பெரியார் எவருக்கும் பதிப்புரிமை வழங்கவில்லை

பெரியார் எவருக்கும் பதிப்புரிமை வழங்கவில்லை சமுதாயப் புரட்சியாளர் பெரியாரின் சிந்தனைகள் மக்களுக்கானவையே!
உயர்நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன் தாக்கல் செய்த பதில் மனு


பெரியார் திராவிடர் கழகம் - குடிஅரசு தொகுப்புகளை வெளியிடுவதற்கு தடை கோரியும், பெரியார் திராவிடர் கழகம் தங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்றும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு மனுவுக்கு பதிலளித்து கழகத் தலைவர், பொதுச்செய லாளர் சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதி எம். ஜெயபால் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களுக்கு பதில் தருவதற்கு கி.வீரமணி தரப்பு வழக்கறிஞர்கள் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து வழக்கு 15 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பில் வழக்கறிஞர் துரைசாமியும், பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் சார்பில் பெண் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் அவர்களும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இரண்டு மனுக்களிலும் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் சுருக்கம்:

வழக்கறிஞர் துரைசாமி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
முதலில் மனுதாரர் கி. வீரமணி பெரியாரின் தொண்டர் என்றும், நாத்திகர் என்றும், மதத்தில் நம்பிக்கையற்றவர் என்றும் கூறுகிறார். ஆனால், அவர் தாக்கல் செய்த மனுவில் தன்னை ஒரு ‘இந்து’ என்று கூறியிருக்கிறார். இதிலிருந்தே அவர் உண்மையான பெரியார் தொண்டர் இல்லை என்பது தெரிகிறது. அதன் காரண மாகவே பெரியார் இறக்கும் வரை அறக் கட்டளையில் அவரை உறுப்பினராக நியமிக்க வில்லை.பெரியாரின் எழுத்துக்கள் தனது நிறுவனத்துக்கு மட்டுமே உரிமையுடையது என்று கி.வீரமணி கோருவதற்கு, சட்டப்படி உரிமை கிடையாது. 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டம் - 19வது பிரிவின்படி பதிப்புரிமை கோரும் ஒருவர், எழுத்தாளரிடமிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். பெரியார், அப்படி எழுத்துப்பூர்வமாக எழுதித் தரவில்லை. வீரமணி செயலாளராக உள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற “சொசைட்டி”யின் விதிகள் (22வது விதி) பெரியார் “வாங்கிய” சொத்துகளைப் பற்றித் தான் குறிப்பிடு கின்றனவே தவிர, படைப்பாற்றலால் உருவாக்கப்படும் பேச்சு எழுத்துகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே, மனுதாரரின் அறக்கட்டளை விதிகளே பெரியார் நூல்களுக்கு உரிமை கோராத போது தனது நிறுவனத்துக்கு உரிமையில்லாத ஒன்றின் மீது மனுதாரர் இடைக்கால தடை கோர முடியாது.
பெரியார் தனது எழுத்துகளும், பேச்சுகளும் மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று விரும்பிய தலைவரே தவிர, அதை வைத்து பொருள் ஈட்டும் எண்ணம் கொண்டவர் அல்ல. தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் - பரப்புங்கள் என்றும், தனது கருத்துகள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்றும் பெரியார் எழுதியும், பேசியும் வந்துள்ளார். அத்துடன், பெரியார் ஒரு தத்துவத் தலைவர். தனது தத்துவங்களை மக்களிடம் பொதுக் கூட்டங்கள் வழியாக பரப்பியவர். பொதுக் கூட்டங்கள் இல்லாத போது, தமக்கு சரி என்று தோன்றிய சிந்தனைகளை ‘குடி அரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’, ‘ரிவோல்ட்’ போன்ற பத்திரிகைகளில் எழுதினார். சமூகத்தை மாற்றியமைப்பதே அவரது தத்துவத்தின் முழுமைனயான நோக்கம். எனவே மக்களுக்கான பெரியாரின் தத்துவங்களுக்கு இந்த பூமிப் பந்தில் தனியுரிமை கோரும் உரிமை எவருக்கும் கிடையாது. மனுதாரரான கி.வீரமணி மட்டுமே, தனது தத்துவத்தைப் பரப்ப வேண்டும் என்று பெரியார் ஒரு போதும் கூறவில்லை. அதற்கான உரிமையுள்ளவர் மனுதாரர் மட்டுமே என்று பெரியார் தனது அறக்கட்டளை விதிகளிலும் குறிப்பிட வில்லை. பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புவதற்கு பெரியாரைப் பின்பற்றும் தொண்டர்களுக்குக்கூட உரிமை உண்டு.
எல்லோருக்கும் பொதுவானவர் பெரியார். அவர் தேசத்துக்கே பொதுவானவர். மனுதாரரும், அவரது அறக்கட்டளைக்கும் மட்டுமே சொந்தமானவர் அல்ல. அவரது எழுத்துக்களைப் போற்றிப் பாதுகாக்கும் உரிமை - ஒவ்வொரு பெரியார் தொண் டருக்கும் உண்டு. இதில் மக்களை மனுதாரர் கட்டுப்படுத்த முடியாது. அது மட்டுமல்ல, பெரியாரின் சிந்தனைகளை காலவட்டத் துக்குள்ளும் அடக்கிட முடியாது. அவை காலங்களைக் கடந்து நிற்பவை. மனித குலம் நீடிக்கும் வரை அவரது சிந்தனைகளை வெளி யிடவும், பரப்பவும் பெரியார் தொண்டர் களுக்கு உரிமை உண்டு. மனுதாரரான கி.வீரமணி மட்டுமே பெரியாரைப் பின்பற்றுபவர் அல்ல; ஆயிரக் கணக்கில், இலட்சக்கணக்கில் பெரியாரைப் பின்பற்று வோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே பெரியார் கொள்கைகளைப் பரப்பும் உரிமை உண்டு. பெரியார் தனது வாழ்நாளின் மிக கடைசி காலத்தில்தான், தானும் 12 பேருடனும் சேர்ந்து இந்த அறக்கட்டளையை நிறுவினார். அதுகூட தனது தனிப்பட்ட அசையா சொத்துகள் விண்ணப்பதாரரான கி.வீரமணி போன்ற எந்த தனிப்பட்ட நபர்களுக்கும் போய் சேர்ந்து விடாமல், பரவலாக மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே உருவாக்கினார்.
பெரியார் பதிப்புரிமையை தன்னிடம் எழுத்துப் பூர்வமாகக் கொடுத்துள்ளார் என்ற சான்று ஆதாரத்தைக் காட்டாதவரை, விண்ணப்பதாரர், சட்டப்பூர்வமாக பதிப்புரிமை கோர முடியாது. பதிப்புரிமை சட்டத்தின் 19வது பிரிவு, இதைத் தான் கூறுகிறது.
பெரியார் 1952 ஆம் ஆண்டு உருவாக்கிய அறக்கட்டளையின் வழியாக பெரியார் தனது அனைத்து எழுத்துகளையும், அறக்கட்டளைக்கு உரிமையாக்கியுள்ளார் என்று மனுதாரர் கூறுவது உண்மையல்ல. முதலில் அந்த அறக்கட்டளையை பெரியார் மட்டுமே தொடங்கவில்லை. அறக்கட்டளைகளின் 13 உறுப்பினர்களில் பெரியார் இருக்கிறார். அதில் பெரியாரால் உருவாக்கப்பட்ட படைப்புகள் பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பெரியார் உயிருடன் இருந்த காலத்திலேயே வே. ஆனைமுத்து - பெரியார், எழுத்து பேச்சுகளைத் தலைப்புவாரியாக ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’களிலிருந்து 3 தொகுதிகளாக தொகுத்து, அதை பெரியார் மறைவுக்குப் பிறகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையில் வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில், மனுதாரரும் (கி.வீரமணி) பங்கேற்றார். இவை தவிர, பெரியாருடைய கருத்துகளை பல்வேறு பதிப்பகங்கள் ஏற்கனவே வெளியிட் டுள்ளன. மனுதாரர்கூட இப்படி வெளியிட்டுள்ளார். உதாரணத்துக்கு சிலவற்றைக் குறிப்பிடுகிறோம்.
1. ‘தந்தை பெரியார் இறுதி சொற்பொழிவு’ வெளியீடு : மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி; 1993.
2. ‘தந்தை பெரியாரின் இறுதி சொற்பொழிவு நாத்திகம்’ வெளியீடு; 2002.
3. பெரியாரின் “அபாய சங்கு” வெளியீடு: பெரியார் அச்சிடுவோர் வெளியீட்டு குழுமம்; 1983.
4. ‘புதியதோர் உலகு செய்வோம்’ வெளியீடு: அறிவுப் பண்ணை.
5. பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” முனைவர் கே.எம்.ராமாத்தாள் ஆங்கில மொழியாக்கம் வெளியீடு: தமிழ் மண் பதிப்பகம், 2007.
6. பெரியாரின் “கல்வி சிந்தனைகள்” வெளியீடு: இந்திய மாணவர் சங்கம்-2007.
7. பெரியார் ஈ.வெ.ரா.வின் “வாழ்க்கை துணை நலம்”; வெளியீடு: கோட்டையூர் ரெங்கம்மாள் மற்றும் ஏ.எல். சிதம்பரம் (குறிப்பு: கி.வீரமணியின் திருமணத்தின்போது வழங்கப்பட்டது.)
8. “பகுத்தறிவாளர் மன்ற தொடக்க விழாவில் பெரியார் பேருரை” வெளியீடு: கோவை அண்ணா சிந்தனையாளர் பேரவை; 1971.
9. பெரியார் எழுதிய ‘கடவுளர் கதைகள்’; வெளியீடு: சிந்தாமணி பதிப்பகம், 2003.
10. “இஸ்லாம் பற்றி பெரியார்”; ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது. அறிமுக உரை எழுதியவர் ஜி.அலோசியஸ்; வெளியீடு: கிரிட்டிக்கல் கியுஸ்ட் - 2004.
11. ‘மதமும் - மனிதனும்’ - பெரியார் பச்சையப்பன் கல்லூரியில் 24.11.1964-ல் பேசியது; வெளியீடு: பகுத்தறிவாளர் கழகம்; 1993.
12. ‘குடிஅரசு’ 1925 முதல் தொகுதி; குடிஅரசு - 1926 (இரு தொகுதிகள்) வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம் - 2003.
13. “சிந்தனே வாய்ச்சரிக்கதே” (கன்னடத்தில் - பெரியாரின் பேச்சு மொழி பெயர்ப்பு) வெளியீடு: சுவபிமான காலுவலி கருநாடகா-2006.
14. ‘இந்த சந்தர்ப்பம் மறுபடியும் வராது’ - பெரியாரின் குடந்தைப் பேருரை. வெளியீடு: பெரியாரியல் குடும்பங்களின் நட்புறவு சங்கம்-1984.
15. ‘இனி வரும் உலகம்’ - பெரியார் எழுதியது. வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு - 1958.
16. ‘மதமும் - அரசியலும்’ பெரியார் ஈ.வெ.ரா. வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு - 1960.
17. ‘ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்’-ஈ.வெ.ரா. வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு-1961
18. தீண்டாமையை ஒழித்தது யார்? (வைக்கம் போராட்ட வரலாறு) வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு - 1964.
19. கிராம சீர்திருத்தம் - பெரியார் சொற்பொழிவு - சிந்தனை பண்ணை.
1925 இல் பெரியார் தொடங்கிய குடிஅரசுக்கும் 1952 இல் பெரியார் நிறுவிய அறக்கட்டளைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அறக்கட்டளை தொடங்குவதற்கு முன்பே ‘குடிஅரசு’ நின்று போய்விட்டது.‘குடிஅரசு’ பத்திரிகைக்கும், ஆசிரியராகவும், பதிப்பாளராகவும், வெளியிடு வோராகவும், பலர், பல்வேறு காலகட்டங்களில் இருந்து வந்துள்ளனர். அதன் விவரம்:
தேதி - பத்திரிகை - ஆசிரியர் - அச்சிடுவோர் மற்றும் வெளியிடுவோர்
2.5.1925 - குடிஅரசு - ஈ.வெ.ராமசாமி - கே.ஏ. அப்பையா நாயக்கர் மற்றும் ஈரோடு சுயராஜ்ய பிரஸ் தங்கப் பெருமாள் பிள்ளை
26.7.1925 ” ஈ.வெ.ராமசாமி - கே.ஏ.அப்பையா நாயக்கர் ஈரோடு சுயராஜ்ய பிரஸ்
27.9.1925 ” ஈ.வெ.ராமசாமி - ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நாயக்கர் ஈரோடு டைமண்ட் பிரஸ்
18.4.1926 ” ஈ.வெ.ராமசாமி -சா.ராமசாமி நாயக்கர் நாயக்கர் ஈரோடு ஸ்டார் பிரஸ்
9.1.1927 ” ஈ.வெ.ராமசாமி ஈ.வெ.ரா. - நாகம்மையார் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
16.6.1929 ” ஈ.வெ.ராமசாமி ஜெ.எஸ்.கண்ணப்பர் திராவிடன் பிரஸ், சென்னை.
2.2.1930 ” ஈ.வெ.ராமசாமி ஈ.வெ.ரா. - நாகம்மையார் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
29.11.1931 ” ஆசிரியர் பெயர் ஈ.வெ.ரா. - நாகம்மையார் இல்லை ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
26.11.1933 -புரட்சி - ஆசிரியர் பெயர் எஸ்.ஆர். கண்ணம்மாள் இல்லை ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
24.12.1933 புரட்சி - ஈ.வெ.ராமசாமி எஸ்.ஆர். கண்ணம்மாள் ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
31.12.1933 ” ஈ.வெ.கிருஷ்ணசாமி எஸ்.ஆர். கண்ணம்மாள் ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
4.2.1934 ” ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
26.8.1934 - பகுத்தறிவு- ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
13.1.1935- குடிஅரசு - ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
20.8.1939 ” அ. பொன்னம்பலனார் அ. பொன்னம்பலனார் ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்1.7.1944 ” கரிவரதசாமி கரிவரதசாமி ஈரோடு தமிழன் பிரஸ்
3.1.1948 ” கரிவரதசாமி கரிவரதசாமி ஈரோடு தமிழன் பிரஸ்
எனவே ‘குடிஅரசு’க்கு பலர் ஆசிரியராகவும், அச்சிட்டு வெளியிடுவோராகவும் இருந்து வந்துள்ளனர். கடைசியாக ‘குடிஅரசு’க்கு ஆசிரியராகவும், அச்சிட்டு வெளியிடுவோராகவும் இருந்தவர் தமிழன் பதிப்பகத்தைச் சார்ந்த கரிவரதசாமி. கரிவரதசாமியோ, அவரது தமிழன் பதிப்பகத்தாரோ மனுதாரரான வீரமணிக்கு பதிப்புரிமை ஏதும் எழுதித் தரவில்லை.
பதிப்பாளர்தான் பத்திரிகையின் உரிமையாளர் ஆவார். பெரியார் ‘குடிஅரசு’க்கு 27.9.1925-லிருந்து 18.11.1926 வரை மட்டுமே பதிப்பாளராக இருந்துள்ளார். இந்தியாவின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் தமது அறக்கட்டளை சார்பாக நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், மாநாடுகள் நடத்தப்படுவதாகவும் மனுதாரர் கூறுவது உண்மைக்கு மாறானது. அது நீதிமன்றத்தை திசை திருப்புவதாகும். மனுதாரரின் அறக்கட்டளை நல்ல வருமானம் தரக்கூடிய கல்வி நிறுவனங்களைத்தான் நடத்தி வருகிறது.பெரியாரின் வாழ்க்கை வரலாறான ‘தமிழர் தலைவர்’ நூலை வெளியிடுவதற்கு 12.3.1949-ல் ‘ஸ்டார் பதிப்பகம்’ என்ற நிறுவனம் வெளியீட்டு உரிமை கோரி பெரியார் ஈ.வெ.ரா.வுடன் ஒப்பந்தம் போட முன் வந்ததாக மனுதாரர் சமர்ப் பித்துள்ள ஆவணம் மோசடியானது. அந்த ஆவணத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி யின் கையெழுத்தும் இடம் பெறவில்லை. அந்த ஆவணத்தில்கூட அனைத்து உரிமைகளும் ‘குடிஅரசு’க்கே உரிமையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘குடிஅரசு’ பதிப்பகம் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு விடவில்லை. ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’ வந்த பிறகும்கூட - 1964 ஆம் ஆண்டு வரை ‘குடிஅரசு’ பதிப்பக வெளியீடுகள் வெளிவந்து கொண்டுதான் இருந்தன.
சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் ‘குடிஅரசு’ கட்டுரைகளைத் தொகுக்க - தாம் ஒரு குழுவை நியமித்ததாக மனுதாரர் கூறுகிறார். அப்படி, எந்தக் குழுவையும் மனுதாரர் நியமிக்கவில்லை. பெரியாரின் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளி லிருந்து சில ஆவணங்களை சேகரித்தனர். அப்படியே பார்த்தாலும், அதுகூட திராவிடர் கழகம் நியமித்த குழு தான், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளுக்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் உரிமை கோர முடியாது. உண்மையில் மனுதாரரிடம் ‘குடிஅரசு’ பத்திரிகைகள் அத்தனையுமே முழுமையாக கிடையாது. ‘குடிஅரசு’ பத்திரிகைகளை கீழ்க்கண்டவர்களிட மிருந்து நாங்கள் தான் (கொளத்தூர்
மணி) திரட்டினோம்.
சென்னை மறைமலை அடிகள் நூலகம், அண்ணா அறிவாலயத்திலுள்ள பேராசிரியர் ஆய்வக நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம், கரந்தை தமிழ்ச் சுடர் நூலகம், புதுக்கோட்டை ஞானாலயா நூலகம், மதுரை யாதவர் கல்லூரி நூலகம், மதுரை முத்துமுருகன் நூலகம், நாகர்கோயில் ஆசிரியர் புவனன் நூலகம், மேட்டுப்பாளையம் உலக சிந்தனையாளர் நூலகம், ஈரோடு பேராசிரியர் மு.க. சுப்ரமணியம் நூலகம், குளித்தலை தமிழறிஞர் கா.சு. பிள்ளை நூலகம், மன்னார்குடி கோபால முதலியார் நூலகம், விருத்தாசலம் பல்லடம் மாணிக்க நூலகம், சைதை மாக்சிம் கார்க்கி நூலகம், சிங்கப்பூரிலுள்ள தேசிய நூலகம், தேசிய பல்கலைக்கழக நூலகம், ‘தமிழ் முரசு’ நூலகம், தேசிய ஆவணக் காப்பகம், சென்னை கன்னிமாரா நூலகம், ரோஜா முத்தையா நூலகம், காஞ்சிபுரம் கே.பி. ஞானசம்பந்தர், மதுரை சாலமன் பாப்பையா போன்ற பிரமுகர்கள் மற்றும் நூலகங்களிலிருந்து, பெரியாரின் நூல்கள் தேடி சேகரிக்கப்பட்டு, அவரது சிந்தனைகள் தொகுக்கப்பட்டன.
பெரியாரின் ‘ஒரிஜினல்’ மூலப் பிரதிகள் தம்மிடம் இருப்பதாக மனுதாரர் கி.வீரமணி கூறுவது, பரிதாபத்துக்கு உரியது. ‘ஒரிஜினல்’ என்பதற்கான அர்த்தம்கூட அவருக்கு தெரிய வில்லை. அச்சடிக்கப்பட்ட பிரதிகள் ‘ஒரிஜினல்களாக’ முடியாது. ‘ஒரிஜினல்’ என்பது கையெழுத்துப் பிரதிகளாகவே இருக்க வேண்டும். அப்படி, ‘குடிஅரசில்’ பெரியார் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் எதுவும் மனுதாரரிடம் கிடையாது. ‘குடிஅரசு’ பத்திரிகைகளை பாதுகாத்து வைத்துள்ளோரிடமும் கிடையாது. நாங்கள் இதுவரை ‘குடிஅரசு’ 3 தொகுதிகளை வெளியிட்டுள்ளதோடு, செப்டம்பர் 17-ம் தேதி 1927 முதல் 1949 வரையிலான ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட திட்டமிட்டிருந்தோம். கடந்த ஆக°ட் 26-ம் தேதி மேட்டூரில் நடந்த விழாவில் பெரியார் ‘பகுத்தறிவு’ வார ஏட்டை தொடங்கிய, நாளைக் கொண்டாடும் வகையில் அன்று நடந்த சிறப்பான விழாவில், ‘குடிஅரசு’ தொகுப்புகளும் வெளியிடப்பட்டு விட்டன. அப்படி வெளியிடப்பட்ட செய்தி தெரிந்த பிறகே, மனுதாரர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
பெரியார் மாபெரும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்; ஒப்பற்ற போராட்ட வீரர்; தமிழக வரலாற்றை மாற்றியமைத்தவர்; அத்தகைய மாபெரும் தலைவரின் எழுத்துகளை ஒரு தனி மனிதர் கோரும் பதிப்புரிமைக்குள் முடக்கிவிடக் கூடாது. பெரியாரின் எழுத்துகள் - பதிப்புரிமை கோரக் கூடிய விற்பனைச் சொத்து அல்ல. பெரியாரின் சிந்தனைகள் விற்பனைப் பொருள் அல்ல; அவை சிந்தனையை விதைப்பவை.
மாபெரும் சிந்தனையாளர்களின் தத்துவங்களுக்கும், கொள்கைகளுக்கும் பதிப்புரிமை சட்டங்களை விரிவாக்க முடியாது. பெரியாரின் எழுத்துக்களை தேசத்தின் சொத்துக்களாகவே கருத வேண்டுமே தவிர, மனுதாரர் கோருவதுபோல், பெட்டிகளில் வைத்து பூட்டிவிடக் கூடாது. மனுதாரர் கூறுவது போல், எங்கள் கட்சிக்காரர், பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருவது உண்மை தான். காரணம், மனுதாரரான கி.வீரமணி, பெரியார் கொள்கைகளிலிருந்து வெகுதூரம் விலகிப் போய், பெரியார் கொள்கைகளை சிதைக்கவும் தொடங்கிவிட்டார். அதன் காரணமாகவே பெரியார் திராவிடர் கழகத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் நேர்ந்தது. எங்களது கட்சிக்காரர் போன்ற உண்மையாகவே பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுவோர்தான், பெரியாரின் தத்துவங்களை, சிந்தனைகளை பதிப்பித்து, பரப்புவதற்கான உரிமை பெற்றவர்கள். பெரியாரே தனது எழுத்துக்களுக்கு பதிப்புரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடிஅரசு, ஜஸ்டிஸ், ரிவோல்ட், மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகியவற்றிலிருந்து பெரியார் எழுத்து, பேச்சுகளைத் திரட்டுவதற்கு கடுமையான முயற்சிகளை எடுத்ததாக மனுதாரர் கி.வீரமணி கூறுவதில் கொஞ்சம்கூட உண்மை கிடையாது. உண்மையில் குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி பத்திரிகைகளின் பல பிரதிகளே மனுதாரரிடம் கிடையாது. மனுதாரருக்கு பெரியார் எழுத்தில் பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது என்பதற்கு இதுவே போதுமானது. எங்களது கட்சிக்காரரிடம் இருப்பதுபோலவே, மனுதாரரிடமும் சில ‘குடிஅரசு’ பிரதிகள் இருக்கலாம். அதன் காரணமாகவே அவர் பதிப்புரிமை கோரிவிட முடியாது. மனுதாரரின் திருச்சியிள்ள அலுவலகத்திலிருந்து எங்கள் கட்சிக்காரர் ‘குடிஅரசு’ பிரதிகளை தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டதாக மனுதாரர் கூறுவது உண்மையல்ல. தஞ்சை பகுத்தறிவாளர்களை குடிஅரசு தொகுப்புக்கு தமது அறக்கட்டளை நியமித்ததாக மனுதாரர் கூறுவதும் உண்மையல்ல. குடிஅரசு குறுந்தகடுகளும் மனுதாரரிடம் கிடையாது. நாங்கள் லாபத்துக்கு ‘குடிஅரசு’களை விற்பதாகக் கூறுவதும் உண்மையல்ல. பல லட்சம் ரூபாய் இழப்பில் தான் நாங்கள் பெரியார் எழுத்துக்களை வெளியிடுகிறோம். மனுதாரரிடமிருந்து ஒரு சிறு துண்டுக் காகிதத்தைக்கூட நாங்கள் எடுக்க வில்லை. மனுதாரரிடமே பெரியாரின் எழுத்துகள் முழுமையாக இல்லாதபோது, அவரிடமிருந்து நாங்கள் ‘திருடிச் சென்று விட்டோம்’ என்ற கேள்விக்கே இடமில்லை.
பெரியார் எழுத்துகள் அனைத்துமே, திருச்சி யில் மணியம்மை மேல்நிலைப் பள்ளியில் திரட்டப்பட்டதிலிருந்து தான் தொகுத்தோம் என்று நாங்கள் எந்த ஒப்புதலும் தரவும் இல்லை.பெரியார் எழுத்துகளை பதிப்பிப் பதால், தனக்கு பாதிப்பு ஏற்பட் டுள்ளதாக சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி கூறுகிறார். பெரியார் எழுத்துகள் மக்களிடம் சென்றடையக் கூடாது என்றும், எவருமே பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூடாது என்றும் மனுதாரர் கருதுகிறாரா என்பது புரியவில்லை. பெரியார் எழுத்துகளைப் படிக்கும் போதுதான் பெரியாரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியுமே தவிர, மனுதாரரும் அவரது குழுவினரும் தயாரித்த பெரியார் சினிமாவிலிருந்து பெரியாரை புரிந்து கொள்ள முடியாது.
மனுதாரர் கி. வீரமணி தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அவர் கூறும் பொருளாதார இழப்பு, நாங்கள் பெரியார் எழுத்துக்களை வெளியிடுவதால் நிகழ்ந்துள்ளதா? அல்லது பெரியார் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதால், மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை, மனுதாரர் தெளிவுபடுத்தவில்லை.மனுதாரரும், அவரது சகாக்களும் பெரியார் எழுத்துகளுக்கு உரிமை படைத்தவர்கள் அல்ல. எனவே நீதிமன்றம் தடை ஆணையை பிறப்பிக்கக் கூடாது. மனுதாரர் விரும்பினால் எங்களது அடிச்சுவட்டைப் பின்பற்றி, அவரும் பெரியார் எழுத்து பேச்சுகளை தாராளமாக வெளியிடலாம். பொருளாதாரம், அரசியல், சமுதாயம் அல்லது மதம் தொடர்பான கட்டுரைகளை செய்தி ஏடுகள், பத்திரிகைகளிலிருந்து மறு பதிப்பு செய்வது, பதிப்பு உரிமைகளில் தலையிடுவது ஆகாது. கட்டுரைகளை எழுதிய ஆசிரியர், அதற்கு வெளிப்படையாக பதிப்புரிமை பெற்றிருந்தால் மட்டுமே வெளியிட முடியாது. எனவே பெரியாரின் எழுத்து பேச்சுகளை மறுபதிப்பு செய்வது - பதிப்புரிமை சட்டத்தின் கீழ் வராது. பெரியாரின் எழுத்துகளை மட்டும் மறுபதிப்பு செய்யவில்லை. பொது மக்களிடம் அவர் பேசிய பேச்சுகளும் மறுபதிப்பு செய்யப்படுகிறது. இத்தகைய பேச்சுகளை மறுபதிப்பு செய்வது, பதிப்புரிமையில் குறுக்கிடுவது ஆகாது. எனவே இந்த நீதிமன்றம் மனுதாரரின் மனுவை நிராகரித்து நீதி வழங்கக் கோருகிறோம்.
இதேபோல் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள வேறு சில தகவல்கள்:
1. 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் 17வது பிரிவின்படி பதிப்புரிமையை வழங்குவோர் வழங்கப்படுவோருக்கு கட்டாயமாக அதை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும். மனுதாரர் அறக்கட்டளை விதிகளில் அப்படி பதிப்புரிமை வழங்கியதற்கான பிரிவுகள் ஏதுமில்லை.
2. அறக்கட்டளை விதிகளின்படியே பதிப்புரிமை உண்டு என்று வாதிட முடியாது. காரணம் விலைக்கு வாங்கப்பட்ட சொத்துக்களுக்கு மட்டும் தான் அறக்கட்டளையே ஏற்படுத்தப் பட்டிருப்பதாகவே விதிகள் கூறுகின்றன. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் விலை கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல. அவை பெரியாரால் படைக்கப்பட்டவை. வாங்கப்பட்ட பொருளுக்காக பெரியார் உருவாக்கிய அறக்கட்டளையின் விதி 22 - பெரியாரால் படைக்கப்பட்ட அவரது எழுத்து - பேச்சுகளுக்குப் பொருந்தாது. சமூகநீதி, பெண்ணுரிமை என்று மக்களின் சமத்துவத்துக்காகப் போராடிய புரட்சிகரமான தலைவர் பெரியார்; அத்தகைய ஒரு தலைவர் தனது எழுத்துகளை தனக்காகவோ, தனது அறக்கட்டளைக்காகவோ வியாபாரமாக்க முயற்சிக்கவில்லை. அவரது வாழ்நாளில் தனது எழுத்துகளுக்காக அவர் எந்த ‘ராயல்டியும்’ பெற்றது இல்லை. தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.
3. பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தனக்கே உரியது என்பதை நிரூபிக்க மனுதாரரி டம் எந்த சான்றும் இல்லை. இதில் மிக மோசமாக அவர் தோல்வியடைந்திருக்கிறார். இந்த உரிமை கோருவதற்கே தொடர்பில்லாத வராக (Stranger) - அந்நியராக அவர் இருக்கிறார். தனக்குத்தான் பதிப்புரிமை உண்டு என்பதற்கு எந்த ஆவணமும் மனுதாரர் சமர்ப்பிக்காத நிலையில் நீதிமன்றம் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
4. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் ஏற்கனவே மக்களின் சொத்தாகிவிட்டது. ஏற்கனவே பல்வேறு பதிப்பகங்கள் - பெரியார் நூல்களை வெளியிட்டுவிட்டன. மனுதாரர் கடந்த காலங்களில் இந்த வெளியீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு கூட தனிப்பட்ட பகைமையினால் தான் மனுதாரர் தொடுத் துள்ளாரே தவிர, அவர் கூறுவதுபோல் பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரி அல்ல.
5. மனுதாரர் கூறுவதுபோல் - பெரியார், பெண் களின் முன்னேற்றத்துக்கு மட்டும் பாடுபட்டவர் அல்ல; ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக் காகவும் அவர் பாடுபட்டுள்ளார். மனுதாரருக்கு பெரியாரின் அடிப்படை தத்துவமே தெரிய வில்லை. யுனெ°கோ நிறுவனம் வழங்கிய விருதும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ பாடலுமே, பெரியார் ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக்குப் போராடியதை உணர்த்து கின்றன.
6. பெரியாரின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் அவரது எழுத்துகளைப் பரப்பும் உரிமை உண்டு. பெரியாரின் தத்துவங்களை தனிநபர்களிடமோ, அல்லது நிறுவனங்களிடமோ முடக்கிவிட முடியாது. ஏதோ சில - பெரியாரின் எழுத்துகளை, மனுதாரர் சேகரித்து வைத்திருப்பதாலேயே பெரியார் சிந்தனைகளுக்கு அவர் பதிப்புரிமை கோரிவிட முடியாது. வேண்டுமானால் எங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவர் பெரியார் சிந்தனைகளை தாராளமாக வெளியிடட்டும்.
7. நூற்றுக்கணக்கில் அச்சடித்து பத்திரிகைகள் வெளி வந்த பிறகு, அதன் பிரதிகள் எல்லோரி டமும் போய் விடுகிறது. இந்த நிலையில் தன்னிடம் இருப்பது மட்டுமே ‘ஒரிஜினல்’ என்று மனுதாரர் எப்படி உரிமை கோருகிறார் என்பது தான் புரியவில்லை. பெரியார் பத்திரிகை அவரது தொண்டர்கள் பலரிடம் இருக்கிறது. உண்மையில் மனுதாரரிடம் தான் பெரியாரின் பல பத்திரிகைள் இல்லை.
பெரியார் எதிரிகள் யார்?

பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார். கரிவரதசாமி போன்றோரும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். ஆசிரியராக இருந்த பெரியார், சட்டப்படியான உரிமை வழங்கும் வெளியீட்டாளர் உரிமையை தம்மிடம் வைத்துக் கொண்டது இல்லை. இதை பதில் மனுவில் நாம் சுட்டிக்காட்டி யிருப்பதை கேலி செய்கிறது ‘விடுதலை’! பெரியாருக்கு நம்மை எதிரானவர்களாக தங்களது கழகத்தினரிடையே சித்தரிக்க முயற்சி செய்கிறது; அதெல்லாம் இருக்கட்டும்!
பெரியாரின் நூல்களை தாங்கள் மட்டுமே வெளியிட வேண்டும்; பெரியார் திராவிடர் கழகம் வெளியிட தடை போட வேண்டும்; 15 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று வழக்கு தொடுப்பவர்கள் பெரியாரின் எதிரிகளா?
அல்லது - பெரியாரின் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு தடைகளைக் கடந்து களத்தில் நிற்கும், பெரியார் திராவிடர் கழகம் பெரியாருக்கு எதிரியா?
இதுதான் இப்போது மக்கள் மன்றத்தின் முன் உள்ள கேள்வி!வழக்கு மனுவில் தன்னை ‘இந்து’ என்ற அடையாளத்தோடு, மனுதாக்கல் செய்து கொண்ட “தமிழர் தலைவர்” பெரியாருக்கு உரிமை கொண்டாடுவதை தமிழர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கி.வீரமணிக்கு ஆதரவாக தஞ்சை ரத்தினகிரி உயர்நீதிமன்றத்தில் மனு
‘குடி அரசு’ பத்திரிகையை வெளியிடும் உரிமை கி.வீரமணிக்கு மட்டுமே உண்டு என்றும், திருச்சியில் 1983 இல் ‘குடிஅரசு’ பத்திரிகைகளிலிருந்து பெரியார் எழுத்து பேச்சுகளைத் தொகுத்து, தமது தலைமையிலான குழு வீரமணியிடம் ஒப்படைத்துவிட்டது என்றும், எனவே கி.வீரமணி தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு தஞ்சை இரத்தினகிரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரும் தன்னை ‘இந்து’ என்றே கூறியுள்ளார்.

பெரியாரை திரிப்பது யார்? (1)
பெரியார் எழுத்து பேச்சுகளை கி.வீரமணியின் நிறுவனம் மட்டுமே வெளியிட வேண்டும் என்றும்; கருத்துச் சிதைவு இல்லாமல் பெரியாரை அவர் ஒருவரால் மட்டுமே படம் பிடிக்க முடியும் என்றும் திராவிடர் கழக எழுத்தாளர்கள் வண்டி வண்டியாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பெரியார் கருத்துகளை சிதைப்பவர்களில் பெரியாரின் எதிரிகளைவிட கி.வீரமணியே முன்னணியில் இருக்கிறார் என்பது, வேதனையான உண்மை. கி.வீரமணி - பெரியார் கருத்துகளை திரித்ததற்கு சில சான்றுகளை இங்கே முன் வைக்கிறோம். கி.வீரமணியானாலும் சரி, அவரது தொண்டரடிப் பொடிகள் ஆனாலும் சரி, அவரது அரசவை எழுத்துப் புலவர்களானாலும் சரி, எல்லோருக்குமே அறைகூவல் விடுக்கிறோம்; இவைகளை - மறுக்க முடியுமா?
13.12.2000 அன்று தஞ்சையை அடுத்த வல்லத்தில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூடி கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.“தந்தை பெரியார் காலத்திலேயே திராவிடர் கழகம் பிரிவினை இயக்கம் அல்ல என அறிவிக்கப்பட்டது” என்பது தீர்மானம்.இது உண்மை தானா?
• பெரியார் தனது இறுதிப் பேருரையிலேயே தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தினார்.
• பெரியார் மறைவுக்கு முன் 1.10.73, 2.10.73 ‘விடுதலை’ நாளேடுகளில் பிரிவினையை வலியுறுத்தி எழுதினார்.
• “சுதந்திரத் தமிழ்நாடு பெற தூக்குமேடையும் ஏறுவோம் கி.வீரமணி முழக்கம்” என்ற தலைப்பில் கி.வீரமணி பேச்சு 3.10.1973 ‘விடுதலை’ நாளேட்டில் வெளி வந்தது.
• 14.11.1973 இல் ‘விடுதலை’யில் வெளிவந்த ‘கழகமும் பிரிவினையும்’ என்ற கட்டுரை “திராவிடர் கழகத்தின் வரலாற்றில் இரண்டறக் கலந்து விட்ட கொள்கையே நாட்டுப் பிரிவினை என்பது வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரியும்” என்று குறிப்பிட்டது.
பெரியார் 24.12.73 இல் முடிவெய்தினார். அதற்கு முன்பு சுமார் ஒரு மாத காலத்துக்குள் எழுதியவற்றை மட்டுமே மேலே சுட்டிக்காட்டியுள்ளோம்.‘விடுதலை’ நாளேட்டில் இதழின் முகப்பில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் பெரியார் காலத்திலும் பெரியார் மறைந்த பிறகும்கூட இடம் பெற்றிருந்தது. பெரியார் மறைவுக்குப் பிறகு ‘அவசர நிலை’ காலத்தில்தான் அது நீக்கப்பட்டது.
இவ்வளவுக்கும் பிறகு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் தந்தை பெரியார் காலத்திலேயே “திராவிடர் கழகம் பிரிவினை இயக்கம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுவிட்டது” என்று கி.வீரமணி தலைமையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு தீர்மானம் போடுவது பெரியாரைத் திரிப்பதா? இல்லையா?
“பெரியார் வலியுறுத்திய பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம்” என்று தீர்மானம் போட்டுக் கொள்ளட்டும். அது கி. வீரமணியின் உரிமை. ஆனால், பெரியாரே பிரிவினையை கைவிட்டார் என்று தனது முடிவை பெரியார் மீது ஏற்றிச் சொல்வதற்கு பெயர் என்ன?பதில் வருமா?
(‘புரட்டுகள் உடைப்பு’ தொடரும்)

பெரியாரின் நூல்களை நாட்டுடமையாக்கு! பொள்ளாச்சி, விழுப்புரத்தில் கழக ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியாரின் எழுத்தையும், பேச்சையும் நிறுவனங்களுக்குள் முடக்க நினைக்கும் கி.வீரமணியைக் கண்டித்தும், பெரியாரின் அறிவுசார் சொத்துடைமையை நாட்டுடமை ஆக்க வலியுறுத்தியும், 25.8.2008 திங்கள் மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலாளர் வே. வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் ருக்மணி முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர் பேரவை அமைப்பாளர்கள் இரா. மோகன், சி. விசயராகவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர்கள் காசு. நாகராசன், தா. இராசேந்திரன், கலை. இராசேந்திரன், அரிதாசு, சம்பத், சின்னு, யாழ் மணி, சபரி, கண்ணன், பழ. முருகானந்தம், இராமகிருட்டிணன், மு. பிரபா கரன், த. மணி, “தீமிதி” கதிர், சுரேசு, மணிமொழி, கணேசு, அப்பாதுரை, சரவணன் மற்றும் தமிழ் இளைஞர் பொது நல மன்றம் அ. ராசுகுமார், சாகுல், சாரணாத் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 30.8.08 காலை 11 மணியளவில் பெரியார் திடலுக்குள் பெரியாரை முடக்கும் சதியை முறியடிப் போம்; பெரியார் நூல்களை தமிழக அரசே அரசுடைமை யாக்குக என்று கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் ந. அய்யனார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி. ஆசைத்தம்பி, சி. சாமி துரை முன்னிலை வகிக்க, வெ. அமிர்தலிங்கம், நல்லத்தம்பி, வழக்கறிஞர் ப. கண்ணன், மு.வ. நடராசன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை குறித்து கருத்துரை வழங்கினர். மு.வ. செல்வராசு, செ. பிரபு, அ. முருகன், இளையராசா, விழுப்புரம் கணேசன், ச. பெரியார் வெங்கட், அல்லி முத்து, கல்லை செந்தில் உட்பட ஏராளமான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

வெளிமாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தடைகழகம் நடத்திய போராட்டம் வெற்றி
தமிழகத்திலிருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான டன் மணல் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப் பட்டு வந்தது. தண்ணீர் கொடுக்காத மலையாளிகளுக்கு தமிழ்நாட்டு மணலைக் கொடுக்க அனுமதியோம் என்ற முழக்கத்தோடு பொள்ளாச்சி பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 6.8.2008 அன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். அதைத் தொடர்ந்து கடந்த 22, 23 ஆகிய இரு நாள்களும் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் ‘பறி போகும் தமிழர் உரிமைகள்’ என்கிற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப் பட்டன. தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி. வேலுச்சாமி, பகுத்தறிவாளர் பேரவை அமைப்பாளர்கள் இரா. மோகன், சி. விசயராகவன், பொள் ளாச்சி நகர கழகச் செயலாளர் வே. வெள்ளிங்கிரி, வட்ட செயலாளர் காசு. நாகராசன், ஒன்றியத் துணைச் செய லாளர் சம்பத் ஆகியோர் மணல் கடத் தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவான பிரச்சாரம் செய்தனர். அதில் மணல் கடத்தலை உடனடியாக தடை செய்யாவிட்டால் அடுத்ததாக எல்லை தாண்டும் மணல் லாரி களை பெரியார் திராவிடர் கழகம் சிறை பிடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இரண்டு நாள் பிரச் சாரக் கூட்டங்களிலும் ஏராளமான பொது மக்கள், விவசாயத் தொழி லாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கழகத்தின் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த அன்றே வேலூரில் முந்நூறுக்கும் மேற்பட்ட மணல் லாரிகளை பொது மக்கள் சிறை பிடித்த செய்தியும் வெளியானது. நாடு முழுவதும் மணல் கடத்தலுக்கு எதிரான ஓர் அலை பெரியளவில் எழுந்தது.கழகப் பிரச்சாரம் நடந்து முடிந்த இரண்டாம் நாளே தமிழக அரசு வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தடை விதித்தது. இது கழகம் எடுத்த தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக பொள்ளாச்சி, எல்லை பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

நாட்டுடைமையாக்கிட குரல் கொடுத்தோர்!
பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று இதுவரை குரல் கொடுத்த தலைவர்கள் :
1. மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன்2. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்3. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு4. மதுரை ஆதினகர்த்தர்.

சென்னை சிந்தனை வட்டம்
14.9.2008 ஞாயிறு மாலை 6 மணியளவில் சென்னை தலைமை கழக அலுவலகத்தில் ‘சுயமரி யாதை இயக்க வீராங்கனைகள்’ நூல் மதிப்பீடு எனும் தலைப்பில் வழக்கறிஞர் சு. குமாரதேவன் உரையாற்றினார். நா. தினகரன் வர வேற்க, அன்பு தனசேகரன் நன்றி கூறினார். 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: