நம்பியூர் போராட்டம் வெற்றி!

நம்பியூரில் திருமண மண்டபத் தில் அருந்ததியினருக்கு பணம் கட்டியும் இடம் வழங்க மறுத்த தீண்டாமையை எதிர்த்து, ஈரோட்டில் பெரியார் திராவிடர் கழகம் தொடங்கி வைத்த கிளர்ச்சி விரிவடைந்து, சாதி ஒழிப்பு கூட்டியக்கமாக பரிணாமம் பெற்றது. தலித் அமைப்புகளும், பெரியார் திராவிடர் கழகமும் இணைந்து, தீண்டாமைக்கு எதிராக களமிறங்கின. மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிடும் நிர்ப்பந்தத்தை போராட்டக்களம் உருவாக்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமண மண்டப நிர்வாகி களுடன் கலந்து பேசினார். சாதி வெறி பணிந்தது. கடந்த 19.3.2008 அன்று அனுமதி மறுக்கப்பட்ட அருந்ததி சமூக தோழர் மாரியப்பன் இல்ல நிகழ்ச்சியை நடத்த, திருமண மண்டப நிர்வாகிகள் அனுமதி வழங்கினர். ஆயிரம் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டக் கழக செயலாளர் கோபி. இளங்கோ மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுமூக தீர்வை உருவாக்கிட முயன்ற மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், திருமண மண்டப நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து, சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

கழகத்துக்கு திருமாவளவன் பாராட்டு!

உடுமலையில் - சாளரப்பட்டி தீண்டாமை வெறியைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் - விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆற்றிய உரையிலிருந்து -“நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருமைத் தோழர் அதியமான் தலைமையில் நடைபெறுகிற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது கண்டனத்தை தெரிவிப்பதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன். சாளரப்பட்டி மக்களுக்கு நேர்ந்த வன்கொடுமை களை எண்ணி ஒரு புறம் வேதனைப்பட்டாலும், அண்ணன் இராமகிருட்டிணன் சொன்னதைப்போல ஒரே களத்தில் நின்று போராடுவதற்கு உரிமைக் குரல் எழுப்புவதற்கான ஒரு வாய்ப்பை இந்த நாள் நமக்கு வழங்கி யிருக்கிறது.இன்றைக்கு சாதி ஒழிப்பு கூட்டியக்கம் என்கிற ஒரு தலைப்பின் கீழ் நாமெல்லாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்கிற அடிப்படையிலே நம்பியூர் பிரச்சனையை முன்னிறுத்தி, அண்ணன் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் கோவையிலே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் வந்திருந்தபோது, ஒரு கூட்டியக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நம்பியூர் திருமண மண்டபம், ஒரு அருந்ததிய சகோதரன் தான் பெற்ற பிள்ளைக்கு காதணி விழா நடத்துவதற்காக பணம் கட்டி பதிவு செய்த நிலையில், அவன் தன்னுடைய நண்பனோடு தெலுங்கில் பேசினான் என்கிற ஒரே காரணத்திற்காக இவன் ரெட்டியாராகவோ, நாயுடுவாகவோ இருக்க முடியாது. இவன் அருந்ததியினராகத்தான் இருக்க முடியும் என்று அவன் யூகம் செய்து கொண்டு, உடனடியாகவே அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள், உனக்கு இடம் இல்லை என்று அவன் மறுதலிக்க, அந்த செய்தி விடுதலைச் சிறுத்தைகளின் கவனத்துக்கு வர அது சுசி கலையரசன் கவனத்துக்கு வர,அது என் கவனத்திற்கு வர அதை விடுதலைச் சிறுத்தைகள் போராட்டமாக முன்னெடுத்தபோது, எல்லோரும் சேர்ந்து செய்வோம் என்று கொளத்தூர் மணி, இராமகிருட்டிணனும் அந்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டபோதுதான் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, நாம் இணைந்தே செய்வோம் என்று அன்றைக்கு ஒப்புதல் கொடுத்து ஒரே நேரத்தில் எல்லோரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து முறையிட்டோம். அன்றைக்கும் ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

ஆக, அந்த சாதி ஒழிப்புக் கூட்டியக்கத்தின் சார்பிலே நம்பியூரில் முதல் களத்தை அமைத்தோம். நம்முடைய கடுமையான கண்டனத்தை தெரிவித் தோம். உள்ளபடியே அரசு கடுமையாக அஞ்சியது, பின் வாங்கியது. சாதி வெறியர்களுக்கு துணை நிற்கிற நிலையில் இருந்து பின் வாங்கியிருக்கிறது. அதிலும் இன்னும் அடுத்தகட்ட பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.நாம் அரசாங்கத்திடமிருந்து மண்டியிட்டுக் கெஞ்சுகிற நிலையிலிருந்து நம்முடைய அணுகுமுறைகளை மாற்றியாக வேண்டும். காவல்துறை அதிகாரியிடம் மனு கொடுத்து பாதுகாப்பு கொடு என்று கெஞ்சுகிற இந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். இதுதான் இன்றைக்கு இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டம். இங்கே அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். யார் யர் எந்தக் காலகட்டத்திலே எப்படி செயல்பட்டார்கள். மால்கம் எக்°, புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற தலைவர்களின் நடவடிக்கைகளை எல்லாம் இங்கே சுட்டிக்காட்டினார்கள். தோழர் சம்பத் அவர்கள்கூட சீனிவாசராவ் அவர்களைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். அவர் குடியால் பார்ப்பனராக இருந்தாலும்கூட, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக, விடுதலைக்காக ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியிலே களப்பணியாற்றியவர் என்கிற அந்த உணர்வோடு, நன்றி உணர்வோடு இங்கே சுட்டிக் காட்டினார்கள். ஆக, நாம் - எங்களைத் தாக்கி விட்டார்கள், காயப்படுத்தி விட்டார்கள், எங்கள் குடிசைகளை தீ வைத்து விட்டார்கள் என்று பாதிப்படைந்த பிறகு முறையிடுவது என்ற நிலையிலிருந்து மாறி பாதிப்படைந்த பிறகு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்கிற நிலையில் இருந்து மாறி எங்களை இனி தாக்கவே முடியாது என்கிற நிலைக்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு அத்தகைய துணிவை இத்தகைய ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் தரும். இந்த ஆர்ப்பாட்டத்தால், பேரணியால் நமக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று நீங்கள் ஒருபோதும் எண்ணக் கூடாது” என்றார் திருமாவளவன்.

செய்தி: கருமலையப்பன்

மீனவர் மீது துப்பாக்கிச் சூடு தொடங்கி 25 ஆண்டுகள் ஆகஸ்ட் 13 இல் ‘கண்டன நாள்’!

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 20 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக்குக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:• தமிழக மீனவர்கள் மீது முதன் முதலாக 13.8.1983 ஆம் ஆண்டு சிங்கள கடற்படை தொடங்கிய துப்பாக்கிச் சூடு, 25 ஆண்டு களாகத் தொடர்ந்து இதுநாள் வரை 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகும் இதுவரை ஒருமுறை கூட சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டிக்க முன்வராத இந்திய அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பிரதமர் மன்மோகன்சிங், சிங்களக் கடற்பகுதியில்தான் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுடுகிறது என்று கூறி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி யிருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சிங்களக் கடற்படையால் இதுவரை 1,000 படகுகளுக்கு மேல் சேதமடைந்து பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகளும் உபகரணங்களும் அழிந் துள்ள நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும்- பிறகு இந்திய தமிழக அரசின் தலை யீட்டில் விடுதலை செய்வதும் தொடர் கதையாகி தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் நிலை குலைந்து போய் நிற்கிறது. இந்த நிலையில் கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர் களுக்கான மீன்பிடி உரிமையை மீட்டுத் தரும் உடனடி நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் இக்கூட்டம் வலி யுறுத்துகிறது.

• பார்ப்பன இந்துத்துவா சக்திகளுக்கு மாற்றாக இருக்கும் ஒரே காரணத்தால் மதச்சார்பற்ற தமிழர்களால் ஆதரிக்கப் பட்ட இந்திய தேசிய காங்கிரஸ கட்சி, தமிழக மீனவர்களின் படுகொலைக்குக் காரணமான சிங்கள கடற்படைக்கு ஆயுதங்கள் வழங்கி துணை போவதை தமிழகத் தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியோ, பயங்கரவாத எதிர்ப்பு என்று கூக்குரலிட்டு இந்திய அரசின் அத்தகைய தமிழினத் துரோகத்துக்கு பச்சைக்கொடி காட்டி வருவதை கவனத்தில் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டு வரும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பதிலடி தரத் தயாராக வேண்டும் என்று தமிழர்களுக்கு இக்கூட்டம் அறைகூவல் விடுக்கிறது.

• - தமிழக மீனவர்களுக்கு எதிராக- சிங்களக் கடற்படையின் துப்பாக்கிச் சூடு தொடங்கி எதிர்வரும் ஓகஸ்ட் 13 ஆம் திகதியோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கண்டித்து-தடுத்து நிறுத்தும் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாத இந்திய அரசைக் கண்டித்து சிங்களக் கடற்படைத் துப்பாக்கிகள்; சுடத் தொடங்கிய அதே ஓகஸ்ட் 13 ஆம் திகதி, தமிழகம் முழுவதும் தமிழர்கள் வீடுகளில்- பொது இடங்களில் கறுப்புக் கொடிகள் ஏற்றி கண்டனக்கூட்டங்கள்- ஊர்வலங்கள் நடத்தி இந்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தும் கண்டன நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன், தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் கு. பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கோ.சு.மணி ஆகியோர் உரையாற்றினார். இரா. உமாபதி நன்றி கூறினார். உரை அடுத்த இதழில்.

தோழர் டி.ராசாவுக்கு பாராட்டு!

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து படுகொலை செய்தும் அனைத்துலக சட்டங்களுக்கு எதிராக கடலுக்கடியில் கண்ணிவெடிகளை புதைத்தும் வரும் சிங்கள அரசைக் கண்டித்தும் அத்தகைய அரசுக்கு இந்தியா ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கலாமா? என்ற நியாயமான கேள்வியை மாநிலங்களவையில் எழுப்பி - தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் டி.ராசாவை கோடானுகோடி தமிழர்கள் சார்பில் பாராட்டி இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

0 comments: