட்சியாளர் வருவதுதான் பெரியார்-அண்ணா கொள்கைக்கான வெற்றியாக இருக்க முடியும். ஆனால், சமூகத்தில் அந்த நிலை வந்து விட்டதா என்பதே பரிசீலிக்கப்பட வேண்டிய கேள்வி. பெரியார் விருது பெற்றுள்ள கலைஞரின் பார்வைக்கு நாம் கவலையுடன் சில பிரச்சினைகளை அவரது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
• தமிழக கிராமங்களில் - சாதி வெறியும் தீண்டாமை யும் தலை விரித்தாடுகிறது. இரட்டைக் குவளைகள், இரட்டைச் சுடுகாடுகள் தொடருகின்றன; தீண்டப் படாத மக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்படுகிறது; சாதி மறுப்புத் திருமணங் களுக்கு பாதுகாப்பு இல்லை; சாதி வெறிக்கு கட்சித் தடைகள் ஏதுமில்லை; ஆதிக்கசாதியினர் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் சாதி வெறியில் ஒரே அணி தான். சாதி வெறிக்கோ, தீண்டாமைக்கோ, துணை போகும் கழகத்தினர் மீது - சாதி ஒழிப்பு பேசும் கழகங்கள் நடவடிக்கை எடுத்தாலே கிராமங்களில் பாதி சாதிக் கலவரங்கள் நின்று போகும் வாய்ப்பு உண்டு! தி.மு.கழகம், இதை ஏன் கண்டிப்பாக பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி.
• தமிழ்நாட்டில் - மதவெறி சக்திகள் தலைவிரித்தாடு கின்றன. பெரியாரைப் பற்றி இந்து முன்னணி - பா.ஜ.க. - மேடைகளில் எச். இராஜா போன்ற பார்ப்பனர்கள் கீழ்த்தரமாக பேசுகிறார்கள். பெரியார் இயக்கங்களின் கூட்டங்களில் கலவரம் செய்கிறார்கள். கோவையில் - இயக்குனர் சீமான் பேசிய பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் பெரும் கலவரத்தை நடத்தினர். சென்னைக்கு அருகே உள்ள போரூரில் தொடர்ந்து பெரியார் பிரச்சாரக் கூட்டங்கள் மதவெறியர்களால் குலைக்கப்படுகின்றன; மத வெறி சக்திகளுக்கு காவல்துறை ஆதரவாகவே செயல்படுகிறது.
• பெரியார் திராவிடர் கழகம் - மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்கள் நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது. திராவிட இயக்க தமிழர் பேரவை - தி.மு.க.வின் ஆதரவு அமைப்பு தான். அந்த அமைப்பின் சார்பில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பிரச்சாரக் கூட்டம் நடத்த அனுமதி கேட்ட போது, காவல்துறை மறுத்து விட்டது; அதற்கு காவல்துறை கூறிய காரணம் தான் விசித்திரமானது.
சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி தலைமை அலுவலகம் இருப்பதாலும், அதே பகுதியில் இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் தங்கியிருப்பதாலும், அனுமதி மறுக்கப்படுகிறது என்று காவல்துறை எழுத்து மூலம் பதில் தந்துள்ளது. மீண்டும் அண்ணா நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டும், காவல் துறை எழுத்துப்பூர்வமாக அண்ணா நூற்றாண்டு விழாவுக்கும் அனுமதி மறுத்துள்ளது.
• அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றுமாறு - அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் பிறப்பித்த அரசாணை இன்னும் உயிரோடு இருக்கிறது. ஆனால், அரசு அலுவலகங்களும், காவல் நிலையங்களும் - பஜனை மடங்களாகவே காட்சி அளிக்கின்றன.
• தமிழ் நாட்டில் அரசு அலுவலகங்களில் தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கான 20000 பதவிகள் பூர்த்தி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் படித்து வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலையில், இப்படி ஒரு அவலம் தொடருகிறது.
• இப்போது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் வேலை வாய்ப்புகளை - தனியார் துறையில் மட்டும் தான் பெற முடியும். பொதுத் துறை நிறுவனங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடுகளில் தனியார் துறைகளில் இடஒதுக் கீட்டை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதற்காகவே அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழு தனியார் துறை இடஒதுக்கீட்டையே கைகழுவ முடிவு செய்துவிட்டது. அறிவிப்பு வந்து 15 நாட்கள் ஓடி விட்டன. அரசு சார்பில் - எந்த எதிர்ப்பும் வரவில்லை. பார்ப்பனர்களுக்கு ஆதரவாக உ.பி.யில் ஆட்சி நடத்தும் முதல்வர் மாயாவதி கூட மாநிலத்தின் தனியார் தொழிற்சாலைகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை, சட்டப்பூர்வமாக்கியிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
• 17 ஆண்டுகாலமாக சிறையில் வாடிவரும் நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர், தங்களின் விடுதலையை கோரி நிற்கிறார்கள். ராஜிவ் கொலையில் நேரடி தொடர்புடைய பலரும் மரணமடைந்துவிட்டனர். வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு சட்டரீதியான நியாயங்களும், மாநில அரசுக்கு உரிமைகளும் இருந்தும்கூட கலைஞர் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா என்ற கேள்வியை வேதனையுடன் எழுப்புகிறோம்; கலைஞர் ஆட்சியிலே இவர்களுக்கு விடிவு கிடைக்காவிடில் - வேறு எந்த ஆட்சியில் கிடைக்க முடியும்? இதைப் பரிசீலிப்பதற்கு - தகுதியுள்ள ஒரே ஆட்சி கலைஞர் ஆட்சி தானே? அன்று தூக்கில் தொங்கிய மலேசியா கணபதிக்கு குரல் கொடுத்த கலைஞர், தோழர் தியாகு - புலவர் கலிய பெருமாள் உள்ளிட்டோரை, தூக்குத் தண்டனையிலிருந்து, காப்பாற்றிய கலைஞர், இன்று, பெரியார் குடும்பத்தின் பிள்ளை பேரறிவாளனுக்கு, நளினிக்கு - தோழர்களுக்கு பரிவு காட்ட வேண்டாமா?
• தமிழ்ச் செல்வன் - படுகொலைக்கு கண்ணீர் கவிதை வடித்து, உள்ளத்தின் உணர்வுகளை வெளிக்கொட்டினார் கலைஞர். பார்ப்பன சக்தி கள் உடனே மிரட்டின. அவர்கள் எதைச் செய் தாலும் மிரட்டவே செய்வார்கள். எந்தச் சூழலி லும் அவர்களின் ஆதரவுக் கரம் கலைஞரை நோக்கி நீளப் போவது இல்லை. ஈழத் தமிழர் களைக் கொன்று குவிக்கும் இலங்கை இராணு வத்துக்கு ஆயுதங்களை வழங்கி வரும் இந்திய அரசு - அவர்களின் ராணுவத்துக்கு உதவிட - இந்தியாவின் பொறியாளர்களையும் அனுப்பி வைத்துள்ள செய்தி அம்பலமாகியுள்ளது. எம்.கே. நாராயணன் - ‘இந்து’ ராம் - சுப்ரமணியசாமி - ஜெயலலிதா - இல.கணேசன் - இராம. கோபாலன் என்ற பார்ப்பன வட்டம், ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு எதிராக, தங்கள் முழு செல் வாக்கையும் பயன்படுத்தி வரும் நிலையில், கலைஞர் ஆட்சி, மவுனம் காக்கலாமா? உண்மை யான வன்மையான கண்டனத்தை எழுப்ப வேண்டாமா?
• அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் மகத்தான சமூகப் புரட்சியை தமிழக முதல்வர் கலைஞர் செய்து காட்டினார். பார்ப்பனர்கள் மீண்டும் உச்சநீதிமன்றம் போனார்கள். கோயில்களில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களை மீறக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து விட்டது. ஏற்கனவே கலைஞர் மிகவும் சாதுர்யமாக காய் நகர்த்துகிறார் என்று என்ன காரணத்தினாலோ கி.வீரமணிகள் எழுதினார்கள். அதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கை களை அரசு மேற்கொள்ளவில்லை.
• அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு 6 கோயில்களில் தொடங்கியது. அதில் அனைத்து சாதியையும் சார்ந்த 207 பயிற்சியாளர்கள் ஓராண்டு பயிற்சியையும் முடித்தனர். இப்போது என்ன நிலைமை? பயிற்சி முடித்து வெளிவந்து,. எந்த கோயிலிலும் அர்ச்சகராக நியமிக்க முடியாத நிலைக்கு, அவர்கள் உள்ளாகி விட்டனர். உச்சநீதிமன்றத்தில் தடையாணை இருப்பதால், நியமனம் செய்ய முடியாது என்று இந்து அறநிலையத் துறை கை விரித்து விட்டது. அனைத்து சாதியினரும், அர்ச்சகர் ஆகும் திட்டம் - மீண்டும் பெரியார் ‘இதயத்தில் தைத்த முள்ளாகவே’ மாறிவிட்டது.
• எல்லாவற்றிற்கும் மேலாக பெரியார் - அண்ணா வழி ஆட்சியில் பெரியார் விருது பெற்ற பிறகும் - கலைஞர் - பெரியார் நூல்களை நாட்டின் பொதுச் சொத்தாக அறிவிக்கத் தயங்கலாமா?
பெரியாரை - தனி உரிமையாக்கும் சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக இந்த வரலாற்றுக் கடமையை ஆற்றத் தவறலாமா? என்று கேட்கிறோம்.- இப்படி எத்தனையோ சமூகப் பிரச்சினைகள் சூழ்ந்து நிற்கின்றன. சிலவற்றை மட்டுமே பட்டிய லிட்டோம். இவை அனைத்தும் ஒரு ஆட்சியின் கொள்கை முடிவாலும், நிர்வாக முடிவாலும் செயல்படுத்தக் கூடியவைகள் தான்.
மக்கள் நலத் திட்டங்களில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது இந்த ஆட்சி; அதை எவரும் மறுக்க முடியாது. அதையும் தாண்டிய ஆழமான சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது முன்னுரிமைக்குரிய செயல்பாடு அல்லவா?இந்தப் பிரச்சினைகளில் கலைஞர் உரிய கவனம் செலுத்தி செயல்படும்போது, கலைஞருக்கு கிடைத்த பெரியார் விருது பெருமையுறும், கலைஞர் மேலும் பெருமை பெறுவார். கலைஞரின் புகழ் வரலாற்றில் பதிந்து நிற்கும்.
நிலைத்த புகழ் செயல்களில் தான் அடங்கியிருக் கிறது. மேடைப் புகழ்ச்சியாளர்களின் புகழாரங்களில் அல்ல என்பது கலைஞருக்கு தெரியாத ஒன்றா?
- ‘இரா’

‘பெரும் குழு’வின் ‘ஜால்ரா’ புரட்சி!

“ஏண்டா தம்பி, மலம் கழிக்கும்போது வெள்ளரிக்காய் தின்கிறாயே” என்று ஒரு பெரியவர் கேட்டதற்கு, “அது பற்றி உனக்கு என்ன? நான் இப்படியும் சாப்பிடுவேன்; அதில் தொட்டுக் கொண்டும் சாப்பிடுவேன்” என்று வீரத்துடன் பதிலளித்தானாம்! வீரமணியின் ‘விடுதலை’ ஏடு அந்த நிலைக்கு வந்துவிட்டது. ‘தினமணி’, ‘தினமலர்’ போன்ற பார்ப்பன ஏடுகள் பெரியாருக்கு எதிராக எழுதும்போதுதான் பெரியாரிய ஏடுகள் சீறி எழுந்து பதிலடி தருவது வழக்கம். இப்போது ‘விடுதலை’ ஏடு பெரியாருக்கு ஆதரவாக எழுதியதற்காக சீறிப் பாய்கிறது. பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று ‘தினமணி’ எழுதியிருப்பது - அதன் பார்ப்பன விஷமத்தைக் காட்டுகிறது என்கிறார், ஆஸ்தானப் புலவர் ‘மின்சாரம்!’
‘தினமணி’யின் கட்டுரையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று கட்டுரையைத் தொடங்கியவர் முடிக்கும் போது, “இவை எல்லாம் திராவிடர் கழகத்துக்கு அத்துப்படியானவையே என்பதை இலேசான புன்னகை யோடு இந்த அக்கப் போர்களை நிராகரிக்கிறோம்” என்று முக்கால் பக்கம் மாங்கு மாங்கு என்று எழுதி நிரப்பியப் பிறகு நிராகரிக்கும் முடிவுக்கு வருகிறார்.
அவர்கள் லேசான புன்னகையை தாராளமாக சிந்தட்டும். ஆனால், “பெரியார் நூல்களை பரப்பாமல் தடுப்பதற்கு தி.க. கடுமையாக களத்தில் இறங்கிப் போராடி வருகிறது. அம்பேத்கரின் ராமன் - கிருஷ்ணன் புதிர் நூலை அரசு வெளியிடக்கூடாது என்று மகாராஷ்டிராவில் - பா.ஜ.க., பெரும் கலவரத்தில் இறங்கியது. இங்கே, பெரியாருக்கு சொந்தம் கொண்டாடும் கட்சியே, அதைப் போன்ற பெரியார் நூல்களையெல்லாம், அரசு நாட்டுடைமை யாக்க அனுமதிக்க மாட்டோம். ரத்தம் சிந்தி தடுப்போம். தமிழ்நாட்டில் எவன் வெளியிடுவான் பெரியார் நூல்களை? பார்த்து விடுகிறோம் ஒரு கை; என்று மீசையை முறுக்கிக் கொண்டு கிளம்பி விட்டது. அப்பாடா! இனி நமக்கு தமிழ்நாட்டில் வேலையே இருக்காது போலிருக்கே” என்று லேசாகப் புன்னகைக்கும் புன்னகை நாயர்களைப் பார்த்து - பா.ஜ.க. பரிவாரங்கள் வாய்விட்டு சிரித்து - கும்மாளம் போடும்.
‘சிரியுங்கள்; சிரியுங்கள்; நீங்கள் என்னதான் சிரித்தாலும் - எங்களின் பெரியார் நூல்களை முடக்கும் பணியிலிருந்து திசை திருப்பவே முடியாது. நாங்கள் அடையாறு ஆலமரமாக நிற்கும் தமிழர் தலைவரின் நிழலில் வந்தவர்கள்!’ என்று அப்போதும் மின்சாரங்கள் பேனாவைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள்!
“ராமனை செருப்பாலடிக்க வேண்டும்; சூத்திரன் என்று சொல்லும் குழவிக்கல் சாமியை குப்புறத் தள்ளி துணி துவைக்கவேண்டும்” என்ற பெரியார் கருத்தை எல்லாம் அரசு வெளியிடுமா - இப்படி ஒரு கேள்வி! ஏன் வெளியிட்டால் என்ன, பிரளயம் அழிந்து விடுமா? அம்பேத்கர் பார்ப்பன எதிர்ப்பு கருத்துகளை மகாராஷ்டிர அரசு வெளியிடவில்லையா? அதுகூட இருக்கட்டும். நாட்டுடைமையாக்குவது என்றால் அரசு மட்டுமே வெளியிட வேண்டும் என்பது அதன் பொருள் அல்ல. வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் அனைவரும் வெளியிடலாம் என்பதுதான் அதன் பொருள்! இந்த அரிச்சுவடியைப் புரிந்து கொண்டு, அந்த லேசான புன்னகையை வீசுங்கள் அய்யா! “பார்ப்பன ஜெயலலிதாவிடம் எங்கள் தமிழர் தலைவர்தான் 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி - வேலை வாங்கினார்” என்று அன்றைக்கு ‘மாஞ்சி மாஞ்சி’ எழுதிய மின்சாரங்கள், இன்று ‘தினமணி’ பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கு என்று கேட்கும்போது மட்டும், குரலை மாற்றிக் கொள்வது ஏன்? தலைவர் சுருதி பேத புரட்டல்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் மின்சாரங்கள் பதில் சொல்வார்களா?
பெரியார் திராவிடர் கழகம் சிறு குழுவாம்! “இந்தச் சிறுகுழுவை பாராட்டுவதாலோ, அந்தக் குழுவுக்காக வக்காலத்து வாங்குவதாலோ எவ்வித இழப்பும் பார்ப்பனர்களுக்கு கிடையாது” என்று எழுதுகிறது மின்சாரம்! ஸ்ரீரங்கத்தில் இவர்களே வைத்த பெரியர் சிலையை மதவெறி சக்திகள் உடைத்தபோது - இந்த “சிறு குழு”வின் வலிமையை பார்ப்பனர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அப்போது மூலையில் முக்காடு போட்டு, பதுங்கிக் கொண்ட “தமிழர் தலைவர் தலைமையில் அணி வகுக்கும் பெரும்சேனை”யின் வீரமும், பார்ப்பனர்களுக்கு நன்றாக தெரியும்! இவர்களின் ‘பெரும் குழுவும்’, பெரும் பட்டாளமும் பார்ப்பனர்களை நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கும் “ஜால்ரா” புரட்சிகளை நாடு பார்த்து நகைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
பெரியார் நூல்கள் நாடு முழுவதும் மக்களிடையே பரவிடக் கூடாது என்பதற்காகவே பெரியார் இயக்கத்தை நடத்தி வரும் “கொள்கைக் குன்றுகள்” நாட்டு மக்கள் மத்தியில் சிரிப்பாய் சிரிப்பதை புரிந்து கொண்டு இந்த “இலசான புன்னகையாளர்கள்” பேனாவை தூக்குவது நல்லது!


72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு
திரிபுவாத திம்மன்கள் - யார்? (2)

“பெரியாரைப் பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும், சுயநல துரோகிக் கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம்” - என்று கடந்த 2008, செப்.30 ஆம் தேதி ‘விடுதலை’ ஞாயிறு மலரில் ஒரு கேள்விக்கு கி.வீரமணி பதிலளித்திருக்கிறார். திரிபுவாதிகளுக்கு அவர் அழகான சொற்றொடரை பட்டமாக வழங்கியுள்ளார்! அதற்கு நன்றி தெரிவித்து, “திரிபுவாதி திம்மன்கள்” பற்றிய இந்தத் தொடரைத் தொடருகிறோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு வழி செய்யும் சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் பெரியார் உயிருடன் இருக்கும்போதே கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் வழக்கு தொடரவே உச்சநீதிமன்றம் சட்டத்தை முடக்கும் தீர்ப்பை 14.3.1972 இல் வழங்கியது.
சூத்திர இழிவை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதால் பொங்கி எழுந்த பெரியார் 1972 முதல் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 19 வரை தனது பேருரைகளிலும், தலையங்கங்களிலும், கட்டுரைகளிலும் உச்சநீதிமன்றத்தைக் கடுமையாக சாடினார். 28.5.1972 இல் சென்னையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டைக் கூட்டினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அரசியல் சட்டத்தைத் திருத்தி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே பெரியார் வலியுறுத்தி வந்தார்.
“இந்திய அரசியல் சட்டம் என்பது சமுதாயத் தன்மையைப் பொறுத்தவரை மனுதர்மம் என்னும் பார்ப்பன உயர் வாழ்வுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் சட்டமாகவே பார்ப்பனராலேயே உண்டாக்கப்பட்ட சட்டமாகையால் அதை மாற்றியமைக்க வேண்டியது மிக மிக அவசியமானது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது” என்று அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் இழிவு ஒழிப்பு மாநாட்டு உரை, பெரியார் பேச்சு, தீர்மானங்கள், விடுதலை தலையங்கங்களையும் சேர்த்து ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் “கோயில் பகிஷ்காரம் ஏன்?” என்ற தலைப்பில் நூலாக 1972 இல் வெளியிடப்பட்டது. அதன் இரண்டாம் பதிப்பு 1982 இல் வெளி வந்தது.
11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 1993 இல் “அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்று சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்ட நூலில் - உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து பெரியார் கூறிய கருத்துகளும், பெரியார் காலத்தில் திராவிடர் கழகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. இதற்குப் பெயர் என்ன?
அது மட்டுமல்ல, மேற்குறிப்பிட்ட அதே வெளியீட்டில் 5.4.1972 அன்று பெரியார் சென்னை கடற்கரைப் பேருரையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டிருந்தது. அதில் அரசியல் சட்டத்தாலும், உச்சநீதிமன்றத்தாலும் நாம் நாதியற்றவர் களாக்கப்பட்டு விட்டோம் என்று பெரியார் பேசிய கீழ்க்கண்ட பகுதியை நீக்கிவிட்டு வெளியிட்டுள்ளார்கள். “இன்றுள்ள அரசியல் சட்டத்திடையே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினாலே நாம் நாதியற்றவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறோம். இதற்கு நாம் பரிகாரம் காண வேண்டும். அதற்காகவே மே 7 ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழக மாநில மாநாட்டினைக் கூட்டி, அதில் முடிவு செய்து, மக்கள் மத்தியில் நடைமுறைக்குக் கொண்டு வருவோம்.”
அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கண்டித்து, பெரியார் தெரிவித்த கருத்துகள் 1972 ஆம் ஆண்டில் “கோயில் பகிஷ்காரம் ஏன்?” என்ற தலைப்பில் நூலாக வெளி வந்தபோது இடம் பெற்ற பகுதிகள் வீரமணி காலத்தில் “அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்று தலைப்பிடப்பட்டு வரும்போது அதில் மட்டும் பெரியார் கருத்துகள் இருட்டடிக்கப்பட்டது ஏன்? அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடை ஏதும் விதிக்கவில்லை என்று, கி.வீரமணி தனது கருத்தை மாற்றிக் கொண்டதே இதற்குக் காரணம்.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கி.வீரமணி அவ்வப்போது வெவ்வேறு கருத்து வெளியிட்டு வந்திருக்கிறார்:
தந்தை பெரியார் வாழும் காலம் வரை அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பெரியார் கருத்தை வலியுறுத்தி வந்தார். அய்யாவுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் தலைமைக்கு வந்தபோதும் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தே திராவிடர் கழக சார்பில் முன்வைக்கப்பட்டது.
பிறகு எம்.ஜி.ஆர். முதல்வராக வந்த பிறகு இது பற்றி ஆராய நீதிபதி மகராசன் தலைமையில் 24.9.1979 இல் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரை 27.8.1982 இல் வெளியிடப்பட்டது. ஆகமப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகத் தடை ஏதும் இல்லை என்று குழு கூறியது. ஆனாலும், இக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசியல் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி மகராசன் கூறியிருந்தார். அரசியலமைப்போடு மோதுதலைத் தவிர்த்து, “பாதுகாப்பு வளையத்துக்குள் பதுங்கிக் கொள்ளும் குணாம்சத்தைக் கொண்ட வீரமணி, அரசியல் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பது மகராசனின் தனிப்பட்ட கருத்து என்று வியாக்யானம் செய்து, சட்டத்திருத்தம் செய்யாமலே மகராசன் .குழுவின் பரிந்துரையை அமுலாக்க முடியும் என்று பேச ஆரம்பித்து விட்டார். இவருக்கு வாதத்தை எடுத்துக் கொடுத்தவர் மறைந்த நீதிபதி கே. வேணுகோபால், வீரமணி தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டதால், ‘சட்டத்தைத் திருத்த வேண்டும்’ என்று பெரியார் தெரிவித்த கருத்துகள் கி.வீரமணி வெளியிட்ட நூலில் இருட்டடிப்புக்குள்ளாக்கப் பட்டன. வீரமணி தனது கருத்துக்கு ஏற்ப பெரியார் கருத்தை இருட்டடித்தார்.
இதிலே இன்னுமொரு புரட்டையும் வீரமணி செய்தார். 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கி.வீரமணி, உச்சநீதிமன்றத்தின் சட்டத்துக்கு புதிய வியாக்யானம் தரத் தொடங்கினார். அதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராக தடை விதிக்கவில்லை என்ற வியாக்யானம். தமிழக அரசு மகராசன் குழுவை நியமித்ததோ - 1979 ஆம் ஆண்டில். இதற்கும் ‘அறிவுசார் சொத்துரிமை’ கோர முடிவு செய்துவிட்ட கி.வீரமணி, ஒரு போடு போட்டார். தாம், இப்படி ஒரு கருத்தை கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆர். அரசு ஏற்றுக் கொண்டு மகராசன் குழுவையே நியமித்தது என்று கூறிவிட்டார். அதாவது, 1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?” என்ற நூலிலேயே இந்த ‘அறிவுசார் அபத்தங்களும்’ இடம் பெற்றுள்ளன!
அதன் பிறகு ‘கேரள தேவஸ்வம் போர்டு’ நிர்வாக உத்தரவின் மூலம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கியிருக்கும் ஆணையை எடுத்துக்காட்டி, கி.வீரமணி, அரசே நேரடியாக ஆகமப் பள்ளிகளைத் தொடங்கும் யோசனையை முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் முன் வைத்தார். மகராசன் குழு பரிந்துரை செய்ததோ, ஆகமப்பாடசாலைகளை அமைக்க வேண்டும் என்பதாகும். ஆனால் ஜெயலலிதா அறிவித்ததோ வேத-ஆகமப் பாடசாலைகளை அமைக்கும் திட்டம். ஆகமப் பாடசாலையில் வேதம் எதற்கு என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய வீரமணி, அதற்கும் திரிபுவாதம் செய்தார்.
“வேத ஆகமம் படிக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே என்றால், அது புதிதாக இப்போது ஏற்படும் நிலை அல்ல. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு முன்பிருந்த நிலைதான்” (ஆதாரம்: ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?’ நூல்) என்று வீரமணி சமாதானம் கூறினார். பழுத்த ஆத்திகவாதியான நீதிபதி மகராசன், வீரமணியைவிட முற்போக்காளராகவே இருக்கிறார். ஆகமப் பயிற்சிப் பள்ளியில் வேதம் கற்பிக்கத் தேவையே இல்லை என்றார் மகராசன். “பூசையை சமஸ்கிருதத்தில் தான் செய்ய வேண்டும்; தமிழில் செய்யக் கூடாது என்று ஆகமத்தில் எங்கும் சொல்லவில்லை” (மகராசன் குழு பரிந்துரை; தமிழ் அர்ச்சனை பற்றிய குறிப்பு; பத்திகள் 12, 13) என்று மகாராசன் அடித்துக் கூறினார். ஆனால், சமஸ்கிருத வேதத்தைக் கற்பிப்பதற்கு ஆதரவாக வாதாடினார் கி.வீரமணி! ஏன்? பார்ப்பன ஜெயலலிதாவின் ‘வேத ஆகமப் பாடசாலை’ அறிவிப்பை நியாயப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு; ஜெயலலிதாவின் ஆதரவைப் பெறத் துடிக்கும் அவரது ‘யுக்தி’ கொள்கையை தோற்றோடச் செய்து விட்டது.
மீண்டும் சட்டத்திருத்தம் செய்யப்படாமலே இப்போது கலைஞர் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு வந்தது! மரபுகளை மாற்றக் கூடாது என்றது உச்சநீதிமன்றம். தமிழக அரசு எதிர் வழக்காடவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிப் பள்ளிகளை தி.மு.க. ஆட்சி திறந்தது. கி.வீரமணி - தஞ்சை வல்லத்தில் கலைஞருக்கு பாராட்டு விழாவை நடத்தி முடித்தார். பெரியார் லட்சியம் நிறைவடைந்துவிட்டது என்று அறிவித்தார். இனி - கலைஞர் ஆட்சி செய்வதற்கு ஏதுவுமில்லை. எல்லாமுமே முடிந்துவிட்டது என்றார். இப்போது என்ன நிலை?
கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி ‘இந்து’ நாளேட்டில் அதிர்ச்சியான செய்தி வெளி வந்துள்ளது.
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சியை முடித்த அனைத்து சாதியைச் சார்ந்த மாணவர்கள் 207 பேரும் ஓராண்டு பயிற்சியை முடித்துவிட்டு, எந்தக் கோயிலிலும் பணி நியமனமின்றி தவிக்கின்றனர்; வேறு வேலைக்குப் போக வாய்ப்புகளைத் தேடுகிறார்கள்; காரணம் - உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு முடியும் வரை - இவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது என்று அரசு கூறிவிட்டது.
கலைஞர் சாதுர்யமாக காயை நகர்த்தியதாக புகழாரம் சூட்டிய கி.வீரமணி, இப்போது வாய்திறக்கவில்லை. கலைஞரைப் பாராட்டுவதற்கான ‘யுக்திகளுக்காக’ கொள்கைகளைப் பலிகடாவாக்கும் வீரமணியின் மற்றொரு துரோகம் இது.
சூத்திர இழிவு ஒழிப்பை முன்னிறுத்தி சட்டத்தையே திருத்து; இல்லையேல் எங்கள் நாட்டை பிரித்துக் கொடு என்று பெரியார் முழங்கிய முழக்கம் - வீரமணியால் திரிபுபடுத்தப்பட்டதற்கு இவை சான்றுகளாகும்.
(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


பெரியார் சிலைக்கு ஜப்பான் ஆய்வு மாணவி மாலை
ஜப்பானிலுள்ள ஒகாக்கா பல்கலைக் கழகத்தில் மானுடவியல் துறையில் ஆய்வு செய்து வரும் மாணவி அக்கிக்கோ, தமிழகத்தில் தாய்த் தமிழ்க் கல்வி பற்றி மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் ஆய்வு செய்து வருகிறார். கடந்த செப்.11 ஆம் தேதி மேட்டூர் வந்த அவர், அக்.11 ஆம் தேதி வரை மேட்டூரில் தங்கி ஆய்வு நடத்துகிறார். அக்.11 முதல் 14 ஆம் தேதி வரை கோபி உள்ளிட்ட தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் ஆய்வு நடத்துகிறார். அக்டோபர் இறுதியில் ஜப்பான் திரும்புகிறார்.
பெரியார் பிறந்த நாளான செப். 17 ஆம் தேதி சேலத்தில் கழகத் தலைவர் மற்றும் தோழர்களுடன் ஜப்பான் மாணவி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அண்ணா உருவத்தில் கழகத்தினர் ஊர்வலம்

அண்ணா நூற்றாண்டு விழா தொடங்கிய நாளான செப். 15 திங்கள் கிழமை காலை 9 மணியளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் அருகிலிருந்து நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் 100 பெரியார் திராவிடர் கழகத்தினர் அண்ணாவை போல உடையணிந்து, அண்ணாவின் உருவத்திலேயே ஊர்வலமாக வந்தனர்.
ஒவ்வொரு அண்ணாவிற்கும் அண்ணாவின் கொள்கைகளையும், தொண்டையும் குறிக்கும் வகையில் தனித்தனி பெயர்கள் வைக்கப்பட் டிருந்தன. ஊர்வலத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன் தலைமை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச் சாமி, பொள்ளாச்சி பிரகாசு, மாண வரணி பன்னீர் செல்வம், கோவை மாநகர தலைவர் ம.ரே. இராசக் குமார், செயலாளர் வே. கோபால், பொருளாளர் மணிமாறன், அமைப் பாளர் இ.மு. சாஜித், அலுவலக பொறுப்பாளர் சா. கதிரவன், மேட்டு பாளையம் ப. இராமச்சந்திரன், நகர செயலாளர் சந்திரசேகர், அமரன், பொள்ளாச்சி நகர செயலாளர் வெள்ளியங்கிரி, வட்ட செயலாளர் கா.சு. நாகராசு, தெற்கு மாவட்ட செயலாளர் கருமலையப்பன், வடக்கு மாவட்ட செயலாளர் துரைசாமி, ஆனைமலை ஒன்றிய செயலாளர் ருக்குமணி, நகர செயலாளர் அரிதாசு, உடுமலை நகர செயலாளர் பாக்கிய நாதன் மற்றும் கோவை மாநகர தோழர் கள் உட்பட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முடிவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் துரோகம்! கழகத் தலைவர்
கொளத்தூர் மணி கண்டனம்

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி 10.9.2008 அன்று விடுத்துள்ள அறிக்கை: ஈழத்தில் தமிழர்கள் வாழும் வவுனியாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி -
தமிழகத் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழர்கள் வாழும் வவுனியா பகுதியில் இலங்கையின் ராணுவ முகாம் மீது விடுதலைபுலிகள் நடத்திய தாக்குதலில் ஏ.கே. தாக்கூர், சிந்தாமணி ரவுட் எனும் இரண்டு - இந்திய பொறியாளர்கள் காயமடைந்து, கொழும்பு மருத்துவமனையில் இலங்கை ராணுவத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் இலங்கை அரசுக்கு, இந்தியா ராணுவ உதவி செய்யக் கூடாது என்ற தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தியதோடு, பாதுகாப்புக் கருவிகளை மட்டுமே வழங்கி வருவதாகக் கூறி வந்தது. இந்திய அரசின் கூற்று அப்பட்டமான பொய் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள ராடார் கருவியை இந்தியா வழங்கியிருப்பதோடு மட்டுமல்ல, அதைப் பராமரிக்க இந்திய பொறியாளர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. விடுதலைப்புலிகள் விமானத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த ராடார் கருவிகள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகும். சிங்களர்கள் வாழும் பகுதியில் அல்ல.
2005 ஆம் ஆண்டில் இந்த ராடார் கருவியை அன்பளிப்பாக வழங்கியுள்ள இந்திய அரசு - விடுதலைப் புலிகளின் விமானப்படை செயல்படத் தொடங்கிய பிறகு, மீண்டும் கடந்த 2007 மார்ச் மாதத்துக்குப் பிறகு ராடார் கருவியை மேலும் நவீனமாக்கி, பொறியாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது.
தமிழர்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமுக்கு, இத்தகைய பாதுகாப்புகளை இந்தியா வழங்குவது தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு துணை போவதோடு மட்டுமல்ல, தாக்குதலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளேயாகும். போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இலங்கையிலிருந்து பல்வேறு சர்வதேசக் குழுக்களின் பிரதிநிதிகள் வெளியேறிவிட்ட நிலையில் - இந்தியாவின் பொறியாளர்கள் இலங்கையின் விமானப் படையில் ‘அங்கமாகி’ பணியாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். ஏற்கனவே சக்தி வாய்ந்த போர்க் கப்பலை இலங்கை கப்பல் படைக்கு இந்தியா வழங்கியிருக்கிறது. இலங்கை விமானத்தின் குண்டு வீச்சிலிருந்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்தியா, அதற்கு கண்டனம் கூட தெரிவிக்க மனம் இல்லாதவர்கள், இலங்கை விமானப்படையைக் காப்பாற்ற துடிக்கிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது, கண் துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. கடந்த வாரம் தமிழக முதல்வர் கலைஞரை சந்தித்த பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் - இனி, இலங்கை கப்பல் படை தாக்குதலே நடக்காது என்று உறுதிமொழி கூறினார். அடுத்த சில நாட்களிலே மீண்டும் தாக்குதல் தொடங்கிவிட்டது. தமிழக முதல்வரும் சடங்குப்படி பிரதமருக்கு கண்டனக் கடிதம் எழுதி விட்டார்.
இப்படி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை இந்திய அரசு கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பது, தமிழர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கி வருகிறது என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களை ஏமாளிகளாகக் கருதிவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு தமிழர்களின் வாக்குகளைக் கேட்டு வர வேண்டிய நிலை இருப்பதை மறந்து விட்டு செயல்பட வேண்டாம். இந்திய அரசின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கை தமிழக அரசு வன்மையாகக் கண்டித்து, தடுத்து நிறுத்த முன்வரா விட்டால், இந்த துரோகப் பழியை தமிழக அரசும் சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் வலிமையான கண்டனக் குரலை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சேலம் கே.ஆர்.தோப்பூரில் பகுத்தறிவுப் பிரச்சார பொதுக் கூட்டம்
18.8.2008 திங்கள் கிழமையன்று கழகத்தின் சார்பில் சேலம் மாவட்டம் கே.ஆர். தோப்பூர் பவர் கிரிட் அருகில் மோட்டூர்காடு என்னும் பகுதியில் 7 மணிக்கு பகுத்தறிவுப் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையேற்க, கண்ணன் வரவேற்புரையாற்ற, செழியன் முன்னிலை வகித்தார். கோபி வேலுச்சாமி, சாலை இளவரசன் ஆகியோர் மூடபழக்கங்களை யும், போலி சாமியார்களின் மோசடிகளையும் விளக்கி சிறப்புரையாற்றினர். சந்திரசேகரன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நிகழ்ச்சி முடிந்து மேடையிலிருந்து இறங்கிய தோழர்களிடம் இளைஞர்கள் பலர் கடவுள் மறுப்பு பற்றிய பல்வேறு வினாக்களைத் தொடுத்தனர். அவர்களுக்கு சக்திவேல், காவை இளவரசன் மற்றும் இளம்பிள்ளை முத்து மாணிக்கம் ஆகியோர் அறிவியல் ஆதாரங்களுடன் பதில் அளித்தனர். இந்த விவாதமானது சுமார் 30 நிமிடங் களுக்கும் மேலாக நடந்தது. இந்த பொதுக் கூட்டமானது கழகத்தைச் சாராத பல நண்பர்கள் தாமாக முன் வந்து பொருளுதவி செய்து எங்கள் பகுதியில் ஒரு நிகழ்ச்சி நடத்துங்கள் என்று கேட்டுக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இது 16.5.2008 அன்று கே.ஆர். தோப்பூர் மூலக்கடை என்னும் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத் தின் தாக்கம் எனலாம். நிகழ்ச்சயில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த பல தோழர்களும் கலந்து கொண்டனர். பழனிச்சாமி நிகழ்ச்சியினை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

சென்னை சிந்தனை வட்டம்

28.9.2008 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு சென்னை வசந்த மண்டபத்தில் (செயின்ட் மேரீஸ் பாலம், விசாலாட்சித் தோட்டம், மயிலாப்பூர்), டாக்டர் எழிலன் (இளைஞர் இயக்கம்) “ஜாதகம் யாருக்கு சாதகம்” என்னும் தலைப்பில் பேசுகிறார். ஏற்பாடு : மொழிப் போர் தியாகிகள் பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டம்.

பெரியார் எவருக்கும் பதிப்புரிமை வழங்கவில்லை

பெரியார் எவருக்கும் பதிப்புரிமை வழங்கவில்லை சமுதாயப் புரட்சியாளர் பெரியாரின் சிந்தனைகள் மக்களுக்கானவையே!
உயர்நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன் தாக்கல் செய்த பதில் மனு


பெரியார் திராவிடர் கழகம் - குடிஅரசு தொகுப்புகளை வெளியிடுவதற்கு தடை கோரியும், பெரியார் திராவிடர் கழகம் தங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்றும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு மனுவுக்கு பதிலளித்து கழகத் தலைவர், பொதுச்செய லாளர் சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதி எம். ஜெயபால் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களுக்கு பதில் தருவதற்கு கி.வீரமணி தரப்பு வழக்கறிஞர்கள் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து வழக்கு 15 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பில் வழக்கறிஞர் துரைசாமியும், பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் சார்பில் பெண் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் அவர்களும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இரண்டு மனுக்களிலும் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் சுருக்கம்:

வழக்கறிஞர் துரைசாமி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
முதலில் மனுதாரர் கி. வீரமணி பெரியாரின் தொண்டர் என்றும், நாத்திகர் என்றும், மதத்தில் நம்பிக்கையற்றவர் என்றும் கூறுகிறார். ஆனால், அவர் தாக்கல் செய்த மனுவில் தன்னை ஒரு ‘இந்து’ என்று கூறியிருக்கிறார். இதிலிருந்தே அவர் உண்மையான பெரியார் தொண்டர் இல்லை என்பது தெரிகிறது. அதன் காரண மாகவே பெரியார் இறக்கும் வரை அறக் கட்டளையில் அவரை உறுப்பினராக நியமிக்க வில்லை.பெரியாரின் எழுத்துக்கள் தனது நிறுவனத்துக்கு மட்டுமே உரிமையுடையது என்று கி.வீரமணி கோருவதற்கு, சட்டப்படி உரிமை கிடையாது. 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டம் - 19வது பிரிவின்படி பதிப்புரிமை கோரும் ஒருவர், எழுத்தாளரிடமிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். பெரியார், அப்படி எழுத்துப்பூர்வமாக எழுதித் தரவில்லை. வீரமணி செயலாளராக உள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற “சொசைட்டி”யின் விதிகள் (22வது விதி) பெரியார் “வாங்கிய” சொத்துகளைப் பற்றித் தான் குறிப்பிடு கின்றனவே தவிர, படைப்பாற்றலால் உருவாக்கப்படும் பேச்சு எழுத்துகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே, மனுதாரரின் அறக்கட்டளை விதிகளே பெரியார் நூல்களுக்கு உரிமை கோராத போது தனது நிறுவனத்துக்கு உரிமையில்லாத ஒன்றின் மீது மனுதாரர் இடைக்கால தடை கோர முடியாது.
பெரியார் தனது எழுத்துகளும், பேச்சுகளும் மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று விரும்பிய தலைவரே தவிர, அதை வைத்து பொருள் ஈட்டும் எண்ணம் கொண்டவர் அல்ல. தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் - பரப்புங்கள் என்றும், தனது கருத்துகள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்றும் பெரியார் எழுதியும், பேசியும் வந்துள்ளார். அத்துடன், பெரியார் ஒரு தத்துவத் தலைவர். தனது தத்துவங்களை மக்களிடம் பொதுக் கூட்டங்கள் வழியாக பரப்பியவர். பொதுக் கூட்டங்கள் இல்லாத போது, தமக்கு சரி என்று தோன்றிய சிந்தனைகளை ‘குடி அரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’, ‘ரிவோல்ட்’ போன்ற பத்திரிகைகளில் எழுதினார். சமூகத்தை மாற்றியமைப்பதே அவரது தத்துவத்தின் முழுமைனயான நோக்கம். எனவே மக்களுக்கான பெரியாரின் தத்துவங்களுக்கு இந்த பூமிப் பந்தில் தனியுரிமை கோரும் உரிமை எவருக்கும் கிடையாது. மனுதாரரான கி.வீரமணி மட்டுமே, தனது தத்துவத்தைப் பரப்ப வேண்டும் என்று பெரியார் ஒரு போதும் கூறவில்லை. அதற்கான உரிமையுள்ளவர் மனுதாரர் மட்டுமே என்று பெரியார் தனது அறக்கட்டளை விதிகளிலும் குறிப்பிட வில்லை. பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புவதற்கு பெரியாரைப் பின்பற்றும் தொண்டர்களுக்குக்கூட உரிமை உண்டு.
எல்லோருக்கும் பொதுவானவர் பெரியார். அவர் தேசத்துக்கே பொதுவானவர். மனுதாரரும், அவரது அறக்கட்டளைக்கும் மட்டுமே சொந்தமானவர் அல்ல. அவரது எழுத்துக்களைப் போற்றிப் பாதுகாக்கும் உரிமை - ஒவ்வொரு பெரியார் தொண் டருக்கும் உண்டு. இதில் மக்களை மனுதாரர் கட்டுப்படுத்த முடியாது. அது மட்டுமல்ல, பெரியாரின் சிந்தனைகளை காலவட்டத் துக்குள்ளும் அடக்கிட முடியாது. அவை காலங்களைக் கடந்து நிற்பவை. மனித குலம் நீடிக்கும் வரை அவரது சிந்தனைகளை வெளி யிடவும், பரப்பவும் பெரியார் தொண்டர் களுக்கு உரிமை உண்டு. மனுதாரரான கி.வீரமணி மட்டுமே பெரியாரைப் பின்பற்றுபவர் அல்ல; ஆயிரக் கணக்கில், இலட்சக்கணக்கில் பெரியாரைப் பின்பற்று வோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே பெரியார் கொள்கைகளைப் பரப்பும் உரிமை உண்டு. பெரியார் தனது வாழ்நாளின் மிக கடைசி காலத்தில்தான், தானும் 12 பேருடனும் சேர்ந்து இந்த அறக்கட்டளையை நிறுவினார். அதுகூட தனது தனிப்பட்ட அசையா சொத்துகள் விண்ணப்பதாரரான கி.வீரமணி போன்ற எந்த தனிப்பட்ட நபர்களுக்கும் போய் சேர்ந்து விடாமல், பரவலாக மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே உருவாக்கினார்.
பெரியார் பதிப்புரிமையை தன்னிடம் எழுத்துப் பூர்வமாகக் கொடுத்துள்ளார் என்ற சான்று ஆதாரத்தைக் காட்டாதவரை, விண்ணப்பதாரர், சட்டப்பூர்வமாக பதிப்புரிமை கோர முடியாது. பதிப்புரிமை சட்டத்தின் 19வது பிரிவு, இதைத் தான் கூறுகிறது.
பெரியார் 1952 ஆம் ஆண்டு உருவாக்கிய அறக்கட்டளையின் வழியாக பெரியார் தனது அனைத்து எழுத்துகளையும், அறக்கட்டளைக்கு உரிமையாக்கியுள்ளார் என்று மனுதாரர் கூறுவது உண்மையல்ல. முதலில் அந்த அறக்கட்டளையை பெரியார் மட்டுமே தொடங்கவில்லை. அறக்கட்டளைகளின் 13 உறுப்பினர்களில் பெரியார் இருக்கிறார். அதில் பெரியாரால் உருவாக்கப்பட்ட படைப்புகள் பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பெரியார் உயிருடன் இருந்த காலத்திலேயே வே. ஆனைமுத்து - பெரியார், எழுத்து பேச்சுகளைத் தலைப்புவாரியாக ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’களிலிருந்து 3 தொகுதிகளாக தொகுத்து, அதை பெரியார் மறைவுக்குப் பிறகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையில் வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில், மனுதாரரும் (கி.வீரமணி) பங்கேற்றார். இவை தவிர, பெரியாருடைய கருத்துகளை பல்வேறு பதிப்பகங்கள் ஏற்கனவே வெளியிட் டுள்ளன. மனுதாரர்கூட இப்படி வெளியிட்டுள்ளார். உதாரணத்துக்கு சிலவற்றைக் குறிப்பிடுகிறோம்.
1. ‘தந்தை பெரியார் இறுதி சொற்பொழிவு’ வெளியீடு : மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி; 1993.
2. ‘தந்தை பெரியாரின் இறுதி சொற்பொழிவு நாத்திகம்’ வெளியீடு; 2002.
3. பெரியாரின் “அபாய சங்கு” வெளியீடு: பெரியார் அச்சிடுவோர் வெளியீட்டு குழுமம்; 1983.
4. ‘புதியதோர் உலகு செய்வோம்’ வெளியீடு: அறிவுப் பண்ணை.
5. பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” முனைவர் கே.எம்.ராமாத்தாள் ஆங்கில மொழியாக்கம் வெளியீடு: தமிழ் மண் பதிப்பகம், 2007.
6. பெரியாரின் “கல்வி சிந்தனைகள்” வெளியீடு: இந்திய மாணவர் சங்கம்-2007.
7. பெரியார் ஈ.வெ.ரா.வின் “வாழ்க்கை துணை நலம்”; வெளியீடு: கோட்டையூர் ரெங்கம்மாள் மற்றும் ஏ.எல். சிதம்பரம் (குறிப்பு: கி.வீரமணியின் திருமணத்தின்போது வழங்கப்பட்டது.)
8. “பகுத்தறிவாளர் மன்ற தொடக்க விழாவில் பெரியார் பேருரை” வெளியீடு: கோவை அண்ணா சிந்தனையாளர் பேரவை; 1971.
9. பெரியார் எழுதிய ‘கடவுளர் கதைகள்’; வெளியீடு: சிந்தாமணி பதிப்பகம், 2003.
10. “இஸ்லாம் பற்றி பெரியார்”; ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது. அறிமுக உரை எழுதியவர் ஜி.அலோசியஸ்; வெளியீடு: கிரிட்டிக்கல் கியுஸ்ட் - 2004.
11. ‘மதமும் - மனிதனும்’ - பெரியார் பச்சையப்பன் கல்லூரியில் 24.11.1964-ல் பேசியது; வெளியீடு: பகுத்தறிவாளர் கழகம்; 1993.
12. ‘குடிஅரசு’ 1925 முதல் தொகுதி; குடிஅரசு - 1926 (இரு தொகுதிகள்) வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம் - 2003.
13. “சிந்தனே வாய்ச்சரிக்கதே” (கன்னடத்தில் - பெரியாரின் பேச்சு மொழி பெயர்ப்பு) வெளியீடு: சுவபிமான காலுவலி கருநாடகா-2006.
14. ‘இந்த சந்தர்ப்பம் மறுபடியும் வராது’ - பெரியாரின் குடந்தைப் பேருரை. வெளியீடு: பெரியாரியல் குடும்பங்களின் நட்புறவு சங்கம்-1984.
15. ‘இனி வரும் உலகம்’ - பெரியார் எழுதியது. வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு - 1958.
16. ‘மதமும் - அரசியலும்’ பெரியார் ஈ.வெ.ரா. வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு - 1960.
17. ‘ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்’-ஈ.வெ.ரா. வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு-1961
18. தீண்டாமையை ஒழித்தது யார்? (வைக்கம் போராட்ட வரலாறு) வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு - 1964.
19. கிராம சீர்திருத்தம் - பெரியார் சொற்பொழிவு - சிந்தனை பண்ணை.
1925 இல் பெரியார் தொடங்கிய குடிஅரசுக்கும் 1952 இல் பெரியார் நிறுவிய அறக்கட்டளைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அறக்கட்டளை தொடங்குவதற்கு முன்பே ‘குடிஅரசு’ நின்று போய்விட்டது.‘குடிஅரசு’ பத்திரிகைக்கும், ஆசிரியராகவும், பதிப்பாளராகவும், வெளியிடு வோராகவும், பலர், பல்வேறு காலகட்டங்களில் இருந்து வந்துள்ளனர். அதன் விவரம்:
தேதி - பத்திரிகை - ஆசிரியர் - அச்சிடுவோர் மற்றும் வெளியிடுவோர்
2.5.1925 - குடிஅரசு - ஈ.வெ.ராமசாமி - கே.ஏ. அப்பையா நாயக்கர் மற்றும் ஈரோடு சுயராஜ்ய பிரஸ் தங்கப் பெருமாள் பிள்ளை
26.7.1925 ” ஈ.வெ.ராமசாமி - கே.ஏ.அப்பையா நாயக்கர் ஈரோடு சுயராஜ்ய பிரஸ்
27.9.1925 ” ஈ.வெ.ராமசாமி - ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நாயக்கர் ஈரோடு டைமண்ட் பிரஸ்
18.4.1926 ” ஈ.வெ.ராமசாமி -சா.ராமசாமி நாயக்கர் நாயக்கர் ஈரோடு ஸ்டார் பிரஸ்
9.1.1927 ” ஈ.வெ.ராமசாமி ஈ.வெ.ரா. - நாகம்மையார் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
16.6.1929 ” ஈ.வெ.ராமசாமி ஜெ.எஸ்.கண்ணப்பர் திராவிடன் பிரஸ், சென்னை.
2.2.1930 ” ஈ.வெ.ராமசாமி ஈ.வெ.ரா. - நாகம்மையார் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
29.11.1931 ” ஆசிரியர் பெயர் ஈ.வெ.ரா. - நாகம்மையார் இல்லை ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
26.11.1933 -புரட்சி - ஆசிரியர் பெயர் எஸ்.ஆர். கண்ணம்மாள் இல்லை ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
24.12.1933 புரட்சி - ஈ.வெ.ராமசாமி எஸ்.ஆர். கண்ணம்மாள் ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
31.12.1933 ” ஈ.வெ.கிருஷ்ணசாமி எஸ்.ஆர். கண்ணம்மாள் ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
4.2.1934 ” ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
26.8.1934 - பகுத்தறிவு- ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
13.1.1935- குடிஅரசு - ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
20.8.1939 ” அ. பொன்னம்பலனார் அ. பொன்னம்பலனார் ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்1.7.1944 ” கரிவரதசாமி கரிவரதசாமி ஈரோடு தமிழன் பிரஸ்
3.1.1948 ” கரிவரதசாமி கரிவரதசாமி ஈரோடு தமிழன் பிரஸ்
எனவே ‘குடிஅரசு’க்கு பலர் ஆசிரியராகவும், அச்சிட்டு வெளியிடுவோராகவும் இருந்து வந்துள்ளனர். கடைசியாக ‘குடிஅரசு’க்கு ஆசிரியராகவும், அச்சிட்டு வெளியிடுவோராகவும் இருந்தவர் தமிழன் பதிப்பகத்தைச் சார்ந்த கரிவரதசாமி. கரிவரதசாமியோ, அவரது தமிழன் பதிப்பகத்தாரோ மனுதாரரான வீரமணிக்கு பதிப்புரிமை ஏதும் எழுதித் தரவில்லை.
பதிப்பாளர்தான் பத்திரிகையின் உரிமையாளர் ஆவார். பெரியார் ‘குடிஅரசு’க்கு 27.9.1925-லிருந்து 18.11.1926 வரை மட்டுமே பதிப்பாளராக இருந்துள்ளார். இந்தியாவின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் தமது அறக்கட்டளை சார்பாக நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், மாநாடுகள் நடத்தப்படுவதாகவும் மனுதாரர் கூறுவது உண்மைக்கு மாறானது. அது நீதிமன்றத்தை திசை திருப்புவதாகும். மனுதாரரின் அறக்கட்டளை நல்ல வருமானம் தரக்கூடிய கல்வி நிறுவனங்களைத்தான் நடத்தி வருகிறது.பெரியாரின் வாழ்க்கை வரலாறான ‘தமிழர் தலைவர்’ நூலை வெளியிடுவதற்கு 12.3.1949-ல் ‘ஸ்டார் பதிப்பகம்’ என்ற நிறுவனம் வெளியீட்டு உரிமை கோரி பெரியார் ஈ.வெ.ரா.வுடன் ஒப்பந்தம் போட முன் வந்ததாக மனுதாரர் சமர்ப் பித்துள்ள ஆவணம் மோசடியானது. அந்த ஆவணத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி யின் கையெழுத்தும் இடம் பெறவில்லை. அந்த ஆவணத்தில்கூட அனைத்து உரிமைகளும் ‘குடிஅரசு’க்கே உரிமையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘குடிஅரசு’ பதிப்பகம் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு விடவில்லை. ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’ வந்த பிறகும்கூட - 1964 ஆம் ஆண்டு வரை ‘குடிஅரசு’ பதிப்பக வெளியீடுகள் வெளிவந்து கொண்டுதான் இருந்தன.
சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் ‘குடிஅரசு’ கட்டுரைகளைத் தொகுக்க - தாம் ஒரு குழுவை நியமித்ததாக மனுதாரர் கூறுகிறார். அப்படி, எந்தக் குழுவையும் மனுதாரர் நியமிக்கவில்லை. பெரியாரின் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளி லிருந்து சில ஆவணங்களை சேகரித்தனர். அப்படியே பார்த்தாலும், அதுகூட திராவிடர் கழகம் நியமித்த குழு தான், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளுக்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் உரிமை கோர முடியாது. உண்மையில் மனுதாரரிடம் ‘குடிஅரசு’ பத்திரிகைகள் அத்தனையுமே முழுமையாக கிடையாது. ‘குடிஅரசு’ பத்திரிகைகளை கீழ்க்கண்டவர்களிட மிருந்து நாங்கள் தான் (கொளத்தூர்
மணி) திரட்டினோம்.
சென்னை மறைமலை அடிகள் நூலகம், அண்ணா அறிவாலயத்திலுள்ள பேராசிரியர் ஆய்வக நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம், கரந்தை தமிழ்ச் சுடர் நூலகம், புதுக்கோட்டை ஞானாலயா நூலகம், மதுரை யாதவர் கல்லூரி நூலகம், மதுரை முத்துமுருகன் நூலகம், நாகர்கோயில் ஆசிரியர் புவனன் நூலகம், மேட்டுப்பாளையம் உலக சிந்தனையாளர் நூலகம், ஈரோடு பேராசிரியர் மு.க. சுப்ரமணியம் நூலகம், குளித்தலை தமிழறிஞர் கா.சு. பிள்ளை நூலகம், மன்னார்குடி கோபால முதலியார் நூலகம், விருத்தாசலம் பல்லடம் மாணிக்க நூலகம், சைதை மாக்சிம் கார்க்கி நூலகம், சிங்கப்பூரிலுள்ள தேசிய நூலகம், தேசிய பல்கலைக்கழக நூலகம், ‘தமிழ் முரசு’ நூலகம், தேசிய ஆவணக் காப்பகம், சென்னை கன்னிமாரா நூலகம், ரோஜா முத்தையா நூலகம், காஞ்சிபுரம் கே.பி. ஞானசம்பந்தர், மதுரை சாலமன் பாப்பையா போன்ற பிரமுகர்கள் மற்றும் நூலகங்களிலிருந்து, பெரியாரின் நூல்கள் தேடி சேகரிக்கப்பட்டு, அவரது சிந்தனைகள் தொகுக்கப்பட்டன.
பெரியாரின் ‘ஒரிஜினல்’ மூலப் பிரதிகள் தம்மிடம் இருப்பதாக மனுதாரர் கி.வீரமணி கூறுவது, பரிதாபத்துக்கு உரியது. ‘ஒரிஜினல்’ என்பதற்கான அர்த்தம்கூட அவருக்கு தெரிய வில்லை. அச்சடிக்கப்பட்ட பிரதிகள் ‘ஒரிஜினல்களாக’ முடியாது. ‘ஒரிஜினல்’ என்பது கையெழுத்துப் பிரதிகளாகவே இருக்க வேண்டும். அப்படி, ‘குடிஅரசில்’ பெரியார் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் எதுவும் மனுதாரரிடம் கிடையாது. ‘குடிஅரசு’ பத்திரிகைகளை பாதுகாத்து வைத்துள்ளோரிடமும் கிடையாது. நாங்கள் இதுவரை ‘குடிஅரசு’ 3 தொகுதிகளை வெளியிட்டுள்ளதோடு, செப்டம்பர் 17-ம் தேதி 1927 முதல் 1949 வரையிலான ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட திட்டமிட்டிருந்தோம். கடந்த ஆக°ட் 26-ம் தேதி மேட்டூரில் நடந்த விழாவில் பெரியார் ‘பகுத்தறிவு’ வார ஏட்டை தொடங்கிய, நாளைக் கொண்டாடும் வகையில் அன்று நடந்த சிறப்பான விழாவில், ‘குடிஅரசு’ தொகுப்புகளும் வெளியிடப்பட்டு விட்டன. அப்படி வெளியிடப்பட்ட செய்தி தெரிந்த பிறகே, மனுதாரர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
பெரியார் மாபெரும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்; ஒப்பற்ற போராட்ட வீரர்; தமிழக வரலாற்றை மாற்றியமைத்தவர்; அத்தகைய மாபெரும் தலைவரின் எழுத்துகளை ஒரு தனி மனிதர் கோரும் பதிப்புரிமைக்குள் முடக்கிவிடக் கூடாது. பெரியாரின் எழுத்துகள் - பதிப்புரிமை கோரக் கூடிய விற்பனைச் சொத்து அல்ல. பெரியாரின் சிந்தனைகள் விற்பனைப் பொருள் அல்ல; அவை சிந்தனையை விதைப்பவை.
மாபெரும் சிந்தனையாளர்களின் தத்துவங்களுக்கும், கொள்கைகளுக்கும் பதிப்புரிமை சட்டங்களை விரிவாக்க முடியாது. பெரியாரின் எழுத்துக்களை தேசத்தின் சொத்துக்களாகவே கருத வேண்டுமே தவிர, மனுதாரர் கோருவதுபோல், பெட்டிகளில் வைத்து பூட்டிவிடக் கூடாது. மனுதாரர் கூறுவது போல், எங்கள் கட்சிக்காரர், பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருவது உண்மை தான். காரணம், மனுதாரரான கி.வீரமணி, பெரியார் கொள்கைகளிலிருந்து வெகுதூரம் விலகிப் போய், பெரியார் கொள்கைகளை சிதைக்கவும் தொடங்கிவிட்டார். அதன் காரணமாகவே பெரியார் திராவிடர் கழகத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் நேர்ந்தது. எங்களது கட்சிக்காரர் போன்ற உண்மையாகவே பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுவோர்தான், பெரியாரின் தத்துவங்களை, சிந்தனைகளை பதிப்பித்து, பரப்புவதற்கான உரிமை பெற்றவர்கள். பெரியாரே தனது எழுத்துக்களுக்கு பதிப்புரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடிஅரசு, ஜஸ்டிஸ், ரிவோல்ட், மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகியவற்றிலிருந்து பெரியார் எழுத்து, பேச்சுகளைத் திரட்டுவதற்கு கடுமையான முயற்சிகளை எடுத்ததாக மனுதாரர் கி.வீரமணி கூறுவதில் கொஞ்சம்கூட உண்மை கிடையாது. உண்மையில் குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி பத்திரிகைகளின் பல பிரதிகளே மனுதாரரிடம் கிடையாது. மனுதாரருக்கு பெரியார் எழுத்தில் பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது என்பதற்கு இதுவே போதுமானது. எங்களது கட்சிக்காரரிடம் இருப்பதுபோலவே, மனுதாரரிடமும் சில ‘குடிஅரசு’ பிரதிகள் இருக்கலாம். அதன் காரணமாகவே அவர் பதிப்புரிமை கோரிவிட முடியாது. மனுதாரரின் திருச்சியிள்ள அலுவலகத்திலிருந்து எங்கள் கட்சிக்காரர் ‘குடிஅரசு’ பிரதிகளை தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டதாக மனுதாரர் கூறுவது உண்மையல்ல. தஞ்சை பகுத்தறிவாளர்களை குடிஅரசு தொகுப்புக்கு தமது அறக்கட்டளை நியமித்ததாக மனுதாரர் கூறுவதும் உண்மையல்ல. குடிஅரசு குறுந்தகடுகளும் மனுதாரரிடம் கிடையாது. நாங்கள் லாபத்துக்கு ‘குடிஅரசு’களை விற்பதாகக் கூறுவதும் உண்மையல்ல. பல லட்சம் ரூபாய் இழப்பில் தான் நாங்கள் பெரியார் எழுத்துக்களை வெளியிடுகிறோம். மனுதாரரிடமிருந்து ஒரு சிறு துண்டுக் காகிதத்தைக்கூட நாங்கள் எடுக்க வில்லை. மனுதாரரிடமே பெரியாரின் எழுத்துகள் முழுமையாக இல்லாதபோது, அவரிடமிருந்து நாங்கள் ‘திருடிச் சென்று விட்டோம்’ என்ற கேள்விக்கே இடமில்லை.
பெரியார் எழுத்துகள் அனைத்துமே, திருச்சி யில் மணியம்மை மேல்நிலைப் பள்ளியில் திரட்டப்பட்டதிலிருந்து தான் தொகுத்தோம் என்று நாங்கள் எந்த ஒப்புதலும் தரவும் இல்லை.பெரியார் எழுத்துகளை பதிப்பிப் பதால், தனக்கு பாதிப்பு ஏற்பட் டுள்ளதாக சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி கூறுகிறார். பெரியார் எழுத்துகள் மக்களிடம் சென்றடையக் கூடாது என்றும், எவருமே பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூடாது என்றும் மனுதாரர் கருதுகிறாரா என்பது புரியவில்லை. பெரியார் எழுத்துகளைப் படிக்கும் போதுதான் பெரியாரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியுமே தவிர, மனுதாரரும் அவரது குழுவினரும் தயாரித்த பெரியார் சினிமாவிலிருந்து பெரியாரை புரிந்து கொள்ள முடியாது.
மனுதாரர் கி. வீரமணி தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அவர் கூறும் பொருளாதார இழப்பு, நாங்கள் பெரியார் எழுத்துக்களை வெளியிடுவதால் நிகழ்ந்துள்ளதா? அல்லது பெரியார் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதால், மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை, மனுதாரர் தெளிவுபடுத்தவில்லை.மனுதாரரும், அவரது சகாக்களும் பெரியார் எழுத்துகளுக்கு உரிமை படைத்தவர்கள் அல்ல. எனவே நீதிமன்றம் தடை ஆணையை பிறப்பிக்கக் கூடாது. மனுதாரர் விரும்பினால் எங்களது அடிச்சுவட்டைப் பின்பற்றி, அவரும் பெரியார் எழுத்து பேச்சுகளை தாராளமாக வெளியிடலாம். பொருளாதாரம், அரசியல், சமுதாயம் அல்லது மதம் தொடர்பான கட்டுரைகளை செய்தி ஏடுகள், பத்திரிகைகளிலிருந்து மறு பதிப்பு செய்வது, பதிப்பு உரிமைகளில் தலையிடுவது ஆகாது. கட்டுரைகளை எழுதிய ஆசிரியர், அதற்கு வெளிப்படையாக பதிப்புரிமை பெற்றிருந்தால் மட்டுமே வெளியிட முடியாது. எனவே பெரியாரின் எழுத்து பேச்சுகளை மறுபதிப்பு செய்வது - பதிப்புரிமை சட்டத்தின் கீழ் வராது. பெரியாரின் எழுத்துகளை மட்டும் மறுபதிப்பு செய்யவில்லை. பொது மக்களிடம் அவர் பேசிய பேச்சுகளும் மறுபதிப்பு செய்யப்படுகிறது. இத்தகைய பேச்சுகளை மறுபதிப்பு செய்வது, பதிப்புரிமையில் குறுக்கிடுவது ஆகாது. எனவே இந்த நீதிமன்றம் மனுதாரரின் மனுவை நிராகரித்து நீதி வழங்கக் கோருகிறோம்.
இதேபோல் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள வேறு சில தகவல்கள்:
1. 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் 17வது பிரிவின்படி பதிப்புரிமையை வழங்குவோர் வழங்கப்படுவோருக்கு கட்டாயமாக அதை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும். மனுதாரர் அறக்கட்டளை விதிகளில் அப்படி பதிப்புரிமை வழங்கியதற்கான பிரிவுகள் ஏதுமில்லை.
2. அறக்கட்டளை விதிகளின்படியே பதிப்புரிமை உண்டு என்று வாதிட முடியாது. காரணம் விலைக்கு வாங்கப்பட்ட சொத்துக்களுக்கு மட்டும் தான் அறக்கட்டளையே ஏற்படுத்தப் பட்டிருப்பதாகவே விதிகள் கூறுகின்றன. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் விலை கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல. அவை பெரியாரால் படைக்கப்பட்டவை. வாங்கப்பட்ட பொருளுக்காக பெரியார் உருவாக்கிய அறக்கட்டளையின் விதி 22 - பெரியாரால் படைக்கப்பட்ட அவரது எழுத்து - பேச்சுகளுக்குப் பொருந்தாது. சமூகநீதி, பெண்ணுரிமை என்று மக்களின் சமத்துவத்துக்காகப் போராடிய புரட்சிகரமான தலைவர் பெரியார்; அத்தகைய ஒரு தலைவர் தனது எழுத்துகளை தனக்காகவோ, தனது அறக்கட்டளைக்காகவோ வியாபாரமாக்க முயற்சிக்கவில்லை. அவரது வாழ்நாளில் தனது எழுத்துகளுக்காக அவர் எந்த ‘ராயல்டியும்’ பெற்றது இல்லை. தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.
3. பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தனக்கே உரியது என்பதை நிரூபிக்க மனுதாரரி டம் எந்த சான்றும் இல்லை. இதில் மிக மோசமாக அவர் தோல்வியடைந்திருக்கிறார். இந்த உரிமை கோருவதற்கே தொடர்பில்லாத வராக (Stranger) - அந்நியராக அவர் இருக்கிறார். தனக்குத்தான் பதிப்புரிமை உண்டு என்பதற்கு எந்த ஆவணமும் மனுதாரர் சமர்ப்பிக்காத நிலையில் நீதிமன்றம் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
4. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் ஏற்கனவே மக்களின் சொத்தாகிவிட்டது. ஏற்கனவே பல்வேறு பதிப்பகங்கள் - பெரியார் நூல்களை வெளியிட்டுவிட்டன. மனுதாரர் கடந்த காலங்களில் இந்த வெளியீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு கூட தனிப்பட்ட பகைமையினால் தான் மனுதாரர் தொடுத் துள்ளாரே தவிர, அவர் கூறுவதுபோல் பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரி அல்ல.
5. மனுதாரர் கூறுவதுபோல் - பெரியார், பெண் களின் முன்னேற்றத்துக்கு மட்டும் பாடுபட்டவர் அல்ல; ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக் காகவும் அவர் பாடுபட்டுள்ளார். மனுதாரருக்கு பெரியாரின் அடிப்படை தத்துவமே தெரிய வில்லை. யுனெ°கோ நிறுவனம் வழங்கிய விருதும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ பாடலுமே, பெரியார் ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக்குப் போராடியதை உணர்த்து கின்றன.
6. பெரியாரின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் அவரது எழுத்துகளைப் பரப்பும் உரிமை உண்டு. பெரியாரின் தத்துவங்களை தனிநபர்களிடமோ, அல்லது நிறுவனங்களிடமோ முடக்கிவிட முடியாது. ஏதோ சில - பெரியாரின் எழுத்துகளை, மனுதாரர் சேகரித்து வைத்திருப்பதாலேயே பெரியார் சிந்தனைகளுக்கு அவர் பதிப்புரிமை கோரிவிட முடியாது. வேண்டுமானால் எங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவர் பெரியார் சிந்தனைகளை தாராளமாக வெளியிடட்டும்.
7. நூற்றுக்கணக்கில் அச்சடித்து பத்திரிகைகள் வெளி வந்த பிறகு, அதன் பிரதிகள் எல்லோரி டமும் போய் விடுகிறது. இந்த நிலையில் தன்னிடம் இருப்பது மட்டுமே ‘ஒரிஜினல்’ என்று மனுதாரர் எப்படி உரிமை கோருகிறார் என்பது தான் புரியவில்லை. பெரியார் பத்திரிகை அவரது தொண்டர்கள் பலரிடம் இருக்கிறது. உண்மையில் மனுதாரரிடம் தான் பெரியாரின் பல பத்திரிகைள் இல்லை.
பெரியார் எதிரிகள் யார்?

பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார். கரிவரதசாமி போன்றோரும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். ஆசிரியராக இருந்த பெரியார், சட்டப்படியான உரிமை வழங்கும் வெளியீட்டாளர் உரிமையை தம்மிடம் வைத்துக் கொண்டது இல்லை. இதை பதில் மனுவில் நாம் சுட்டிக்காட்டி யிருப்பதை கேலி செய்கிறது ‘விடுதலை’! பெரியாருக்கு நம்மை எதிரானவர்களாக தங்களது கழகத்தினரிடையே சித்தரிக்க முயற்சி செய்கிறது; அதெல்லாம் இருக்கட்டும்!
பெரியாரின் நூல்களை தாங்கள் மட்டுமே வெளியிட வேண்டும்; பெரியார் திராவிடர் கழகம் வெளியிட தடை போட வேண்டும்; 15 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று வழக்கு தொடுப்பவர்கள் பெரியாரின் எதிரிகளா?
அல்லது - பெரியாரின் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு தடைகளைக் கடந்து களத்தில் நிற்கும், பெரியார் திராவிடர் கழகம் பெரியாருக்கு எதிரியா?
இதுதான் இப்போது மக்கள் மன்றத்தின் முன் உள்ள கேள்வி!வழக்கு மனுவில் தன்னை ‘இந்து’ என்ற அடையாளத்தோடு, மனுதாக்கல் செய்து கொண்ட “தமிழர் தலைவர்” பெரியாருக்கு உரிமை கொண்டாடுவதை தமிழர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கி.வீரமணிக்கு ஆதரவாக தஞ்சை ரத்தினகிரி உயர்நீதிமன்றத்தில் மனு
‘குடி அரசு’ பத்திரிகையை வெளியிடும் உரிமை கி.வீரமணிக்கு மட்டுமே உண்டு என்றும், திருச்சியில் 1983 இல் ‘குடிஅரசு’ பத்திரிகைகளிலிருந்து பெரியார் எழுத்து பேச்சுகளைத் தொகுத்து, தமது தலைமையிலான குழு வீரமணியிடம் ஒப்படைத்துவிட்டது என்றும், எனவே கி.வீரமணி தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு தஞ்சை இரத்தினகிரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரும் தன்னை ‘இந்து’ என்றே கூறியுள்ளார்.

பெரியாரை திரிப்பது யார்? (1)
பெரியார் எழுத்து பேச்சுகளை கி.வீரமணியின் நிறுவனம் மட்டுமே வெளியிட வேண்டும் என்றும்; கருத்துச் சிதைவு இல்லாமல் பெரியாரை அவர் ஒருவரால் மட்டுமே படம் பிடிக்க முடியும் என்றும் திராவிடர் கழக எழுத்தாளர்கள் வண்டி வண்டியாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பெரியார் கருத்துகளை சிதைப்பவர்களில் பெரியாரின் எதிரிகளைவிட கி.வீரமணியே முன்னணியில் இருக்கிறார் என்பது, வேதனையான உண்மை. கி.வீரமணி - பெரியார் கருத்துகளை திரித்ததற்கு சில சான்றுகளை இங்கே முன் வைக்கிறோம். கி.வீரமணியானாலும் சரி, அவரது தொண்டரடிப் பொடிகள் ஆனாலும் சரி, அவரது அரசவை எழுத்துப் புலவர்களானாலும் சரி, எல்லோருக்குமே அறைகூவல் விடுக்கிறோம்; இவைகளை - மறுக்க முடியுமா?
13.12.2000 அன்று தஞ்சையை அடுத்த வல்லத்தில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூடி கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.“தந்தை பெரியார் காலத்திலேயே திராவிடர் கழகம் பிரிவினை இயக்கம் அல்ல என அறிவிக்கப்பட்டது” என்பது தீர்மானம்.இது உண்மை தானா?
• பெரியார் தனது இறுதிப் பேருரையிலேயே தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தினார்.
• பெரியார் மறைவுக்கு முன் 1.10.73, 2.10.73 ‘விடுதலை’ நாளேடுகளில் பிரிவினையை வலியுறுத்தி எழுதினார்.
• “சுதந்திரத் தமிழ்நாடு பெற தூக்குமேடையும் ஏறுவோம் கி.வீரமணி முழக்கம்” என்ற தலைப்பில் கி.வீரமணி பேச்சு 3.10.1973 ‘விடுதலை’ நாளேட்டில் வெளி வந்தது.
• 14.11.1973 இல் ‘விடுதலை’யில் வெளிவந்த ‘கழகமும் பிரிவினையும்’ என்ற கட்டுரை “திராவிடர் கழகத்தின் வரலாற்றில் இரண்டறக் கலந்து விட்ட கொள்கையே நாட்டுப் பிரிவினை என்பது வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரியும்” என்று குறிப்பிட்டது.
பெரியார் 24.12.73 இல் முடிவெய்தினார். அதற்கு முன்பு சுமார் ஒரு மாத காலத்துக்குள் எழுதியவற்றை மட்டுமே மேலே சுட்டிக்காட்டியுள்ளோம்.‘விடுதலை’ நாளேட்டில் இதழின் முகப்பில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் பெரியார் காலத்திலும் பெரியார் மறைந்த பிறகும்கூட இடம் பெற்றிருந்தது. பெரியார் மறைவுக்குப் பிறகு ‘அவசர நிலை’ காலத்தில்தான் அது நீக்கப்பட்டது.
இவ்வளவுக்கும் பிறகு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் தந்தை பெரியார் காலத்திலேயே “திராவிடர் கழகம் பிரிவினை இயக்கம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுவிட்டது” என்று கி.வீரமணி தலைமையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு தீர்மானம் போடுவது பெரியாரைத் திரிப்பதா? இல்லையா?
“பெரியார் வலியுறுத்திய பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம்” என்று தீர்மானம் போட்டுக் கொள்ளட்டும். அது கி. வீரமணியின் உரிமை. ஆனால், பெரியாரே பிரிவினையை கைவிட்டார் என்று தனது முடிவை பெரியார் மீது ஏற்றிச் சொல்வதற்கு பெயர் என்ன?பதில் வருமா?
(‘புரட்டுகள் உடைப்பு’ தொடரும்)

பெரியாரின் நூல்களை நாட்டுடமையாக்கு! பொள்ளாச்சி, விழுப்புரத்தில் கழக ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியாரின் எழுத்தையும், பேச்சையும் நிறுவனங்களுக்குள் முடக்க நினைக்கும் கி.வீரமணியைக் கண்டித்தும், பெரியாரின் அறிவுசார் சொத்துடைமையை நாட்டுடமை ஆக்க வலியுறுத்தியும், 25.8.2008 திங்கள் மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலாளர் வே. வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் ருக்மணி முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர் பேரவை அமைப்பாளர்கள் இரா. மோகன், சி. விசயராகவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர்கள் காசு. நாகராசன், தா. இராசேந்திரன், கலை. இராசேந்திரன், அரிதாசு, சம்பத், சின்னு, யாழ் மணி, சபரி, கண்ணன், பழ. முருகானந்தம், இராமகிருட்டிணன், மு. பிரபா கரன், த. மணி, “தீமிதி” கதிர், சுரேசு, மணிமொழி, கணேசு, அப்பாதுரை, சரவணன் மற்றும் தமிழ் இளைஞர் பொது நல மன்றம் அ. ராசுகுமார், சாகுல், சாரணாத் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 30.8.08 காலை 11 மணியளவில் பெரியார் திடலுக்குள் பெரியாரை முடக்கும் சதியை முறியடிப் போம்; பெரியார் நூல்களை தமிழக அரசே அரசுடைமை யாக்குக என்று கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் ந. அய்யனார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி. ஆசைத்தம்பி, சி. சாமி துரை முன்னிலை வகிக்க, வெ. அமிர்தலிங்கம், நல்லத்தம்பி, வழக்கறிஞர் ப. கண்ணன், மு.வ. நடராசன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை குறித்து கருத்துரை வழங்கினர். மு.வ. செல்வராசு, செ. பிரபு, அ. முருகன், இளையராசா, விழுப்புரம் கணேசன், ச. பெரியார் வெங்கட், அல்லி முத்து, கல்லை செந்தில் உட்பட ஏராளமான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

வெளிமாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தடைகழகம் நடத்திய போராட்டம் வெற்றி
தமிழகத்திலிருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான டன் மணல் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப் பட்டு வந்தது. தண்ணீர் கொடுக்காத மலையாளிகளுக்கு தமிழ்நாட்டு மணலைக் கொடுக்க அனுமதியோம் என்ற முழக்கத்தோடு பொள்ளாச்சி பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 6.8.2008 அன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். அதைத் தொடர்ந்து கடந்த 22, 23 ஆகிய இரு நாள்களும் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் ‘பறி போகும் தமிழர் உரிமைகள்’ என்கிற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப் பட்டன. தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி. வேலுச்சாமி, பகுத்தறிவாளர் பேரவை அமைப்பாளர்கள் இரா. மோகன், சி. விசயராகவன், பொள் ளாச்சி நகர கழகச் செயலாளர் வே. வெள்ளிங்கிரி, வட்ட செயலாளர் காசு. நாகராசன், ஒன்றியத் துணைச் செய லாளர் சம்பத் ஆகியோர் மணல் கடத் தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவான பிரச்சாரம் செய்தனர். அதில் மணல் கடத்தலை உடனடியாக தடை செய்யாவிட்டால் அடுத்ததாக எல்லை தாண்டும் மணல் லாரி களை பெரியார் திராவிடர் கழகம் சிறை பிடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இரண்டு நாள் பிரச் சாரக் கூட்டங்களிலும் ஏராளமான பொது மக்கள், விவசாயத் தொழி லாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கழகத்தின் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த அன்றே வேலூரில் முந்நூறுக்கும் மேற்பட்ட மணல் லாரிகளை பொது மக்கள் சிறை பிடித்த செய்தியும் வெளியானது. நாடு முழுவதும் மணல் கடத்தலுக்கு எதிரான ஓர் அலை பெரியளவில் எழுந்தது.கழகப் பிரச்சாரம் நடந்து முடிந்த இரண்டாம் நாளே தமிழக அரசு வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தடை விதித்தது. இது கழகம் எடுத்த தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக பொள்ளாச்சி, எல்லை பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

நாட்டுடைமையாக்கிட குரல் கொடுத்தோர்!
பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று இதுவரை குரல் கொடுத்த தலைவர்கள் :
1. மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன்2. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்3. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு4. மதுரை ஆதினகர்த்தர்.

சென்னை சிந்தனை வட்டம்
14.9.2008 ஞாயிறு மாலை 6 மணியளவில் சென்னை தலைமை கழக அலுவலகத்தில் ‘சுயமரி யாதை இயக்க வீராங்கனைகள்’ நூல் மதிப்பீடு எனும் தலைப்பில் வழக்கறிஞர் சு. குமாரதேவன் உரையாற்றினார். நா. தினகரன் வர வேற்க, அன்பு தனசேகரன் நன்றி கூறினார். 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

“அன்பு சகோதரி ஜெயலலிதா ஆட்சிக்கு ஆபத்து வருமேயானால் திராவிடர் கழகம் தற்கொலைப் படையாக மாறும்” - கி.வீரமணி

‘யுக்திகளே’ இவர்களுக்கு இலட்சியம்!


பெரியார் நினைவிடம் பெரியார் திடலுக்குள். பெரியார் அருங்காட்சியகம் (அப்படி ஒன்று இருக்கிறதா என்று எவரும் கேட்டுவிடக் கூடாது) பெரியார் திடலுக்குள். நடத்தும் மாநாடுகளும் பெரியார் திடலுக்குள். இப்படி பெரியார் திடலுக்குள் பெரியாரை முடக்கிப் போட்டவர்கள் ‘பெரியாரியலை’யும் பெரியார் திடலுக்குள்ளே முடக்கிட துடிக்கிறார்கள்.

‘குடிஅரசில்’ பெரியாரின் எழுத்து பேச்சுகளை காலவரிசைப்படி இதுவரை வெளியிட முன் வராதவர்கள் - பெரியார் திராவிடர் கழகம் - கடும் முயற்சி எடுத்து வெளிக் கொணரும்போது, “முடியாது; எங்கள் பெரியார் திடலுக்குள்ளே தான் இருக்க வேண்டும்; அது எங்களின் சொத்து; எவராவது வெளியிட்டால், 15 லட்சத்தை, இழப்பீடாக எடுத்து வை” என்கிறார்கள்.

பார்ப்பனர்களும் இப்படித்தான் ‘வேதம்’ தங்களிடமே இருக்கவேண்டும் என்று நிலைப்படுத்தி - அதை மறை பொருளாக்கினார்கள். அதன் காரணமாகவே அது ‘மறை’ என்னும் பெயர் பெற்றது. பெரியார் எழுத்தும் பேச்சும் காலவரிசைப்படி முழுமையாக வெளி வருவதைக் கண்டு இவர்கள் ஏன் பதட்டமடைகிறார்கள்? கொள்கையை முன்னெடுக்கவே பெரியார் அதற்கான செயல் யுக்திகளைப் பின்பற்றினார் என்பதற்கான அடுக்கடுக்கான சான்று கள் அந்த எழுத்துகளிலும், பேச்சு களிலும் பொதிந்து கிடப்பதுதான், இதற்குக் காரணம்.
காங்கிரசை பெரியார் ஆதரித்த போதும் சரி; எதிர்த்த போதும் சரி; நீதிக்கட்சியை ஆதரித்த போதும்; அதைக் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாக்கியபோதும்; காமராசர் ஆட்சியை ஆதரித்த போதும்; பக்தவத்சலம் ஆட்சியை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய போதும் - பெரியாரின் உறுதியான கொள்கை அடிப்படையிலான ‘செயல் யுக்திகளை’ புரிந்து கொள்ள முடியும். தனது லட்சியங்களை முன்னிறுத்தியே அவரது ஆதரவும் எதிர்ப்புகளும் இருந்திருக்கின்றன.

ஆனால் வீரமணியைப் பொறுத்தவரை ‘யுக்திகளே’ (Strategies) அவரது ஒரே லட்சியமாகிவிட்டது. அந்த ‘யுக்தி’ களுக்காகவே, அவ்வப்போது கொள்கை பரப்பலை செய்து வருகிறார்.தோழர் தியாகுவும் இதே கருத்தை, சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக் காட்டினார். வீரமணியின் லட்சியம் ‘யுக்தி’ (Strategy) தான். யுக்திக்காகவே அவரது பெரியார் கொள்கை பரப்புதல் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல சான்றுகளைப் பட்டியலிட முடியும்.

“ஆயுள் உள்ள வரை ஆதரவாக இருப்பேன்”; “அன்பு சகோதரி ஜெயலலிதா ஆட்சிக்கு ஆபத்து வருமேயானால் திராவிடர் கழகம் தற்கொலைப் படையாக மாறும்” என்று “சமூக நீதி காத்த வீராங்கனைக்கு” இன்று கலைஞருக்கு பாராட்டு மழை பொழிவது போல் அன்றும் நாள்தோறும் வாழ்த்துப்பாக்களை பாடிக் கொண்டிருந்தபோது, திராவிடர் கழகத்துக்குள் கொள்கை உணர்வுள்ள இளைஞர்கள் தட்டிக் கேட்டார்கள். வீரமணி, அவர்களை எல்லாம் ‘துரோகிகள்’ பட்டியலில் சேர்த்தார். 1996 இல் பெரியார் திராவிடர் கழகம் உருவானது. கடும் நெருக்கடிக்கு உள்ளான வீரமணி, தனது ‘யுக்தி’யைப் பயன்படுத்தி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு திட்டங்களை தீட்டினார்.

அவசர அவசரமாக பிரச்சார நூல்களை வெளியிட் டார்கள்; புத்தக சந்தைகளை நடத்தினார்கள்; மாநாடுகள் கூட்டப்பட்டன; இவ்வளவும் ‘பெரியார் திராவிடர் கழகம்’ உருவான பிறகு தான்! அய்.அய்.டி. பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து ஆறு ஆண்டுகாலம் களத்தில் நின்று போராடியது. ‘ராமலீலாவை’ எதிர்த்து ‘இராவண லீலா’ நடத்தி, ராமன் படத்தை எரித்து, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஒவ்வொரு வருடமும் சிறை ஏகினார்கள். அடுக்கடுக்கான போராட்டங்களை முன்னெடுத்து, பெரியார் இயக்க மரபின் தொடர்ச்சியாக பெரியார் திராவிடர் கழகம் பயணப்பட்டபோது, வீரமணியின் ‘விடுதலை’ முகத்தைத் திருப்பிக் கொண்டது. இவைபற்றியெல்லாம் ஒரு வரி செய்தியும் கிடையாது. கேட்டால், ‘துரோகிகள்’ நடத்தும் ‘பார்ப்பன எதிர்ப்பு’ எங்களுக்கு உடன்பாடானது அல்ல என்று சமூக நீதிகாத்த வீராங்கனைக்கு புகழாரம் சூட்டும் தங்களின் பார்ப்பன எதிர்ப்பே ‘அக்மார்க்’ முத்திரையுடையது என்றார்கள்.

பெரியார் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் தலைமை ஏற்ற நிலையில், பெரியார் கருத்துகளை கடவுள், மதம், பெண்ணுரிமை போன்ற தலைப்புகளில் தொகுத்து, ‘பெரியார் களஞ்சியம்’ வெளியிடும் திட்டத்தைத் தொடங் கினார். 6 தொகுதிகள் வரை வெளிவந்தன. 6வது தொகுப்பு வெளி வந்தது 1991 அக்டோபர். அப்போது ‘அம்மா’ ஆட்சிக் கட்டிலுக்கு வந்த நேரம். அம்மாவுக்கு வாழ்த்துப்பா பாடு வதிலும், கலைஞருக்கு எதிராக அர்ச்சனைகளை நடத்து வதிலும்தான் காலம் உருண்டோடியது. யுக்தியையே லட்சிய மாக்கிக் கொண்டவர்கள், வேறு என்ன செய்வார்கள். ஆட்சி யாளர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ‘யுக்திகளே’ திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளாயின.

2003 ஆம் ஆண்டு ‘பெரியார் திராவிடர் கழகம்’ பெரியாரின் ‘குடிஅரசு’ பேச்சு எழுத்துகளைத் தொகுத்து, 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை வெளியிட்டது. பெரியார் சொத்துகளையும் அறக்கட்டளை களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கி.வீரமணி, இந்தத் தொகுப்புகளை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்விகள் வீரமணியை நெருக்கடிக்கு உள்ளாக்கின. அந்த நெருக்கடியிலிருந்து மீள, ஒரு ‘யுக்தி’யாக பெரியார் களஞ்சியத்தின் அடுத்த தொகுப்பை ‘சாதி-தீண்டாமை’ எனும் தலைப்பில் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

பெரியார் களஞ்சியத்தின் 6 ஆம் தொகுப்புக்குப் பிறகு 7வது தொகுப்பை வெளியிட கி.வீரமணிக்கு 13 ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. அதுவும் எப்படி வந்தது? 2003 ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ முதல் தொகுப்பை வெளியிட்ட பிறகு தான்! அதற்குப் பிறகு தான் ‘குடிஅரசு’ நூல்களை குறுந்தகடுகளாக வெளியிடும் அறிவிப்பும் வந்தது. தனது நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ‘யுக்தியாகவே’ வீரமணி செயல்பட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும். ‘சாதி தீண்டாமை’ (7வது தொகுப்பு), 2004 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும், 2005 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும் (8வது தொகுப்பு) என ஆண்டுக்கு ஒரு தொகுப்பை திராவிடர் கழகம் வெளியிட்டது. அதற்குப் பிறகு 2006 ஆம் ஆண்டில் பெரியார் திராவிடர் கழகம் 1926 ஆம் ஆண்டு ‘குடிஅரசில்’ பெரியார் பேச்சு எழுத்துக்களைத் தொகுத்து ஒரே நேரத்தில் இரு தொகுதிகளை வெளியிட்ட போது, மீண்டும் வீரமணிக்கு அதிர்ச்சி.

“இந்த துரோகிகளுக்கு வேறு வேலையே கிடையாது போலிருக்கு, நம்ம உயிரை வாங்குறானுங்க. பேசாமல், நாம ஒரு அரசியல் கட்சியை துதி பாடுவதுபோல், அவனுகளும், ஒரு அரசியல் கட்சிக்குப் பின்னாலே போக வேண்டியது தானே. இந்த ‘துரோகி’களுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை” என்று மனம் புழுங்கியிருப்பார். நெருக்கடியிலிருந்து மீள - மீண்டும் - ‘சாதி-தீண்டாமை’ தொகுப்புகள் தொடர்ச்சி யாக வெளிவரத் தொடங்கின. நாமும் மகிழ்ச்சி அடைந்தோம். எப்படியோ, பெரியார் நூல்களை வெளிவரச் செய்திருக்கிறோமே என்ற மகிழ்ச்சி தான்.

பெரியார் திராவிடர் கழகம் தனது செயல்பாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடுவதில் தீவிரம் காட்டி, 1925-லிருந்து 1938 வரை 27 தொகுதிகளை ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு அறிவித்தது வீரமணியால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இனியும், இவர்களை அனுமதிக்கக் கூடாது என்று தடைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டார்.

பெரியார் கருத்துகளைப் பரப்பு வதற்கு பெரியார் பெயரில் இயக்கம் நடத்துகிறவர்களே தடுக்கிறார்களே என்று கேள்விகள் மக்கள் மன்றத்தில் வெடித்த நிலையில், பெரியார் கருத்துகளைப் பரப்பும் “துரோகிகள்”, “அநாமதேயங்கள்”, “வெளியேற்றப் பட்டவர்கள்” பட்டியல் மேலும் நீண்டு விடும் என்ற அச்சத்தில் மீண்டும் ‘யுக்தி’ யைப் பயன்படுத்தினார். அதுதான் நடந்து முடிந்துள்ள மாநாடு. தொண்டர் களை தக்க வைத்துக் கொள்ள வழக்க மாக வீரமணி நடத்தும் “யுக்தி” தான்.

“பெரியார் திராவிடர் கழகம்’ 28 தொகுதிகளை ரூ.3500-க்கு வழங்கு கிறதா? இதோ நான் 30 தொகுதிகளை ரூ.2500-க்கு தருகிறேன். ஒரு ‘பை’ இலவசம்” என்று அறிவிப்புகள் வரு கின்றன. இதுவும் நமக்கு மகிழ்ச்சி தான். பெரியார் கொள்கைகள் தீவிரமாகப் பரவும் போதுதான் மக்கள் உண்மை யான பெரியாரியலைப் புரிந்து கொள் வார்கள். சமூக மாற்றத்துக்கும் தயார் ஆவார்கள் என்பதில் நமக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. பெரியார் கொள்கை பரப்புதலை ‘யுக்திக்காகவே’ நடத்தி வரும் கி.வீரமணியின் பார்வையில் நாங்கள் “துரோகிகளாகவும்” “நீக்கப் பட்டவர்களாகவும்” இருக்கிறோம் என்பதுதான் நாங்கள் உண்மையான பெரியாரியல்வாதிகள் என்பதற்கான சான்று. ஒன்றை மட்டும் சொல்லி வைக்கிறோம். பெரியார் திராவிடர் கழகத்தை முடக்கி விட்டு, ‘யுக்திகளுக் குள்ளேயே’ காலத்தை கடத்தி விடலாம் என்று மட்டும் கனவு காண வேண் டாம். அடிக்க அடிக்க எழும் பந்து போல், பெரியார் திராவிடர் கழகம் வலுப் பெற்று, களப் பணிகளில் இறங்கும்; எங்களின் தோழர்கள் உறுதி யான கொள்கையாளர்கள்; திருவரங்கம் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோது - தாங்கள் யார் என்பதை அடையாளம் காட்டியவர்கள். நன்கொடை செலுத்தி கல்லூரிகளில் படிக்க வந்த அப்பாவி மாணவர்கள் அல்ல.

பெரியாரின் ‘குடிஅரசுகள்’ வீர மணிகள் இருட்டடிக்கும் சுயமரியாதை இயக்கக் காலத்தின் உணர்வலைகளை இனி தட்டி எழுப்பப் போவது உறுதி. அப்போது ‘யுக்தி’யாளர்களும் அவரது ‘பக்தியாளர்களும்’ கல்வி நிறுவனங் களின் கணக்குகளை பார்த்துக் கொண் டிருக்க முடியாது; ‘துரோகிகள்’ என்று புலம்பிக் கொண்டிருக்க முடியாது. காலத்தின் அறை கூவலை சந்திக்க வேண்டியிருக்கும்.

- ‘இரா’


உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர தீர்ப்பு!

கோயில்களில் பெண்கள் அர்ச்சகர்களாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், பூசை உட்பட சடங்குகளில் அவர்கள் பங்கேற்பதை, பாலின அடிப்படையில் தடுக்கக் கூடாது என்றும், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பை (செப்.5, 2008) வரவேற்று பாராட்டுகிறோம். உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு, சமூக வரலாற்றில் பதியத்தக்க இத்தகைய புரட்சிகர தீர்ப்பை வழங்கியிருக்கிறார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் துர்க்கையம்மன் கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது மகள் அர்ச்சகராக பூசை செய்ய விரும்பினார். இப்படி, துணிவான ஒரு முடிவுக்கு வந்த அந்த பெண்ணின் பெயர் பின்னியக்காள் (வயது 45).

பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துள்ள, ஆணாதிக்க-பார்ப்பன-சாதியமைப்பு சமூகம், அதை அனுமதித்து விடுமா? எதிர்ப்புகள் எழுந்தன. ஆணாதிக்க சாதி வெறியர்கள் இதைத் தடுக்க முயன்றபோது, உசிலம்பட்டி வட்டாட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழு, பெண்ணுக்கு பூசாரியாகும் உரிமையில்லை என்று கூறி, ஆண் பூசாரி ஒருவரையும் தேர்வு செய்தது. உள்ளூர் சாதி ஆதிக்க பெண்ணடிமைக்கு அரசு எந்திரமும், துணை போயிருப்பது தான் வெட்கக் கேடானது. நீதிபதி தமது தீர்ப்பில் இதைத் தவறாமல் சுட்டிக் காட்டியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அரசு ஊழியரான ஒரு தாசில்தாரே பிற்போக்குசக்திகளின் மூடத்தனமான கருத்துகளுக்கு துணை போயிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டி, கண்டித்துள்ளார்.
“வணங்கப்படக்கூடிய கடவுள் - அம்மன் என்ற பெண் உருவத்தில் இருந்தும்கூட, ஒரு பெண் அர்ச்சகராக இருக்கக் கூடாது என்று கூறுவதுதான், துயரமாகும். வேத காலங்களில்கூட - பெண்கள், பூஜைகள், சடங்குகள் நடத்த அனுமதிக்கப்பட் டுள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. அதிர்ஷ்ட வசமாக, இந்த துர்க்கையம்மன் கோயில் ஆகம சா°திர வளையத்துக்குள் சிக்கிக் கொள்ளவில்லை. நாட்டின் தென் பகுதியிலுள்ள உள்ளூர் கலாச்சாரங்களின் அடையாளங்களான கிராமக் கோயில்கள் ‘மனு°மிருதி’களிலிருந்து விலகியே உள்ளன’ என்று நீதிபதி சமூகப் பார்வையோடு சுட்டிக் காட்டியுள்ள கருத்துக்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகளாகும்.

சமூகக் கண்ணோட்டத்தில் இக்கருத்துக்களைப் பதிவு செய்த நீதிபதி, சட்டப் பிரிவுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார். இத்தகைய உரிமைகளை பெண்களுக்கு வழங்குவதன் வழியாக மட்டுமே அரசியல் சட்டத்தின் பிரிவு 15 மற்றும் 51ய(ந) ஆகிய பிரிவுகள் செயல்பூர்வமாகிறது என்ற அர்த்தத்தைப் பெற முடியும். அரசியல் சட்டத்தின் 15வது பிரிவு பால் அடிப்படையில் குடிமக்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறுகிறது.சட்டப் பிரிவு 51ய(ந) பெண்களின் கவுரவத்தைக் குலைக்கக் கூடிய செயல்பாடுகளைக் கைவிடுதலை ஒவ்வொரு குடிமகனுக்குமான அடிப்படை கடமையாக வலியுறுத்துகிறது” என்று நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஆகமங்களுக்குள்ளும், மனுஸ்மிருதிக்குள்ளும் கோயில்கள் கொண்டு வரப்படும்போது, அங்கே அரசியல் சட்டம் வழங்கியுள்ள பெண்ணுரிமைகள் மீறப்படுவதை தீர்ப்பு சுட்டிக்காட்டியிருப்பதோடு ஆகமங்களும், மனுஸ்மிருதிகளும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானவையே என்பதை, இத் தீர்ப்பு துணிவுடன் பிரகடனப்படுத்தியிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பெண் அர்ச்சகராகப் பதவியைத் தொடருவதற்கு மாவட்ட ஆட்சியாளர் உரியப் பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என்றும், நீதிபதி கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.


ஆகமங்களுக்கு உட்படாத கிராம கோயில்களுக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், ஆகம கோயில்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பு கிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தபோதே, கழகம் இந்தக் கருத்தை சுட்டிக் காட்டியுள்ளதை குறிப்பிட விரும்புகிறோம். தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை கோயில்களில் பெண்கள் ஊழியர்களாக பணியாற்றுவதற்கே தடை விதித்திருந்தது. மாநில அரசு தேர்வாணையம் இந்து கோயில் நிர்வாகத்துக்கான ஊழியர்கள் தேர்வில் பெண்கள், விண்ணப்பிக்கக் கூடாது என்று விளம்பரம் செய்திருந்ததை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையைத் தகர்த்தது. அதற்குப் பிறகு தான் கோயில் நிர்வாகங்களில், பெண்கள், பணியாற்றும் உரிமை கிடைத்தது. இப்போது, நீதிபதி கே. சந்துரு வழங்கியுள்ள தீர்ப்பு ஆகமக் கோயில்களுக்கும் விரிவாகும் போதுதான் பெண்கள் மீது மதம் விதித்து வரும் தடைகளைத் தகர்க்க முடியும். ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்’ என்ற உரிமை கோரிக்கை ஆண்களுக்கானதாக மட்டுமே நின்று விட்டால், அது முழுமையான உரிமைக்கான கோரிக்கையாகவும் இருக்க முடியாது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

ஏன் இந்த அவலமோ!

பெரியார் திராவிடர் கழகம் 27 “குடிஅரசு” தொகுப்புகளை வெளியிடுவதை ‘விடுதலை’யில் அதன் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் (ஆகஸ்டு 24) இவ்வாறு குறை கூறி இருந்தார்.“ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக தொகுதிகளை வெளியிடுவதால் யாருக்குப் பயன்? பணம் கொடுத்து வாங்கும் சக்தி உள்ளவர்களின் அலமாரிகளில் அழகு செய்யும். சாதாரண மக்களுக்குச் சென்றடையாது.”இப்படி எழுதி இரு வாரங்கள் மட்டுமே ஓடின. செப்டம்பர் 7 ஆம் தேதி விடுதலையில் இப்படி ஒரு விளம்பரம்:

“பெரியார் களஞ்சியம் வாங்குவோருக்கு அழகிய பை அன்பளிப்பு. 31 தொகுதிகள் 10,000-க்கும் அதிகமான பக்கங்கள். ரூ.2500 மட்டுமே!” போச்சுடா! ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் வெளியிடுவதால் யாருக்குப் பயன்? என்று எழுதியவர்கள், இப்போது, முகத்தில் கரி பூசிக் கொள்ள வேண்டியதுதான். வீரமணியை நம்பி, அவர் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லாம் விரிவுரைகள் தரத் தொடங்கினால், இப்படிப்பட்ட விபத்துகளைத் தான் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை எழுத்தாளர்கள் புரிந்து கொள்வது நல்லது. இனி, அடுத்து என்ன?


“வாராது வந்த மாமணியாய் - தந்தை பெரியாருக்குக் கிடைத்த - அந்தத் தமிழர் தலைவர்தான் ஒரே மூச்சில், 10000க்கும் மேற்பட்ட பக்கங்களில் 31 தொகுதிகளை அச்சிட்டு, அகிலத்துக்கும் பரப்பி, அதுவும் அடக்கவிலை ரூ.2500-க்கே வழங்கி சாதனை படைக்கிறார் என்பதால், துரோகிகள் வயிறு எரிகிறார்கள்” என்று அடுத்த கட்டுரையில் இவரே எழுத வேண்டியிருக்கும். எனவே வீரமணியின் விரிவுரையாளர்கள் அவரை நம்பி, வாதங்களை முன் வைக்காதிருப்பதே சாலச் சிறந்தது! இல்லையேல் இந்த அவலம் தான்!

மயிலாடுதுறையில் தொடர் பிரச்சார எழுச்சி

மயிலாடுதுறை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு - பகுத்தறிவு விளக்க தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் ஆகஸ்டு 18, 19, 20 ஆகிய நாட்கள் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

எழுச்சியாக நடைபெற்ற தொடர் பிரச் சாரக் கூட்டங்கள் அனைத்திற்கும் பெரியார் தி.க. மாவட்ட துணைத் தலைவர் இரசீத்கான் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் நா. இளையராசா, மாவட்ட செயலாளர் தெ. மகேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து கூட்டங்களிலும் முதல் நிகழ்ச்சி யாக ஏகலைவன் அன்பு இன எழுச்சிப் பாடல்கள் பாடினார். பின்பு சிற்பி இராசன், ‘மந்திரமல்ல தந்திரமே’ எனும் பகுத்தறிவு விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். இதனை அடுத்து பெரியார் தி.க. தலைமை கழக பேச்சாளர் நங்கவள்ளி அன்பு எழுச்சியுரை யாற்றினார்.

18.8.08 அன்று மாலை 4 மணிக்கு கொற்கை என்ற கிராமத்தில் பிரச்சாரக் கூட்டம் தொடங்கியது. பின்பு மாலை 6 மணிக்கு ஆனதாண்டவபுரத்தில் எழுச்சியாக நடைபெற்றது. அப்பகுதி தோழர்களான வினோத், ஸ்ரீதர், பகலவன் ஆகியோர் காலை முதல் பெரியார் இன எழுச்சிப் பாடல்களை ஒலிக்கச் செய்தனர். பின்பு கூட்டத்தின் இறுதியில் கழக கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே இரவு 8 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 10 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியை பெரும் திரளான மக்கள் கண்டு களித்து வரவேற்றனர்.


19.8.08 அன்று மாலை 4 மணிக்கு மங்கை நல்லூர் கடைவீதியில் பிரச்சார கூட்டம் துவங்கி 6 மணி அளவில் எலந்தங்குடி பகுதி யில் கழக கொடியேற்றி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கோடங் குடி கிராம பகுதியில் பிரச்சாரக் கூட்டம் தொடங்கி 10 மணியளவில் முடிவடைந்தது. இறுதி நாள் நிகழ்ச்சியாக 20.8.08 அன்று மாலை குத்தாலம் கடைவீதியில் 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் கண்டு களித்தனர். பின்னர் 6.30 மணி அளவில் மாப்படுகை கிராம பகுதியில் பிரச்சாரம் துவங்கி 8 மணி வரை நடந்தது. இறுதியாக ரயிலடி கடைவிதியில் 8.30 மணியளவில் துவங்கி 10 மணி வரை நடைபெற்றது.
மூன்று நாள் நிகழ்ச்சியிலும் புதிய பகுதி களில் கழகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. தொடர் பிரச்சாரத்தின் மூலமாக பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் பாட்டினை நங்கவள்ளி அன்பு சிறப்பாக விளக்கினார். மூடநம்பிக்கைகளை தோலு ரிக்கும் நிகழ்ச்சிகளை சிற்பி ராசன் விளக்கி செய்து காட்டினார். கழகத் தோழர்கள் மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் இருசக்கர வாகனங்களில் முழக்கங்களோடும் கொடி களை ஏந்தி வந்தது எழுச்சியாக இருந்தது.மூன்று நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்ற தோழர்கள்: நகர செயலாளர் ஏகலைவன் அன்பு, நகர தலைவர் நாஞ்சில் சங்கர், நகர துணை தலைவர் ராஜா, நகர துணைச் செயலாளர் முகிலன், முத்தழகன், உதயகுமார், விஜி, ஒன்றியத் தலைவர் உ. ஜீவா, ஒன்றிய செயலாளர் இயற்கை, சந்துரு, வினோத், பகலவன், ஸ்ரீதர், ராஜா, பொன்னுதுரை, முரளி, சதீஷ் மற்றும் தோழர்கள் மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

பெரியார் சிந்தனைகள் தமிழர்களின் சொத்து! - தோழர் தியாகு முழக்கம்

பெரியார் தமிழ்நாட்டின் சொத்து. பெரியார் அறிவுக் களஞ்சியம் தமிழர்களின் சொத்து என்று குறிப்பிட்ட தோழர் தியாகு, ‘குடிஅரசு’ கால வரிசைத் தொகுப்பு காலத்தின் தேவை என்று வலியுறுத்தினார்.வீரமணியைக் கண்டித்தும், பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கக் கோரியும், 25.8.2008 அன்று சென்னையில் நடந்த கழக ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுப் செயலாளர் தோழர் தியாக ஆற்றிய உரை:

தந்தை பெரியார் வாழ்க்கை முழுவதிலும் எதிர்ப்பு களைச் சந்தித்து வந்தவர். எதிர்ப்புக் கண்டு அஞ்சாதவர். எப்போதும் பெரியாருடைய பாதை சரளமானதாக, தடையற்றதாக இருந்ததில்லை. அதற்கு பொருத்த மாகவே இப்போது பெரியாரின் கருத்துகளை கால வரிசைப்படி ‘குடிஅரசு’ தொகுப்புகளாக வெளியிடும் முயற்சிக்கும் தடைபோட துடிக்கிறார்கள். பெரியாருடைய கூட்டங்களுக்கும், உரை வீச்சுகளுக்கும், பார்ப்பனர்கள், சனாதனிகள், ஆட்சியாளர்கள் தடை போட்டார்கள். இப்போது பெரியாருடைய நூல்களை வெளியிடுவதைத் தடுப்பது வரலாற்றில் மிகப் பெரும் பின்னடைவு. இது பெரியார் திடலிலிருந்தே வந்திருக் கிறது என்பதுதான் வேதனை. பெரியாரின் நூல்கள் வெளி வரப்போகிற செய்தி தமிழ் நாடெங்கும் தெரிய வேண்டும். அக்கரையுள்ள எல்லோருக்கும் தெரிய வேண்டும்.
பெரியார் திராவிடர் கழகம் செய்திருக்கிற பரப்புரை, விளம்பரம் போதுமானதல்ல என்று கருதியோ என்னவோ இந்தச் செய்தியை விளம்பரப்படுத்துவதற்கு நேரடி உதவி செய்திருக்கிறார் வீரமணி. அவருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். (கைதட்டல்)எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அவர் கூறியிருக்கிற காரணங்கள் என்ன? முதலாவதாக இவைகளுக்கெல்லாம் அறிவுசார் காப்புரிமையை கோருகிறார். இது மிகவும் வேடிக்கையானது. சட்டம் என்ன சொன்னாலும் அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். தோழர் கொளத்தூர் மணி ‘நல்லது சந்திப்போம்’ என மிகப் பொருத்தமாக பதிலளித்து இருக்கிறார்.

நாம் சொல்ல விரும்புவதெல்லாம் பைபிள் என்கிற புதிய நூலுக்கு அறிவு காப்புரிமை கோரவில்லை. போப் பாண்டவர் பார்த்துத்தான் பைபிள் வெளியிட வேண்டுமென்றால் உலகத்தில் இத்தனை மொழிகளில் பைபிள் வெளி வந்திருக்காது. தமிழிலேயே எத்தனை மொழிப் பெயர்ப்புகள் வந்திருக்கின்றன தெரியுமா? இவைகளை எல்லாம் போப் ஆண்டவர் அங்கிகரிக்க வேண்டும் என்றால் பைபிள் உலகிலே பரவியிருக்காது.
மார்க்சின் ‘மூலதனம்’ தொகுப்பு அவருடைய வாழ்நாளில் ஒரே ஒரு தொகுதிதான் வெளிவந்தது. ஆங்கிலத்தில் அதை ஏங்கல்சு மொழி பெயர்த்து வெளியிட்டார். மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில், மார்க்சும், ஏங்கல்சும் மறைந்த பிறகு தான் மற்ற தொகுப்புகளும், தொகுதிகளும் வந்தன. மாஸ்கோவிலிருந்து மூலதன நூலின் மொழி பெயர்ப்புகள் வெளி வந்திருக்கின்றன. அந்த மொழி பெயர்ப்புகளில் நிறைய தடைகள், இடையூறுகள் இருப்பதாகக் கருதி வேறு மொழிப் பெயர்ப்புகள் இருக்கின்றனவா எனத் தேடினோம். ‘பென்குயின்’ என்ற முதலாளித்துவ வெளியீட்டு நிறுவனம், மிகப் பெரிய பொருளியல் வாதியான மார்க்சின் ‘மூலதனம்’ முழுமையும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. அதை வைத்துத் தான் நாங்கள் தமிழில் மொழி பெயர்த்து மூலதனம் முழுவதையும் சீர் செய்தோம். இப்படி மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர்களுடைய நூல்கள் எல்லாம் உலகில் பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக் கின்றன. முறையாக தொகுத்தும், வகுத்தும், பகுத்தும் பதிப்பித்து வெளியிட்டிருக் கிறார்கள் அழகிய அச்சு வடிவிலே. இதற்கெல்லாம் அன்றைக்கு சோவியத் அரசோ, மற்றவர்களோ தடை போட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்குமான உறவு பிரிந்ததற்கு பிறகு எழுதின நூல்களையெல்லாம் சீனாவிலிருந்து புதி தாக மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள். இதற்கு யாரும் அறிவு சார் காப் புரிமை கோரவில்லை.
நம்மைப் பொருத்தவரை தந்தை பெரியார் தமிழ்நாட்டினுடைய லெனினாக, தமிழ் நாட்டினுடைய தேசிய தந்தையாக நாம் மதிக்கிறோம். இந்தியாவிற்கு எப்படி காந்தியை முக்கியமாகக் கருதுகிறார்களோ, அதுபோல் தமிழ்நாட்டிற்கு தந்தை பெரியார் தான். பெரியார் தமிழ்நாட்டின் சொத்து. பெரியாருடைய அறிவுக் களஞ்சியம் என்பது நம்முடைய சொத்து. அவர்கள் ஒரு திடலை, ஒரு கட்டிடத்தை ஒரு சிலையை சொந்தமாக வைத்துக் கொள்ளட்டும். நமக்கு கவலை இல்லை.

பவுத்தம் என்பது போருக்கெதிரான - சிந்தனைதான். ஆனால் சிங்கள பவுத்தவாதிகள் தமிழர்களுக்கு எதிராக போர் வெறி பிடித்து அலைகிறார்கள். அவர்களிடம் என்ன யிருக்கிறது என்றால், புத்தருடைய பல் இருக்கிறது. ஒரு இடத்திலே புத் தருடைய முடியை வைத்திருக்கிறார்கள். ஆனால் பவுத்தம் அவர்களிடம் காணாமல் போய் விட்டது. அந்த பவுத்தத்தை பெரியாரும், அம்பேத்கரும் தான் இந்த நாட்டுக்குரிய, மக்களுக்குரிய கருத்துகளாக வழங்கினார்கள்.புத்தருடைய பல்லையும், முடியையும் வைத்துக் கொண்டு - பவுத்தர்களாக உரிமை கோரும் சிங்களர் - பவுத்தத்தின் சிந்தனைக்கு எதிராக போர் வெறி பிடித்து அலைகிறார்கள். இங்கே பெரியாருடைய உடைமைகளை வைத்திருப்போர் - பெரியார் நூல்களை வெளியிட தடை கோருகிறார்கள். அம்பேத்கருடைய நூல்களை மராட்டிய அரசு ஆங்கிலத்திலே வெளியிட்டது மட்டுமல்ல, தமிழிலேயும் அரசு துணையோடு வெளியிட்டது. நானும் ஒரு சில தொகுதிகளை மொழி பெயர்த்து கொடுத்திருக்கிறேன். இப்படி நூல்கள் எல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது.தந்தை பெரியாருடைய கருத்துகளுக்கு அவருடைய சொற்களில், அவருடைய பதப் பிரயோகத்தில் கால வரிசைப்படியான சிந்தனையில் தான் பணி மலர்ச்சியை புரிந்து கொள்ள முடியும். அப்படி வெளியிடப்படாத ஒரு பிழை இருக்கிறது. அந்த வரலாற்றுப் பிழையை நிறைவு செய்கிற முயற்சியை பெரியார் திடலே செய்திருக்கு மானால் நாம் மெத்த மகிழ்ந்திருப்போம். அப்படி அவர்கள் செய்யத் தவறியிருக்கிற நிலையிலேதான் அவர்கள் அறிக்கையிலே கூறியிருப்பதைப் போல பல ஆண்டுகளுக்கு முன்பு இவற்றையெல்லாம் முறைப்படி எழுதி ஒப்படைத்தும்கூட அவற்றை வெளியிட முயற்சி செய்யாத நிலையில் பெரியார் திராவிடர் கழகம் அரும்பாடுபட்டு ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளிக் கொண்டு வர முயல்கிறது. தந்தை பெரியாருடைய தமிழ்நாடு தமிழருக்கே என்பதை உயிர் முழக்கமாக கொண்டிருக்கிற எங்களது ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்’ இதற்காக நன்றிப் பாராட்டுகிறது. ஒவ்வொரு தமிழனும் பெரியார் திராவிடர் கழகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். வீரமணி அவர்களும் நன்றி சொல்லியிருந்தால் கண்ணியமான, மரியாதையாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக வீரமணி கண்டுக் கொள்ளாமலாவது இருந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அவர் விளம்பரம் கொடுக்கிறார். இவைகளை எல்லாம் தடை செய்வேன், நடவடிக்கை எடுப்பேன் என்கிறார். இது தேவையில்லாத வேலை.நாங்கள் பெரியார் நூல்களை வெளியிடவில்லையா என்று வீரமணி கேட்கிறார். நீங்கள் எதையுமே வெளியிடவில்லை என்பதல்ல எங்கள் வாதம். நீங்கள் சுவரொட்டி அடித்து விளம்பரபடுத்தித் தான் நீங்கள் வெளியிட்டிருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. தந்தை பெரியார் காலத்திலேயே அவருடைய எழுத்துக்கள் வெளிவந்தன. எத்தனையோ கூட்டங்களில் பெரியாரே புத்தகங்களையெல்லாம் வண்டிகளில் எடுத்துக் கொண்டு வந்து விற்றுவிட்டு வா என்று சொல்லுவார். திரும்ப வண்டியிலே ஏறுகிற பொழுது எவ்வளவு புத்தகங்கள் விற்றன என்று கேட்பார். முப்பது புத்தகம் விற்றது என்றால், ஆகா முப்பது பேர் படிப்பார்கள் அல்லவா என்று பெரியார் மகிழ்ச்சி யடைவார். அப்படித்தான் தன்னுடைய சிந்தனைகளை பரப்புவதற்கு எளிய முயற்சிகளை செய்தார். பெரியார் காலத்தில் சின்ன சின்ன புத்தகங்கள் வெளி வந்தன. அவைகளை தொகுத்து வெளியிடுகிறபோது தான் பெரியாருடைய சிந்தனை பனி மலர்ச்சியை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
நாம் ஒரு செய்தியை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவாளர்கள், மார்க்சிய வாதிகள், அறிவாளிகள் என்று பிறப்பிலேயே எவனும் பிறப்பதாக நாம் நம்புவதில்லை. பிறந்த பிறகுதான் அறிவு வருகிறது. அதுவும் படிப்படியாகத்தான் வருகிறது. மரத்தடியிலே உட்கார்ந்தால் ஞானம் வந்து விடும் என நாம் நம்புவதில்லை. இது எல்லோருக்கும் பொருந்துகிற செய்தி. பெரியாருடைய சிந்தனை வளர்ச்சி என்பது நமக்குத் தேவையானது. அது எப்போது கிடைக்கும் என்றால், பெரியாருடைய எழுத்துக்கள் கால வரிசைப்படி முழுமையாக எதையும் நீக்காமல், திருத்தாமல், மறைக்காமல் வெளியிடபடுகிறபோது மட்டுந்தான் கிடைக்கும். அப்படித் தான் ஆய்வாளர்கள் எதிர்ப் பார்ப்பார்கள். தங்களைத் தவிர, மற்றவர்கள் பெரியார் நூல்களை வெளியிட்டால் கருத்துகள் சிதைக்கப்பட்டு விடும் என்று கூறுகிறார்கள்.
பெரியார் எழுதியதை ஒன்றை வைத்துக் கொள்ளலாம். இன்னொன்றை நீக்கி விடலாம், ஒரு சொல்லை விட்டு விடலாம், இன்னொரு சொல்லை சேர்த்துக் கொள்ளலாம் என்றால் அதற்குப் பெயர்தான் திரிபுவாதம், புரட்டல் வேலை. இந்த புரட்டல் வாதம், திரிபுவேலை கூடாது என்பதால்தான் உள்ளது உள்ளபடியே தொகுத்து வெளியிடுகிற முயற்சியை, கடினமான பணியை பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் கேட்கிறேன், வீரமணி சொல்வது போல இப்படியெல்லாம் வெளியிட்டால் தவறாகப் பயன் படுத்தி விடுவார்கள் என்று கூறுகிறாரே; பெரியாரை யார் தவறாகப் பயன்படுத்த முடியும். அதனுடைய எழுத்துக்களை திருத்தி விடுவார்கள், பதிப்பிக்கிறோம் என்ற பெயரில் மாற்றி விடுவார்கள் என்கிறார் வீரமணி. அப்படி இருந்தால் நீங்கள் அம்பலப்படுத்துங்கள். உங்கள் கையிலுள்ள ஏட்டில் எழுதலாம். பாருங்கள் பெரியார் எழுதியது ஒன்று, அவர்கள் வேறொன்றை காட்டுகிறார்கள் என்று. மார்க்சு அவர்கள் தன்னை மார்க்சியவாதியாக அறிவித்துக் கொள்வதற்கு முன்னால் நிறைய எழுதிக் குவித்தார். கையெழுத்துப் படிகளாகவே அவையெல் லாம் இருந்தன. அதற்குப் பெயரே ( Early Manuscripts ) அதாவது, தொடக்கக்கால கையெழுத்துச் சுவடிகள். இன்றைக்கு பல ஆய்வாளர்கள் பிற்காலத்தில் மார்க்சி யத்தோடு முரண்பட்டவர்கள் எல்லாம் உண்மையான மார்க்சியமே அந்தக் கையெழுத்துச் சுவடிகளில் தான் இருக்கின்றது. அவற்றை மொழி பெயர்த்து வெளியிட வேண்டுமென்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அப்படி பெரியாரைப் பற்றி எத்தனைக் கருத்துக்கள் வேண்டுமானாலும் வரட்டும், முட்டி மோதட்டும், இதுதான் பெரியாரியல் வாதம், விவாதம் அரங்கேறட்டும். அதற்கெல்லாம் அடிப்படையாக பெரியாருடைய படைப்புகள் அவருடைய எழுத்தில், மொழியில், சொல்லில், காலவரிசைப்படி வரவேண்டும்.
வீரமணி அவர்களே! நீங்கள் ஏற்கனவே வெளியிட் டிருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் வெளியிட்டிருப்பதாலேயே மற்றவர்கள் வெளியிடக் கூடாது என்பதில்லை. நீங்கள் வெளியிடாதவற்றையும் வெளியிடலாம். நீங்கள் வெளியிட்டவற்றையும் மீண்டும் வெளியிடலாம். அய்யா ஆனைமுத்து அவர்கள் பல நூல்களை கொண்டு வந்திருக்கிறார். அது மட்டுமல்ல ‘பெரியார் சிந்தனைகள்’ என்று மூன்று பெரிய தொகுப்பையும் கொண்டு வந்தார். அதற்கும் ‘குடிஅரசு’ தொகுப்பிற்கும் வேறுபாடு உண்டு. அது பொருள் குறித்த வரிசையிலே கொண்டு வரப்பட்டது. ஆனால், ‘குடிஅரசு’ கால வரிசைப்படி வருகிறது. இதில் எல்லா வகையான சிந்தனைகளும் இருக்கும். அப்படிப்பட்ட நல்ல நூல் வருவது இன்றியமையாதது.பெரியார் ஒரு காலத்திலே சொன்னதற்கும், இன்னொரு காலத்திலே சொன்னதற்கும் முரண்பாடுகள் இருக்குமோ என்றெல்லாம் வீரமணி கவலைப்படு கின்றார். எங்களுக்கோ இன்றைக்கு கலைஞர் அவர்களைப் பற்றி வீரமணி எழுதி கொண்டிருப் பனவற்றையும், பேசிக் கொண்டிருப்பனவற்றையும், அன்றைக்கு ஜெயலலிதாவைப் பற்றி எழுதிக் கொண் டிருந்தவற்றையும் பேசிக் கொண்டிருந்தனவற்றையும் ஒரே தொகுதியாக நாங்கள் வெளியிட்டால் (சிரிப்பு, கைதட்டல்) முரண்பாடுகள் தெரியும். அதை நாமே கூட அவருக்காக வெளியிடலாம். (கைதட்டல்)

வீரமணி அவர்களை கேட்க விரும்புகிறேன், பெரியாரைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் பெரியார் காசிக்குப் போன நிகழ்ச்சி காட்டினீர்கள். எந்த அளவுக்கு நீங்கள் காட்டினீர்கள் என்றால் நமக்கு பெரிதும் வேதனையாக இருந்தது. சாதாரணமாக ஒரு குறியீட்டின் மூலமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு செய்தி. எச்சில் இலையை பெரியார் வழித்துச் சாப்பிடு வதாக காட்டினீர்கள். நீங்கள் காட்டாமல் விட்டது 1938 ஆம் ஆண்டு மொழிப் போர் நிறைவடைகிற பொழுது சென்னைக் கடற்கரையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் முழக்கமிட்டாரே அதை நீங்கள் அடியோடு மறைத்து விட்டீர்கள். ஏன்? எச்சில் இலையை வழித்து சாப்பிடுகிற மாதிரி காட்டும் அளவுக்கு கலையதார்த்த உணர்வு இருக்கிறது. ஆனால் பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியதை நீங்கள் காட்ட மாட்டீர்கள். ‘குடிஅரசு’ தொகுதிகள் எல்லாம் வெளி வருமானால் பெரியார் கொள்கை எதுவென்று தெரிந்து விடும்.

வீரமணிக்கு கொள்கை கிடையாது. யுக்தி மட்டுந்தான் உண்டு. அந்த யுக்தியால் மட்டுமே தான் பெரியாரைப் பார்க்கிறார். தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் சொன்னதெல்லாம் கொள்கை யல்ல, யுக்தி என்று வீரமணி அவர்கள் விடுதலை இராசேந்திரனுக்கும், எஸ்.வி. இராசதுரைக்கும் பதில் சொன்னதை நான் மறக்கவில்லை. அது யுக்தியா கொள்கையா என்பதை பெரியார் எழுத்திலேயே படித்து தெரிந்து கொள்கிற வாய்ப்பு பெரி யாருடைய ‘குடிஅரசு நூல்கள் வெளி வருகிறபோது நமக்கு கிடைக்கும்.
உருவமில்லாத பொம்மையல்ல பெரியார். உயிருள்ள பெரியாரின் கொள்கைகள் நமக்கு இன்றியமையாதது என்றால், பெரியாரின் சிந்தனைக் களஞ்சியம் நூல்களாக வெளிவரும் எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு ‘குடிஅரசு’ தொகுப்பு வெளி வரும் என்பது உறுதி.
தமிழக அரசு வீரமணியை காப்பாற்று வதற்காகவாவது (கைதட்டல்) பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். எங்களுக் காகக் கூட அல்ல. இத்தனையும் மீறி குடிஅரசு நூல்கள் வெளியிடுகிறபொழுது வீரமணி என்ன செய்வார் பாவம். அந்த ஒரு காரணத்திற்காகவாவது இந்த நேரத்தில் உங்கள் நண்பர் வீரமணியைக் காப்பாற்றுங்கள். அவருக்கான நன்றிக் கடனை செலுத்துங்கள்.
செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளில் பெரியார் நூல்கள் அரசுடையாக்கப் பட்டன என்ற அறிவிப்பு வரட்டும்.
பெரியார் வழியில் சமத்துவபுரம் கண்டவர், பெரியாருக்காக நீங்கள் நிறைய செய்திருக்கலாம். ஒன்றை நீங்கள் மறந்து விடக் கூடாது. பெரியார் தன் வாழ்நாளில் தனி மனிதருக்கு சிலை வைக்க சொன்னார் என்றால் அது கலைஞருக்கு மட்டுந்தான். இன்றைக்கு நீங்கள் பெரியாருக்கு சிலை கூட வைக்க வேண்டாம். பெரியாரின் நூல்களை நிரந்தரமாக வரலாற்றிலே பதியச் செய்யுங்கள். வருங்கால தலை முறைக்கு படிக்கக் கொடுங்கள். ஆய்வாளர்கள் அதைப் படித்து தமிழ் சமூகத்திற்கு வழிகாட்டட்டும்.

பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்குக!

பெரியார் நூல்களை நாட்டுடைமை யாக்க வலியுறுத்தியும், வீரமணியை கண்டித்தும் நாகை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலாடு துறை வட்டாட்சியர் அலுவலகம் முன் பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பெரியார் தி.க. நாகை மாவட்டத் தலைவர் இரா. பரசு ராமன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் நா. இளையராசா, மாவட்ட செயலாளர் தெ. மகேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் தி.க. மாவட்ட துணைத் தலைவர் இரசித்கான் கண்டன உரை யாற்றினார். தொடர்ச்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலாளர் மா. ஈழவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அமைப்பாளர் தங்க. அய்யா சாமி, புரட்சி கவிஞர் கலை இலக்கிய மன்ற மாவட்டச் செயலாளர் அன்பு ராசப்பா, தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் இரா. முரளிதரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக மயிலாடுதுறை நகரச் செயலாளர் ஏகலைவன் அன்பு நன்றி கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர், நகரத் துணைச் செயலாளர் முகிலன், சீர்காழி நகரச் செயலாளர் பெரியார் செல்வம், மயிலாடுதுறை நகரத் துணைத் தலைவர் ராஜா, குத்தாலம் ஒன்றியத் தலைவர் செ. இயற்கை, ஒன்றியச் செலயாளர் உ.ஜீவா, இளைஞரணி அமைப்பாளர் முத்தழகன், மயிலாடுதுறை ஒன்றிய அமைப்பாளர் முரளீதரன், பொன்னு துரை மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட் டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழர் உரிமை இயக்கத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சென்னையில் அண்ணா நூற்றாண்டு விழா பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டங்கள்
சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாக்கள் நகர் முழுதும் பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டங்களாக நடத்தப்பட்டன. ஆகஸ்ட் 25 முதல் 28 வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்த கூட்டங்களில் சிற்பி. ராசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார்.
ஆக. 25 ஆம் தேதி திருவல்லிக்கேணி வி.ஆர். பிள்ளை வீதியில் நடந்த கூட்டத்தில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் ஆகியோர் அண்ணாவின் சமுதாய - பகுத்தறிவு கருத்துகளை விளக்கி உரையாற்றினர். ம. தம்பிதுரை தலைமை தாங்கினார். பா. பாபு நன்றி கூறினார். ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நடந்தது.
ஆக. 26 அன்று மயிலை விசாலாட்சி தோட்டத்தில் க. சுகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் வழக்கறிஞர் குமாரதேவன், ஈ.பி.இளங்கோ, சிறப்புரையைத் தொடர்ந்து சிற்பி ராசன் நிகழ்ச்சி நடந்தது. தி. இராவணன் நன்றி கூறினார்.
ஆக. 27 இல் இராயப்பேட்டை நடேசன் சாலையில் நடந்த கூட்டத்துக்கு ஆ. பிரபாகரன் தலைமையில் வழக்கறிஞர் குமாரதேவன் சிறப்புரையாற்றினார். செந்தில் நன்றி கூறினார்.
ஆக. 28 இல் இராயப்பேட்டை மாவடி வினாயகன் கோயில் தெருவில் தோழர் ரமேசு தலைமையில் வழக்கறிஞர் குமாரதேவன், ஈ.பி.இளங்கோவன், டிங்கர்குமரன் சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, சிற்பி. ராசன் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.

கோவையில் குறும்படங்கள் திரையிடப்பட்டன

கோவையில் பெரி யார் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்க குழு சார்பில் 15.8.2008 அன்று குறும்படங்கள் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈழத் தமிழர்களின் அவலங்களை விளக்கியும், யாழ் நூலகம் எரிக்கப்பட்டது குறித்தும் எடுக்கப்பட்ட எரியும் நினைவுகள், வதை, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் சிறுகதையான உடைப்பு, பெண்ணடிமையை விளக்கும் மறை பொருள்ஆகிய
4 குறும்படங்கள் திரையிடப்பட்டன. திரையிடுவதற்கான எல்.சி.டி. கருவியை கிளாடிசு இலவசமாக வழங்கினார். 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பயிலரங்க குழு சார்பில் மாநகர பொருளாளர் மணிமாறன், மாநகர தலைவர் ம.ரே. இராசக்குமார், தமிழ்நாடு மாணவர் கழக ச. மணிகண்டன், கதிரவன், காளிமுத்து, சாஜித் உட்பட பலர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.

பெரியாரியல் பயிலரங்கம்
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத் தில் 17.8.2008 ஞாயிறு மாலை பெரியாரியல் பயிலரங்கம், பயிலரங்க குழு சார்பில் நடந்தது. “வன்கொடுமை தடுப்புச் சட்டம்” எனும் தலைப்பில் வழக்கறிஞர் சு. குமாரதேவன் சிறப்பான உரை நிகழ்த்தினார். இ.மு.சாஜித் வரவேற்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி தலைமை தாங்கினார். கலந்து கொண்ட தோழர்கள் உரையின் முடிவில் பல சந்தேகங்களை கேட்டனர். அனைத்திற்கும் வழக்கறிஞர் சு. குமாரதேவன் தெளிவாக விளக்கம் அளித்தார். பல புதிய தோழர்கள் பங்கேற்றனர். முடிவில் ச. மணிகண்டன் நன்றி கூறினார்.