ராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொலை தெரியவில்லையா?

சொந்த மண்ணின் மக்களான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ய அந்நிய நாட்டுக்கு ஆயுதம் தரும் ஒரே அரசு இந்தியாதான் என்று புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளி யில் 20.3.208 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் மங்கையர் செல்வன் இதனைத் தெரிவித்தார். கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:

மீனவர்கள் சமுதாயம் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக- தனித்துவிடப்பட்ட சமுதாயமாக இருந்து வருகிறது. இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் குழு அறிக்கையில் கூட மீனவர்களுக்கு தனித்தொகுதி- தனி நிதியம் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை.மன்னார் கடற்பரப்பின் கரையோரங்களின் இருபக்கமும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். ஆனால் அந்தத் தமிழர்களை இந்தி பேசுவோரும் சிங்களம் பேசுவோரும்தான் கண்காணிக்கின்றனர். பிரான்சில் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது அமைச்சராக இருந்த பூட்டாசிங் பிரான்சுக்கே சென்று சீக்கியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தினார்.வங்கதேச போரின் போது அங்குள்ள வங்காளிகளுக்கு ஆபத்து நேர்ந்தால் மேற்கு வங்க காவல்துறையை அனுப்பி பாதுகாப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் சித்தார்த் சங்கர் ரே கூறினார். ஆனால் 300-க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை படுகொலை செய்துள்ள நிலையில் 25 ஆண்டுகாலமாக ஒரு கண்டனத்தைக் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை.

இலங்கையில் நடக்கின்ற போரில் அந்நாட்டு இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு இராணுவ இலக்கு. போரில் இராணுவ இலக்கு மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வழமையானது. யார் அந்த சரத் பொன்சேகா? யாழ்ப்பாணம் செம்மணியில் 600 தமிழர்களை கொன்று புதைத்தவர்.அப்படியான சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது கடுமையாக கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம், 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவரை எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை.மதுரையில் ஒரு சிங்களவன் தற்கொலை செய்து கொண்டதற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசாங்கமோ, சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் ரூ. 5 லட்சமும் வழங்குகிறது.இலங்கை இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஒப்பந்தங்களை எழுதுவதற்கான பொருட்களையல்லவா கொடுக்க வேண்டும்? பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்?தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சிங்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லை? என்றார் கொளத்தூர் மணி.

தென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி: கடல் தொழிலுக்குச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வாரத்துக்கு 3 நாள் மட்டுமே இந்திய கடற்படை அனுமதிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறுகிறது. டீசலுக்கும் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. கடுமையான சோதனைகளிடப்படுகிறது. இப்படி நிராயுதபாணியாக நாங்கள் கடல் தொழிலுக்குச் செல்லும்போது எங்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்கிறது.கடல் தொழிலில் ஈடுபடுவோர் எல்லை தாண்டி மீன்பிடிப்பது இயல்பான ஒன்று. இந்த அடிப்படை விடயமே தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமராக உள்ளார் என்றார் அவர்.

புதுவை பிரதேசத்தின் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன்:மேற்குவங்கத்துக்குச் சொந்தமான தீவை இந்திரா அம்மையார் வங்கதேசத்துக்குத் தாரைவார்க்க முயற்சித்தபோது அதனை இன-மொழி உரிமைகள் பற்றி பேசாத கட்சியின் ஜோதிபாசு கேள்வி எழுப்பினார். கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்த போது தமிழக முதல்வராக இருந்தவர் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.அண்மையில் புதுவைக்கு சீன ஆய்வாளர் ஒருவர் வருகை தந்திருந்தார். ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணமாக அவர் கூறியது, ஈழ விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குபவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்றார்.பிரான்ஸ் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது டர்பன் விவகாரம் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார். காரணம் அவர் சீக்கியர். ஆனால் தமிழனை சிங்களக் கடற்படை சுடும்போது அவன் கடற்பரப்பில் நீ நுழைந்தால் அவன் சுடத்தான் செய்வான் என்று அவர் கூறுகிறார்.சிங்களக் கடற்படையைச் சேர்ந்த குணதிலக்க என்பவரை 1986 ஆம் ஆண்டு கடல் எல்லையை மீறி வந்ததாக இந்தியக் கடற்படை கைது செய்து உடனே விடுதலை செய்தது. அதே குணதிலக்கதான், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் இரத்தக் காயங்களுக்கு உட்படுத்தினார். எந்த குணதிலக்கவை மனிதாபிமானத்தோடு இந்தியா விடுவித்ததோ அதே குணதிலக்கதான் மனிதாபிமானமே இல்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.ராஜீவை சுட்டுக் கொன்றமைக்காக சோனியாவோ ராகுல்காந்தியோ நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கவில்லை. ஆனால் சிங்களவனால் சுட்டுக் கொல்லப்பட்ட 300 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்கள்தான் நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது.

ராஜீ;வ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு, மீனவர் படுகொலைகள் தெரியவில்லையா?சொந்த மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்ய அன்னிய நாட்டுக்கு ஆயுதங்களை கொடுக்கிற ஒரே அரசு இந்திய அரசுதான். ஹிட்லர் கூட இந்தக் கொடுமையைச் செய்தது இல்லை.ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்றால்தான் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விடிவு வரும் என்றார் மங்கையர் செல்வன்.

தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோசுமணி, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உள்ளிட்டோரும் கண்டன உரையாற்றினர்.கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஆகஸ்ட் 13-இல் கண்டன நாள் கடைபிடிக்க பெரியார் திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

மன்னார் போர் முனையில் பெண்புலிகளின் வீரப்போர்

தமிழர்களின் பாரம்பர்யப் பிரதேசம் மன்னார்! இங்கே கடலோர வாணிகம் செழித்திருந்த காலம் ஒன்று உண்டு. மன்னார் கடல் பரப்பில் அரபுக் கப்பல்கள் குதிரைகளைக் கொண்டு வந்து, மன்னார் சந்தையில் விற்பதும், மன்னார் கடல்பரப்பில் கிடைக்கும் விலை மதிப்புள்ள முத்துக்களை வாங்கிச் சென்றதும் உண்டு. அந்த மன்னார் பகுதியில்தான் - இப்போது ஒவ்வொரு நாளும் விடுதலைப்புலி களுக்கும், சிங்கள ராணுவத்துக்குமிடையே சண்டை நடந்து வருகிறது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்களப் படைகள் மன்னாரை தம் வசமாக்கிட அங்கே குவியத் தொடங்கின. அதற்கு முன் 1999 இல் இதே மன்னார் பகுதியை ஆக்கிரமிக்க ‘ரணகோச’ என்று (போர் முழக்கம்) பெயர் சூட்டி, பெரும் தாக்குதலைத் தொடர்ந்தது சிங்கள ராணுவம். அதை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். அதே மன்னாரில் இன்று ஒவ்வொரு நாளும் தொடர் யுத்தம்.

மன்னார், ஒரு சதுப்பு வெளி, மண்ணைத் தோண்டுவதற்கு மண்வெட்டியைப் போட்டு வெட்டினால், மண் தெறிக்காது. மண் வெட்டிதான் உடையும். அத்தகைய சதுப்பு நிலப் பகுதியானாலும், எதிரியின் ஆக்கிரமிப்புக்கு விட்டுவிட முடியுமா?மன்னார் பிரதேசத்தைக் காப்பாற்ற, காவல் அரண்களை அமைத்தனர் விடுதலைப் புலிகள். அகழிகளை வெட்டி, எல்லைப் பகுதி முழுதும் காப்பரண்களை அமைத்தனர். (காப்பரண் என்றால் எல்லைப் பகுதி நெடுக பல மைல் தூரத்துக்கு 10 அடிக்கு ஒரு அரண் அமைத்து, அதில், 24 மணி நேரமும் துப்பாக்கியோடு கண்விழித்து எதிரிகளின் ஊடுருவல் நிகழ்ந்து விடாமல் காப்பது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கே குவிந்த சிங்களப் படை 6 மாதம் முழுமையாக தன்னை தயார்படுததிக் கொண்டு, செப்டம்பர் மாதத்தில் (24.9.2007) தனது முதல் தாக்குதலை காப்பரண்கள் மீது தொடங்கியது. இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் அமைத்தது ஒற்றைக் காப்பரண்தான். பெரும்படையாக குவிந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொருவராக எல்லைப் பாதை நெடுக காவல் காப்பார்கள். 75 மைல் தூரம் விரிந்து நிற்கும் இந்த ஒற்றைக் காப்பரண் மீது சிங்கள ராணுவத்தின் பெரும் படை தாக்குதல் தொடுத்து வருகிறது.

ஆனால் - ஒரு அங்குலம்கூட காப்பரணைத் தகர்த்து, சிங்கள ராணுவத்தால், ஊடுருவ முடியவில்லை என்பதுதான் முக்கியம்.2007 செப்டம்பர் 24 ஆம் தேதி, ராணுவத்தின் முதல் தாக்குதல் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. பெண் புலி லெப். அருமலர் காப்பரண் தாக்கப்பட்டது. காப்பரணில் அப்போது இருந்த பெண் புலிகள் 5 பேர் மட்டுமே. பெரும் படையுடன் தாக்க வந்த சிங்களத்தை - இந்த 5 பெண் புலிகளும் எதிர் கொண்டனர். மாலை 5.30 மணி வரை தாக்குதல் நீடித்தது. துப்பாக்கிச் சூட்டில் காயப்படுவதும், பிறகு காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து, மீண்டும் திருப்பி சுடுவதுமாக அந்தப் புலிகள் எதிர்த் தாக்குதல் நடத்திக் கொண்டே இருந் தனர். ஊடுருவ முயன்ற சிங்களப் படை திரும்பி ஓட்டமெடுத்த நிலையில், அந்த 5 பெண் புலிகளும் உடல் முழுதும் ஏந்திய குண்டு காயங்களோடு வீர மரணத்தைத் தழுவினர். இந்த வீர காவியம் படைத்த போர் நடந்த பகுதி ‘கட்டுக்கரை குளக்கட்டு’.

தோற்றோடிய சிங்களப் படை மீண்டும் அதே காப்பரணைத் தாக்கி ஊடுருவ - தாக்குதலைத் தொடங்கியது. இப்போது பெண் புலி காப்டன் கோதை தலைமையிலான புலிகள் தாக்குதலை எதிர் கொண்டனர். முதற் சண்டையில் விதையாகிய தோழியரின் ரத்தமும், சதையும் ஊறி வீரத்தோடு எழுந்து நின்று, கடுமையாக மோதியது. சிங்களப் படையினரிடம் பலியாகாமல், வெளி யேறுவதற்கு வாய்ப்பிருந்த நிலையிலுங் கூட, பெண்புலி கோதை, படையை எதிர்த்துப் போரிட்டு, வீரமரணத்தைத் தழுவி, ஊடுருவலைத் தடுத்தார்.கட்டுக்கரையில் தொடங்கிய தாக்குதலை எல்லைப்பகுதி முழுதும் ஒரே நேரத்தில் ராணுவம் விரிவாக்கியது. அந்த யுத்தம் ஒவ்வொரு நாளும், இப்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மாதம் ஒரு முறை யுத்தம் என்ற நிலை மாறி, ஒவ்வொரு நாளும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெருமளவில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுவதாக சிங்களம் பொய்ச் செய்திகளைப் பரப்பு கிறது. பிரபாகரன் மீதும் குண்டு வீசப் பட்டு, படுகாயமடைந்ததாக பொய்ச் செய்திகளைப் பரப்பியது. பொய் முகத்திரை கிழிந்து போனது. இப்போது மன்னாரில் என்னதான் நடக்கிறது?‘வீட்டுக்கு ஒரு போர் வீரன்’ என்ற முழக்கத்தோடு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போர் வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். நேருக்கு நேர் மோதும் மரபு வழி யுத்தம் நடந்து கொண்டிருக் கிறது. உலக வல்லரசுகள் வழங்கியுள்ள ராணுவ பலத்துடன் சிங்களம் படை முகாமை நிறுத்தியிருக்கிறது. புலிகளின் ஒற்றைக் காப்பரணை ஊடுருவி நகர முடியாமல் சிங்களத்தின் பெரும்படை ஒவ்வொரு நாளும் பெரும் இழப்பு களை சந்தித்து வருகிறது.

எல்லைப் பகுதியில் காப்பரணில் சண்டையில் நிற்கும் பெண் புலிகளை நேரில் சந்தித்து அளவளாவி படம் எடுத்து வரலாம் என்ற நோக்கத்தோடு போர் மேகம் சூழ்ந்த நிலையிலும், சாரதா என்ற பெண் புலி தலைமையிலான அணி மன்னார் பகுதிக்குச் சென்றது. ஒவ்வொரு காப் பரணாகச் சென்று பெண் புலிகளிடம் உசாவி விட்டு வரும் நிலையில் சிங்களப் படை திடீர்த் தாக்குதலைத் தொடங்கி யது. மிகவும் சக்தி வாய்ந்த பீரங்கியால் (50 கலிபர்) ராணுவம் சுட்டுத் தள்ளுகிறது. 50 அடி தூரத்திலுள்ள காப்பரண் மீது தாக்குதல் நடக்கும் போது, சாரதாவின் அணி, அடுத்த காப் பரணில் தோழிகளுடன் பேசிக் கொண் டிருந்தது. அந்த நிலையிலும் அரணில் இருந்த பெண் புலிகள், “வாங்கோ, வாங்கோ அக்கா” என்று அன்புடன் உபசரித்து, அடுப்பை மூட்டி, உணவு தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். தேனீர் பரிமாறப்பட்டது. ‘என்னடா இது? முன்னுக்குச் சண்டை நடக்கிறது? இவர்களை நோக்கி, எந்த நேரத்திலும் திரும்பலாம்; ஆனாலும், அதை வழமையாக எதிர்க் கொண்டு, அன்பான உபசரிப்புகளை வழங்கிக் கொண் டிருந்தது கண்டு சாரதா அணி வியந்தது.மன்னார் போர் அரங்கில் நிற்கும் படை அணியினர் அனைவருக்கும் உணவு வேளைகளுக்கு இடையே சாப்பிடக் கூடிய சத்தான உணவுப் பொருள்களை வாங்கித் தருமாறு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரன், பெண் புலி கேணல் யாழினியிடம், ஒரு தொகைப் பணத்தைத் தந்திருந்தார். காப்பரண் முழுதும் படைவீரர்கள் அனைவருக்கும் இதை வழங்க 10 நாட்கள் ஆகிவிடும். அதற்குள் உணவு கெட்டுப் போக வாய்ப்புண்டு. எனவே யாழினி ஒவ்வொருவருக்கும் ‘சோன் பப்ளி’ எனும் இந்திய இனிப்புப் பெட்டியை வாங்கிக் கொடுத்து விட் டார். அப்போது - ஒரு புதிய பெண் போராளி கேணல் யாழினியிடம் கேட்டார், “அக்கா, எங்களுக்குத்தான் மூன்றுவேளை சாப்பாடும் வந்து கொண்டிருக்கே, அதுவே போதும்; எதற்கு அண்ணன், இதை எல்லாம் தர வேண்டும்?” என்று கேட்டார். “சண்டைக்குப் புறப்படும்போது கொக்கோ பாற்கட்டிப் பெட்டிகளை யும், பல்விளக்கும் தூரிகைகளையும் (பிரஷ்) தலைவர் தந்துவிடுவார்” என்று சிரித்துக் கொண்டே கூறினார், யாழினி. ‘எங்க வீட்டிலேயே ஒரு பெட்டி இனிப்பு வாங்கி எல்லோரும் சாப்பிடு வோம்; நாங்கள் வசதியான குடும்பம் தான். ஆனால், அண்ணன், ஆளுக்கு ஒரு இனிப்பு பெட்டி கொடுத்துள்ளாரே!” என்றார், அந்தப் பெண் புலி.“அக்கா அண்ணனை நாங்கள் சந்திக்க வேண்டும்; கேட்டுச் சொல் லுங்க” என்று புதிய பெண் புலிகள் மரணத்தை எந்நேரமும் எதிர்கொள்ளக் கூடிய அந்த சூழலிலும் இதையே கோரிக்கையாக வைத்தனர்.போராட்டமே வாழ்க்கை; வாழ்க்கையே போராட்டமாய் - மன்னார் போர் அரங்கு மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மோதி மோதிப் பார்க்கும் சிங்களம் - பெண் புலிகளின் வீரத்தாலும், தியாகத்தாலும், தோல்வி களையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.- நமது செய்தியாளர்

0 comments: